என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.
    • அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களின் மன நிலையை அப்போது பிரதிபலிப்பேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை விமர்சனம் செய்து பேசுவார் என்பது அனைவரது மனதிலும் தோன்றியுள்ளது. ஆனால் அந்த விமர்சனம் எத்தகைய தன்மைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    இந்த அதிரடி உருவானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. முகமாக பார்க்கப்படும் செங்கோட்டைய னுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது.

    அ.தி.மு.க. மூத்த தலைவராக இருந்த போதிலும் தன்னை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு புறக்கணிப்பதாக செங்கோட்டையன் அதிருப்தியுடன் இருந்து வருகிறார். பல தடவை தன்னை ஓரங்கட்டி விட்டதாகவும் அவர் நினைத்ததுண்டு.

    ஆனால் கட்சிக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்ட போதெல்லாம் இந்த கருத்தை செங்கோட்டையன் அழுத்தமாக கூறினார். கடந்த ஆண்டு அ.தி.மு.க.வின் 6 மூத்த தலைவர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி ஆலோசித்தனர்.

    அப்போது முதல் இப்போது வரை ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். இது செங்கோட்டையனுக்கு மிகுந்த அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட போது செங்கோட்டையனை மாவட்ட செயலாளர் என்ற முறையில் கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டார். இது தன்னை அவமரியாதை செய்வதுபோல இருப்பதாக செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களிடம் குமுறலை வெளிப்படுத்தினார்.

    இதன் தொடர்ச்சியாகத்தான் அவர் அத்திகடவு, அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதுபோல சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் புதிய பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அப்போது ஈரோடு மாவட்ட ஐ.டி. பிரிவு செயலாளர் ஏ.வி.எம். செந்திலுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் செங்கோட்டையனின் அதிருப்தி சமீபத்தில் மேலும் அதிகரித்தது. அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    இதன் எதிரரொலியாகத் தான் நாளை நிருபர்களை சந்தித்து தனது குமுறல்களை கொட்டித் தீர்க்க இருப்பதாக தெரிகிறது. இது அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்துமா? அல்லது புஸ்வானமாகுமா? என்று ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிா்வாகக்குழுக் கூட்டம் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவத் தலைவா் ஜி.கே. மணி, பொதுச்செயலாளா் முரளி சங்கா், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள் மொழி, பா.ம.க. நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஸ்ரீகாந்தி, எம்.கே. ஸ்டாலின் உள்பட 20 போ் பங்கேற்றனா்.

    இக்கூட்டத்துக்குப் பின்னா் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி, கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாகவே 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தி, அன்புமணி மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளோம். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதமும் கட்சியின் பொதுச்செயலா் வழியாக அன்புமணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    இந்தக் கடிதத்துக்கும் அவா் உரிய காலத்துக்குள் பதிலளிக்காவிடில் நிர்வாகக் குழுவின் முடிவின் படி, அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் டாக்டர் அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்த கடிதத்துக்கும் பதில் அளிக்க கூடாது என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    பதில் சொல்லாமல் தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து அதையே டாக்டர் ராமதாசுக்கு பதிலாக தெரிவிக்கவும் அன்புமணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பா.ம.க. விவகாரம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மாறும்.

    அந்த சமயத்தில் சட்ட ரீதியாக அனைத்து சவால்களையும் சந்திக்கலாம் என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.
    • சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.

    சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரிய மூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

    • ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன்.
    • ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு பார்வையோடு தலைமை தாங்கிய வழிநடத்திய பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் நன்றி.

    அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை, காப்பீடு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என கூறியுள்ளார். 




    • மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
    • மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது.

    சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர், தன் மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனுதாரர் தன் மனைவிக்கு ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.

    அவரது படிப்புக்கான செலவாக 2.77 லட்சம் ரூபாயை தர மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம் அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார் என மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
    • 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,

    ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.

    இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.

    இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.

    இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார்.
    • மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி.

    இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது.

    தொடர்ந்து அவர் தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்றபோது, அதில் காட்டப்பட்ட தொகையை கண்டு மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அதில் மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? என அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்குள் இந்த தவறு சரிசெய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும்.

    மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது.
    • திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

    சென்னை:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள டி.டி.வி. தினகரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

    டி.டி.வி. தினகரனின் முடிவு அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என நம்புகிறேன் வாழ்த்துகிறேன். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது. திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. அதுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

    • ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
    • கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுதல் செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று( 4-ந்தேதி) ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதை தொடர்ந்து அதிகாலை முதல் மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் திருவந்திபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நடந்தும் ஷேர் ஆட்டோக்களிலும் சென்றனர்.

    இதனால் திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இந்த நிலையில் கோவில் மண்டபத்தில் 105 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 130 திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாலையில் திரண்டதால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசலை உடனுக்குடனுக்குடன் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    • மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.
    • கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.

    இதை சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.

    மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என கூறியுள்ளார். 

    • இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-09-2025- ஒரு கிராம் ரூ.137

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கே.ஆர்.எஸ். அணையும், கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டன.

    இதில் கபினி அணை 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் நீர்வரத்து குறைந்து, தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 704 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 14 ஆயிரத்து 171 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

    கபினி அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 171 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழக காவிரியில் வினாடிக்கு 23 ஆயிரத்து 342 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ×