என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 090 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
- கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இதை கண்டித்தும், கப்பலூர் சுங்கச்சாவடியை உடனே அகற்ற வேண்டும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லாததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம், கப்பலூர் சிட்கோவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.
இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
- மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
- 2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார்.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி இருக்க கூடிய ஒரு நபர் நரேந்திர மோடி மட்டுமே. பிரதமருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. பலம் இருக்கிறது.
அந்த பொறுப்பில் இருந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். இத்தனை பிரதமர்கள் இருந்தாலும் மோடிக்கு என்று தனித்தன்மை இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறும். தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பு செய்துள்ளோம்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவரையும் மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு என்று எண்ணற்ற மாபெரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளது. வருடா வருடம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு உள்ளது.
கடந்த 10 ஆண்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.
பிரதமர் மோடி மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களின் வாழ்வை உயர்த்தி உள்ளார். நாடு நன்றாக இருப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.
சிலர் பிரதமர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தலைவரின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.
நாளையுடன் பிரசாரம் முடிய போகிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் இந்தியா கூட்டணி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க என்னோடு வாருங்கள் என்று அழைக்கிறார். உங்களிடம் இருந்தும், உங்கள் குடும்பத்திடம் இருந்தும் மக்களை காக்க தான் நாங்கள் வீதியில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் 21 இடங்களில் தான் தி.மு.க போட்டியிடுகிறது. 21 இடத்தில் நிற்கும் தி.மு.க. 543 பாராளுமன்ற தொகுதி உள்ள நாட்டில் எதனை போய் காப்பாற்ற போகிறார்கள்.
மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி உலகம் 3-வது உலக போரை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும், அதனுடைய தாக்கம் இந்தியாவில் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் என்பது உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது.
2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார். உலக தலைவனை இந்தியாவில் இருந்து நாம் அனுப்ப உள்ளோம். உலக பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா இருக்கும். நமது வளர்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.
- ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முசிறி பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.
இதற்காக கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு முசிறி அருகாமையில் உள்ள சிட்டிலரை பகுதிக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் முசிறி செல்கிறார். பின்னர் அங்குள்ள துறையூர் சாலை ரவுண்டானாவில் இருந்து பரிசல் துறை சாலை வரை நடைபெறும் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.
பின்னர் மாலை 6 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் முசிறியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரோடு ஷோ ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
- சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.
- சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை.
சிவகங்கை :
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. மேலும் ஆளும் கட்சி திமுக மீது எதிர்ப்பு நிலையில் தான் சிவகங்கை மக்களின் மன நிலை உள்ளது. ஜி.கே.வாசன், அமமுக போன்ற கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார். அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி என களம் இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்திரையிர் பட்டியல் பிரிவினர், உடையர், சிறுபான்மையினர் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் செட்டியார் சமூக வாக்குகள் இருக்கின்றன. "பாஜக-விற்கு கடந்த தேர்தலின்போது உட்கட்டமைப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த முறை தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பணியாட்களை அமர்த்தி வேலை செய்து வருகின்றனர். மேலும், "சிவகங்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவிற்கு கிடைக்கும்.
அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக காரைக்குடி பகுதிக்கு திட்டங்களை நகர்த்துவதால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை பின்தங்கிவிட்டது
இந்த முறை பிரதமர் மோடிக்கு எதிரான அலை என்பது பெரிய அளவில் இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் செயல்பாடு மோடி அரசின் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம், ரூ.6000 நிதி, குறைந்த விலையில் உரம் என விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பாஜகவின் வசமாக மாறியுள்ளது. மேலும் தேவநாதனின் பிரசார யுக்தி கிராமம் தோறும் வாக்குசேகரிப்பு குறிப்பாக யாதவர்களின் ஆதரவு என களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தி செல்கிறது.
- சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
- பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.
வேலூர்:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.
எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.

இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.
- ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
சென்னை:
தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது.
இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்கிறது.
- விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி.
- முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.
விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.
இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது. விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.
திராவிட மாடல் என்பது பெண்களுக்கானது. உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் எல்லாம் உங்களுக்கானது. ஆனால் பெண்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசா அல்லது விவசாயிகளை விரோதிகள் போல பார்க்கும் மத்திய அரசா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு மக்களுக்காக வேலை செய்யும் அரசு.
நாட்டுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே. இந்த பொய் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
- இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.
பழனி:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.
ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.
பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.
இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.
இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
- மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாஜக ஏன் வரவே கூடாது?
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.
தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.
புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.
மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!
பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக ஏன் வரவே கூடாது?
— M.K.Stalin (@mkstalin) April 16, 2024
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின்… pic.twitter.com/0T85eKZoEf






