search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellore constituency"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
    • விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.

    கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

    மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
    • சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

    அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

    இதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.



    இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.

    எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். #VelloreLSPolls #ACShanmugam
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

    அங்கு தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வந்த நிலையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் நண்பர்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடந்த சோதனையில் ரூ.11 கோடி சிக்கியது.

    இதையடுத்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி நடந்த ஓட்டுப்பதிவில் வேலூரை தவிர 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.



    வேலூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த தொகுதி தேர்தலை மே 19-ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஏ.சி. சண்முகம் இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். #VelloreLSPolls #ACShanmugam
    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    வேலூர்:

    காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.

    இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.

    தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
     
    ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

    பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். 

    ‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது.

    தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழங்கப்படாதவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. வருமான வரித்துறை அறிக்கையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். வேலூர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என வாதம் செய்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர்.

    இந்நிலையில், மாலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LokSabhaElections2019 #VelloreConstituency
    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன.

    ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை.

    தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணை போவது வெட்கக்கேடானதாகும்.

    துணை முதல்-அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்-அமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அ.தி.மு.க. வினரிடம் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-பா.ஜ.க. அணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரா.முத்தரசன்:-

    வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அதிகார துஷ்பிரயோக செயலில் அ.தி.மு.க.வும், பா. ஜனதாவும் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்:-

    தமிழக மக்கள் இந்த ஜனநாயக படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற அனைவருக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு வெற்றியை தேடி தந்து வேலூர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    வேட்பாளர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதாடினார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, அவரது கல்வி நிறுவனம் மற்றும் திமுக பிரமுகர் சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காண்பிக்கப்பட்டதாக கூறியுள்ள கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.



    இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார். ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    வேலூர் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    வேலூர்:

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை ஆதரித்து பிரசாரம் செய்தார். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.


    எங்கள் வெற்றி வாய்ப்பை தடுக்க பா.ஜ.க, அ.தி.மு.க வருமான வரித்துறையை பயன்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சட்டத்திற்கு புறம்பாக எங்களது வீடு, கல்லூரிகளில் சோதனை நடத்தினர்.

    வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.

    தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பெண்ணிடம் முதல்-அமைச்சர் பணம் கொடுப்பதை டிவியில் பார்த்தேன். அதை பற்றி கேட்க தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது.

    தேனியில் ரூ.2 ஆயிரம் கொடுத்ததை பார்த்தோம். இதுவும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எங்கள் மீது எவ்வித நேரடி குற்றசாட்டும் இல்லாமல், எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒரு சதி.

    தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.



    நாங்கள் வெற்றி பெற்றால் மோடி அரசும் போய்விடும். எடப்பாடி அரசும் போய்விடும். அ.தி.மு.க. மீதான குற்றசாட்டுகள் குறித்து மற்ற நடவடிக்கைகளை பிறகு பார்த்து கொள்ளலாம். வழக்கறிஞர்களிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Loksabhaelections2019 #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand
    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #EC #VelloreConstituency
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.

    மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.

    முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.

    அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

    இந்த விவகாரத்தில் நேற்று மதியம் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency

    ×