என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை.
- ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை. எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- எது எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது ஆகும்.
- ஏற்கனவே வாடிக்கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது ஆகும்.
நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள். நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க அரசு நினைத்தால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் உழவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது. அது ஏற்கனவே வாடிக்கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டும்.
நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்டவற்றுக்கு வரியும், கட்டணமும் விதிப்பதற்கான முயற்சிகள் கடந்த 15 ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் 2012-ஆம் ஆண்டில் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டது. அப்போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 2018, 2022 ஆகிய ஆண்டுகளிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றது. ஒவ்வொரு முறை மத்திய அரசு இந்த முயற்சிகளில் ஈடுபட்ட போதும் அதை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக எதிர்த்தது. இனியும் இதே நிலையே தொடரும்.
விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து, மூச்சு உள்ளவரை தான் என் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் ராமதாஸ் கூறி வருகிறார். அன்புமணி தலைவரான பிறகு அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்று நேற்று ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என தெரிவித்த போதிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அன்புமணி போட்டியிட்டார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார்.
மேலும் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டியில், கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான். கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
ராமதாசின் நகர்வுகளை உற்றுநோக்கும் அரசியல் நோக்கர்கள் சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என வினவி வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பா.ம.க. நிறுவனரான ராமதாஸை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாசும், செல்வப்பெருந்தகையும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.
- ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும்.
சென்னை:
கால்நடை மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் என்.சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், அதிக பால்தரும் புதிய கலப்பின மாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழகத்தில் பால் மற்றும் கடல் சாா்ந்த உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் சூழல் பெரும்பாலும் வர வாய்ப்பில்லை. கால்நடை பராமரிப்பு சாா்ந்த மாணவர்களின் புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவிகள் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
தினசரி காய்கறி விலைகளைத் தெரிந்து கொள்வதைப்போல இறைச்சி வகைகளின் விலைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில், 'இறைச்சி விலை பலகை' என்ற ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பல்வேறு சந்தைகளில் கால்நடைகளின் சந்தை விலை மற்றும் இருப்பு நிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் வா்த்தகம் மேற்கொள்ள முடியும்.
மேலும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும். இதன்மூலம் விலை ஏற்றத் தாழ்வுகளை தவிா்ப்பதோடு, சந்தையில் நியாயமான விலையை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
- பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில்,
* நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை, படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
* பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம்.
* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
* சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது.
* படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
* பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
* மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
* பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
* மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது.
- சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் இதுவரை பணி செய்த ஆண்டுகளை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
- கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
புதுக்கோட்டை:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அதிமுக- பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், 'தினத்தந்தி' நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.
அமித்ஷாவின் இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
- மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது.
- தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர் விளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதி யிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.பெருஞ்சாணி அணை இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.45 அடியாக உள்ளது.
அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 131 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 45.93 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.2 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோழிப்போர்விளை 105.8, மயிலாடி 92.4, ஆணைக்கிடங்கு 84.2, மாம்பழத்துறையாறு 78, நாகர்கோவில் 74.4, தக்கலை 72, அடையாமடை 52, குருந்தன்கோடு 26, கொட்டாரம் 62.8, கன்னிமார் 18.6, ஆரல்வாய்மொழி 6, பூதப்பாண்டி 26.2, முக்கடல் 24, பாலமோர் 33.6, இரணியல் 16, களியல் 16, குழித்துறை 63.4, பேச்சிப்பாறை 19.6, பெருஞ்சாணி 29.6, புத்தன்அணை 29, சுருளோடு 36.2, திற்பரப்பு 34.6, முள்ளங்கினாவிளை 38.2.
தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது.
- எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
- 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* உலகளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு உடன் பணியாற்ற விரும்புகின்றனர்.
* ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழ் இருக்கையை அமைத்தவர் கலைஞர்.
* படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம்.
* எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
* எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.
* 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
* சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.
* சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டது.
* 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
* நூல் உரிமைத்தொகை இல்லாமல் கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- மாணவர்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படத்தை மாணவர்கள் உயர்த்திக்காட்டிய சம்பவம் அரங்கேறியது.
முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர். சோதனை முறையாக இருந்திருந்தால் த.வெ.க. கொடி கொண்டு சென்றது தடுக்கப்பட்டிருக்கும்.
இதனால், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து த.வெ.க கொடியை உயர்த்திக் காட்டிய மாணவர்களை உடனடியாக அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இதையடுத்து, கடும் சோதனை நடக்கும் இடத்தில் த.வெ.க கொடியுடன் மாணவர்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த மாணவர்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
- வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
- ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
* வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
* கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி.
* தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்விற்காக ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம்.
* ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
* செங்கோலை யாரும் பறித்து விடலாம் ஆனால் எனது எழுதுகோலை யாரும் பறிக்க முடியாது என கூறினார் கலைஞர் கருணாநிதி.
* 5 முறை தமிழக முதலமைச்சர், 50 ஆண்டுகள் தமிழ் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
- பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான 2 அணிகளுக்கான மோதலாக தான் அமையும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. இருப்பதால் அதனை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் செயல் திட்டம். இதை அ.தி.மு.க.வினர் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
எங்களுக்கு சீட்டு குறைவது பிரச்சனை இல்லை. நாங்கள் ஆண்ட கட்சியும் கிடையாது. ஆனால் ஆண்ட கட்சி 75 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் கட்சி. தேய்மானம் அடைவதற்கு அ.தி.மு.க. உடன்படுகிறதா?
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். அண்ணா, பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவர்களுடன் பயணிப்பது தற்கொலைக்கு சமம்.
பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் பெரியார் குறித்து சர்ச்சை வீடியோவுக்கு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். பெரியாரை விமர்சித்த பின்னர் விஜய் அமைதியாக இருப்பது ஏன்?
திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதர்ச்சியான ஒன்று. தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க தனி உளவு பிரிவு இருந்தாலும் அதனை தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை பா.ஜ.க. மட்டுமே இருக்கிறது. அந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என்ற ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். எங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம். இதை கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். காரணம் எங்கள் தொண்டர் களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம். தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிலர் தொடர்ந்து இதைக் கேட்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






