என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது - கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு
- மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது.
- தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர் விளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதி யிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.பெருஞ்சாணி அணை இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.45 அடியாக உள்ளது.
அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 131 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 45.93 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.2 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோழிப்போர்விளை 105.8, மயிலாடி 92.4, ஆணைக்கிடங்கு 84.2, மாம்பழத்துறையாறு 78, நாகர்கோவில் 74.4, தக்கலை 72, அடையாமடை 52, குருந்தன்கோடு 26, கொட்டாரம் 62.8, கன்னிமார் 18.6, ஆரல்வாய்மொழி 6, பூதப்பாண்டி 26.2, முக்கடல் 24, பாலமோர் 33.6, இரணியல் 16, களியல் 16, குழித்துறை 63.4, பேச்சிப்பாறை 19.6, பெருஞ்சாணி 29.6, புத்தன்அணை 29, சுருளோடு 36.2, திற்பரப்பு 34.6, முள்ளங்கினாவிளை 38.2.
தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது.






