என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.

    அப்போது, "கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது. விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்க்கட்சி தலைவர் நாடகமாடுகிறார்.

    அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்கும் எடப்பாடி பழனிசாமி, நான் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது எதற்காக?

    திடீரென சிபிஐ மீது இபிஎஸ்க்கு எப்படி நம்பிக்கை வந்தது? சிபிசிஐடி மீது ஏன் அவர் சந்தேகப்படுகிறார்? காவல்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை களங்கப் படுத்துகிறார்.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறார்.

    1971 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வந்தது என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அக்காலகட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகளாவில் நடந்தது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெற்று வந்ததால் கள்ளச்சார்யா மரங்களை தடுப்பதற்காக மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆகவே வரலாறு தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    • பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    இப்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. பா.ஜ.க.வுடன் பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

    ஏற்கனவே இடஒதுக்கீடு அமல்படுத்தி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
    • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அலமேலுவின் மூத்த மகன் ஏழுமலை கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் நடேசனின் மகள் பவித்ரா (20) என்பவரை, ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இதில் பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன், ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதை அறிந்த அலமேலு 2 பேரையும் கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார். அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை கண்ட அலமேலு அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் 2 பேரும் வீட்டுக்கு சென்று அவரவர் வேலையை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அலமேலுவின் இளைய மகன் சேட்டு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடி வந்துள்ளார்.

    எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் மீண்டும் தனது நண்பர் ராஜேந்திரன் என்பவருடன் இரவு தனது தாயார் அலமேலுவை தேடி சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் காட்டு பகுதியில் ஓர் இடத்தில் தீ எரிவதைக் கண்ட சேட்டு மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன 2 பேரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவப் பகுதிக்கு சென்று ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கடந்த 22-ந் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாட முடியாத கள்ளக்காதலர்கள் நேற்று கொண்டாடிய பொழுது மாமியார்களிடம் சிக்கியதும். அதை மாமியார் அலமேலு கண்டித்தையும், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொன்று தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் சிங்காரப்பேட்டை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர்.மேலும் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் திருச்சி விமான நிலையம் பயணிகளின் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என விமான நிலைய இயக்குனர் மெயிலுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து தமிழக போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் அந்த செய்தி புரளி என தெரிய வந்தது

    இந்த நிலையில் இன்று காலை 10:35 மணி அளவில் திருச்சி விமான நிலைய இயக்குனரின் இமெயிலிற்கு திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் வெடி கொண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு சோதனை பிரிவினர் மற்றும் மோப்பநாய் பிரிவினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக திருச்சி விமான நிலையம் மற்றும் அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.
    • குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்கள். ஆனால் பல இடங்களில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை கூட தமிழக அரசு பறித்து விட்டது. இது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவோம்.

    மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை தேவை என்பதையும் கவர்னரிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க. குழுவினர் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்கள்.

    இந்த குழுவில் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கார்த்தியாயினி, ஆனந்தி பிரியா, முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி, திருப்பதி நாராயணன், ஏ.ஜி.சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டு பிடிக்க போவது இல்லை. அதனால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை. அதை கவர்னரிடம் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் துறை அமைச்சரோ, முதல்வரோ இன்னும் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. திராவிட மாடல் ஆட்சி மக்களை எப்படி மதிக்கிறது என்ப தற்கு இதுவே சாட்சி.

    குற்றவாளிகள் யார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை பாதுகாக்கவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மதிக்க வேண்டியதுதானே.

    குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தற்போது 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய ஆணையத்தின் இ-மெயில் முகவரிக்கு இன்று காலை வந்த தகவலில், சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வு அறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை, புரளி என்பது தெரிந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு தொலை பேசி மற்றும் இ-மெயிலில் மிரட்டல்கள் வந்தபடி உள்ளது. தற்போது 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும்.
    • பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு நாளை சந்திக்கிறது.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பாக பா.ஜனதா குழுவினர் இன்று கவர்னரை சந்தித்து இருந்தனர். மேலும் பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.

    • கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.

    அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    • கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    நாமக்கல்:

    சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில்,

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

    யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக குற்றம்சாட்டி அவரது தாயார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

    • வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
    • இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

    சென்னை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளதோடு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் தயாராகி உள்ளதா எனவும், தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

    மேலும், திருவண்ணாமலை கோவிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெறுவதாக கூறிய அவர், திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர் என்றும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளதோடு, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

    அதேபோல், கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கண்டித்தும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டதிற்கு வந்திருந்தவர்கள் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர். 

    • சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்கள் பெய்த சாரல் மழை காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 433 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 87.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 77.94 அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த 3 அணைகளிலும் தற்போதைய அளவை விட பாதிக்கும் கீழாகவே நீர் இருப்பு இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    இன்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது.

    குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. சிவகிரி பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இன்று காலை வரை ராமநதியில் 8 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 5.5 மில்லி மீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியை நெருங்கி உள்ளது. அடவிநயினார் அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.

    மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர்.

    ×