என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடிய அ.தி.மு.க.வினர் - தீயசக்தி ஒழிந்தது என கோஷம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
- வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
போடி:
தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.






