என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்ன வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 5-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதற்கிடையே நாளை முதல் 1-ந்தேதி வரை தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
    • வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.

    போடி:

    தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர். 

    • அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

    தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    • சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர்.
    • கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் ( வயது 20) மற்றும் பிரதீப் (24). இவர்கள் டாக்சி டிரைவர்கள்.

    பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று சிறுமி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோகித், பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். ஹால்ட்வானியின் கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை அவர்கள் கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதனிடையே கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பின்னர் அவர்கள் கத்கோடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது கத்கோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தனர்.

    உள்ளே சிறுமி அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாக்சி டிரைவர்கள் மோகித், பிரதீப் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
    • ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.

    சென்னை:

    பா.ம.க.வுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் தொடர்பாக அன்புமணியின் தி.நகர் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், பா.ம.க., தலைவராக நான் தான் உள்ளேன். எனவே, என்னுடைய முகவரிக்குதான் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப உத்தரவிட வேண்டும். அன்புமணி முகவரிக்கு அனுப்பக்கூடாது என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • தாய் கழகம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
    • இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

    சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.

    தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

    ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அ.தி.மு.க. என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், தி.மு.க.வினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.

    இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
    • திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பாதுகாப்பு கருதி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக வருகிற 1-ந் தேதி புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக நாளை (28-ந் தேதி) இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் (1-ந் தேதி) காலை புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி சிறப்புரையாற்றுகிறார். அதனை முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். 2.45 மணிக்கு மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் பிராமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் கார் மாலை 4 மணிக்கு முருகப் பெருமானின் அறுபடை வீடான முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது. அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 4.30 மணிக்கு மண்டேலா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் என்பதால் கடந்த 2 வாரங்களாக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மண்டேலா நகர் சுற்றுச்சாலை அருகே உள்ள சுமார் 120 ஏக்கர் பரப்பளவு உள்ள திடல் சமப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டணி கட்சி தலைவர்கள் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்கு கூட்டம் நடைபெறும் அருகிலேயே 80 ஏக்கர் அளவில் இடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். அது மட்டுமின்றி மதுரை மாநகர போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பாதுகாப்பு கருதி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இன்று முதல் கோவில் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போல் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது.
    • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் செந்தில் கூறுகையில், நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், ஓமன், பஹ்ரைன், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. தற்போது ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 10 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது ஏற்றுமதி ஆகி வருகிறது என்றார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    கோவை:

    கோவை தெலுங்குபாளையம் ராமசாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் சந்தோஷ். மாநகராட்சி 73-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும், நகரமைப்பு குழு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சுகன்யா. இவர்களது மகள் வெண்பா(வயது8).

    இந்த நிலையில் சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்களது மகள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

    இந்த நிலையில் கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பாவின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவருடன் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தனர்.

    • வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
    • ஆட்டோவில் டிரைவருடன் ஏற்கனவே மேலும் இரண்டு நபர்கள் இருந்துள்ளனர்.

    அரியானா மாநிலம் குருகிராமில் நேபாள நாட்டை சேர்ந்த 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

    அரியானாவின் குருக்ஷேத்திரா நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அப்பெண் பணியாற்றி வந்தார்.

    தனது தோழியைச் சந்திப்பதற்காகச் கடந்த செவ்வாய்க்கிழமை குருகிராம் வந்துள்ளார். ஆனால் அங்கு தோழியை சந்திக்க முடியாத நிலையில் மது அருந்த சென்றுள்ளார்.

    மது போதையில் இருந்த அந்தப் பெண், வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் டிரைவருடன் அவனின் இரண்டு நண்பர்களும் இருந்துள்ளனர்.

    பெண் போதையில் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூவரும், அவரை நஹர்பூர் ரூபா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறைக்குக் கடத்திச் சென்றனர்.

    அங்கு மூன்று நபர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    புதன்கிழமை காலை மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் ஒரு தெரியாத அறையில் இருப்பதையும் தனக்கு நேர்தத்தையும் உணர்ந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு முக்கியக் குற்றவாளியான ஆட்டோ டிரைவரைக் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    • கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர்.
    • இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி.

    டெல்லியில் 2021இல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது வகுக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    இதில் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட மாதம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இடையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 

    இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு:

    தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

     ஆனந்தக் கண்ணீர்:

    தான் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியானதும் கெஜ்ரிவால் நீதிமன்றத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதார். மணீஷ் சிசோடியா மற்றும் தனது வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோரைக் கட்டிப்பிடித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது.

    அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். உண்மை வென்றது.

    இந்தத் தீர்ப்பு சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளும் இன்று தகர்ந்துவிட்டன" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பு வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    கெஜ்ரிவாலின் இந்த விடுதலை, டெல்லி அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் மீதான இந்த ஊழல் வழக்கை முன்வைத்தே மேடை தோறும் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.

    இந்த தீர்ப்பு மூலம் கெஜ்ரிவால் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம்.

    மதுரை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் வருகின்ற 1-ந்தேதி மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி முகாம் மண்டேலா நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    இந்த பரப்பரை ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பிரதமர் மோடி எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வரும் நேரத்தில், இதை திசை திருப்பவும், மடைமாற்றம் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அ.தி.மு.க.விற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார். நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும் என்றார். 

    ×