என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
- கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தே.மு.தி.க. கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.
இதன்பின் செய்தியாளளை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "உள்ளம் தேடி இல்ல நாடி" என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 2-ம் கட்ட பயணம் நாளை (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது.
எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தே.மு.தி.க. சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக, தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
- வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
சென்னை:
பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். அதாவது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் இந்த நிகழ்வு சாத்தியம் ஆகிறது. இந்த சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி தினத்தன்று மட்டுமே நிகழும்.
அதன்படி, வருகிற 7-ந் தேதி இந்த நிகழ்வு நடக்கிறது. அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும்.
அவ்வாறு சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது, சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது.
அந்த வகையில் 7-ந் தேதி இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 11.01 மணிக்கு ஆரம்பிக்கிறது. முழு கிரகணத்தை நள்ளிரவு 11.42 மணிக்கு பார்க்க முடியும். அதன் பின்னர், 12.23 மணிக்கு முழு கிரகணமும், அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணமும் முடிந்து, அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியைவிட்டு வெளியேறும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதை பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
- நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.
- நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
- பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்). 05/09/2025 (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும்.
04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திலையில், 03/09/2025 அன்று 17,832 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.trstein மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
- 13 ரெயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
13 ரெயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது.
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா?
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இண்டி கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இண்டி கூட்டணியினர் பிஹாரில் நடத்திய கூட்டத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றியும் அவரது தாயார் குறித்தும் முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன?
பூவலகத்திலிருந்து மறைந்தவர்களைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் நம் தாய்த்திருநாட்டில் தொன்று தொட்டு இருக்கும் வேளையில், மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா? வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இண்டி கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா?
தற்போது வரை இதற்கு இண்டி கூட்டணித் தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்காதது, பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களை இழிவுபடுத்துவதில் தவறில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
மாண்புமிகு பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இண்டி கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுகவினரின் ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார் பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி.
அதிலும், "எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்" என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு. திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை
பாஜக உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது!
மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று (03-09-2025) காலை 05.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 08.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை முதல் 09-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரம் இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 7-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட்.
- ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து.
விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்த மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், விடுதியின் சுவர்களில் ஜெய் பீம் என்று எழுதியதாக கூறி அந்நிறுவனம் இரண்டாம் இரண்டாம் ஆண்டு படிக்கும் அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகிய 3 மாணவர்களை இடைநீக்கம் செய்தது.
இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், 3 மாணவர்களை இடைநீக்கம் செய்த ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் சஸ்பெண்ட் உத்தரவு உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்டுள்ளதான வாதத்தை ஏற்றும், மாணவர்களின் நடத்தையில் குறைபாடு இருந்தாலும் மற்ற சூழ்நிலைகளை கருதியும் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு தெரிவித்தது.
- 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகந்தி, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களில் புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறுகிய கால அவகாசத்தில் அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் நடத்தப்படுவதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
- வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
- போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.
வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.
போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






