என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்
- மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
யூஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.
இந்த முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோர்ப்போம்.
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை.
திருச்சுழி:
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் என்றாலே கிடாய் வெட்டு, கறிவிருந்து மிகவும் பிரபலமானதாகும். குறிப்பாக கிராம கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்குவதும் ஆங்கேங்கே அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்ப்பாடி கிராமத்தில் ஸ்ரீ மந்தக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை யொட்டி பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப் பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய் களை தமிழ்ப்பாடி ஸ்ரீ மந்தக்குமார சுவாமிக்கு பலியிட்டு உணவாக சமைத்து காலை முதலே பக்தர்களுக்கு சுடச்சுட கிடாய் கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை. வயதான பெண்கள், குழந்தைகள் இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உண்டு பசியாறி சென்றனர்.
- விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகரநீர்முளை பகுதியில் உள்ள டீக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜாங்கம் (வயது 55) என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். கடையின் அருகில் கோவிந்தராஜ் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். இருவரும் விவசாயிகள்.
அதேவேளையில், கேரளாவில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கார் அகரநீர்முளை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டீ கடையின் அருகில் இருந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பாசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைஞாயிறு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.
இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-
தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க.
பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
- வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போல் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு சத்தி ரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 305 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரை சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
- சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் பலர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தன போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.
மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநில நிர்வாகிகள் ராஜன், சந்துரு, ராணி பகுதி செயலாளர்கள் முருகேஸ்வரன், ஜெய கோபால், அணி செயலாளர்கள் ரபீக், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிடிபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட வர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.
- காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
- போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சிவகிரி இந்திரா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 25). இவர் மற்றும் இவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக சிவகிரியில் இருந்து ராஜபாளையம் வந்திருந்தனர்.
இதையடுத்து மீண்டும் ஊருக்கு புறப்படும் முன்பாக ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிவகிரிக்கு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு காரில் புறப்பட்டனர். காரில் பயணித்த 4 பேருமே மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களது கார் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் ஊருக்குள் சென்றது. வழியெங்கும் சாலையின் இருபுறமும் அலசியவாறு தாறுமாறாகவே கார் சென்றது. இதற்கிடையே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கோவில் எனப்படும் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற ஜெய்கணேஷ் காருக்கு உள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்து பரிதாபமாக உயரிழந்தார். மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தேருக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வனராஜ், மகேஷ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பகுதியில் கெட்டுப்போன பலாப்பழங்கள் விற்கப்படுவதாக கடலூர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 500 கிலோ பலாப்பழங்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
அதனை தொடர்ந்து ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் குளிர்பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டா 5 கிலோ, சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 5 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன பழங்களை விற்ற 4 கடைகளுக்கும், குளிர்பதன நிலையில் வைத்து உணவு பொருட்களை விற்பனைசெய்த 2 ஓட்டல்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் மாம்பழ கடைகள் மற்றும் மாம்பழக் குடோன்களில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போன 25 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
- 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.
இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
- திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.
தஞ்சாவூா்:
தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர்-திருச்சி ரெயில் வழித்தடத்தில் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண்-16812) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூரில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறைக்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 4.45 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் புறப்படும்.
இதேபோல், திருச்சி-ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்-06809) திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, நாளை (திங்கட்கிழமை) மாலை 5.10 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.40 மணிக்கும் புறப்படும். 27-ந்தேதி பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் (வண்டி எண்-16844) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
- இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.
கோவை:
கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..
தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.
தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






