என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
    • மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

    • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுக்கிறது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

    இந்த விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மேலும் பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. இந்த விழாவின் போது மோகன்லால் கேரள அரசால் முறையே கௌரவிக்கப்படுவார்.   

    • எந்த வகையில் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிக்கலாம் என டிரம்ப் ஆலோசித்து வருகிறது.
    • சினிமாவைத் தொடர்ந்து பர்னிச்சர் பொருட்களுக்கும் கணிசமான வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

    உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதுடன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன. அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதால் செய்வதால், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளில் சந்தைப்படுத்துவது கடினமாகி வருகிறது. இதனால் பரஸ்பர வரி விதிப்புதான் கிரேட் அமெரிக்காவை உருவாக்க ஒரே வழி என திட்டவட்டாக நம்புகிறார்.

    இதனால் உலக நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார். சில நாடுகள் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்தன. சில நாடுகள் அடிபணியவில்லை. அடிபணியாத நாடுகளின் பொருட்கள் மீது விரி வதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பதால் தண்டனை வரியாக 25 சதவீதம் வரி விதித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்படம் எந்த மற்றும் அனைத்து சினிமாக்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர்களுக்கு கணிசமான வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    டிஜிட்டல், வெப் சீரிஸ் போன்றவற்றால் அமெரிக்காவின் சினிமாத்துறை கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

    2023 மற்றும் 2024-ல் சினிமாத்துறையினர் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. 2023-ல் ஏறத்தாழ 5 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

    • இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
    • கடைசி ஓவர்களை அவரிடம் வழங்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் திலக் வர்மா (53 பந்தில் 69 ரன் நாட்அவுட்), சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (22 பந்தில் 33 ரன்) ஆகியோர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசிய நிலையில், ஹரிஸ் ராஃப் 3.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹாரிஸ் ராஃப்-ஐ கடுமையான விமர்சித்துள்ளனர்.

    முகமது யூசுப் கூறுகையில் "எத்தனை போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இறுதி ஓவர்களை வீசக்கூடாது. கடந்த உலகக் கோப்பை ஞாபகம் இருக்கிறதா?. அவருடைய பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தால், சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும்" என்றார்.

    முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் "ஹரிஸ் ராஃப் பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. நாம் எல்லோருக்கும் மெல்போர்ன் போட்டி ஞாபகம் இருக்கிறது (விராட் கோலி ஹரிஸ் ராஃப் பந்தில் 2 சிக்ஸ் விளாசினார்). இது போன்ற சூழ்நிலையில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என கேப்டன் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தவறுகளை செய்கிறோம்" என்றார்.

    முகமது ஆமிர் "ஹரிஸ் ராஃப்-க்கு ஓவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தினர். ஆனால், சுழற்பந்து வீச்சாளரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து, உத்வேகத்தை அப்படியே மாற்றிவிட்டனர். அவர் உங்களுடைய விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர் என்பதை சந்தேகம் இல்லை. அந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் தேவையிருந்தது. அப்படி செய்திருந்தால் போட்டியை இழந்திருக்க மாட்டீர்கள். பவர்பிளேயிலா் ஷாஹீன், பஹீம் சிறப்பாக ப்து வீசினார்கள்" என்றார்.

    பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தவுசீஃப் அகமது கூறுகையில் "கிரிக்கெட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடகலாம் என நாம் சொல்கிறோம். ஆனால், இது போன்ற விசயம் ஹார்ஸ் ராஃப்-க்கு மட்டும் கிரிக்கெட்டில் நடக்கிறது?. எங்களுக்கு வெளியே வேறு சில பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பிரான்சைஸ் கிரிக்கெட்டின் (T20 League) கதைகளை நிறுத்துங்கள். பிரான்சைஸின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஹாரிஸ் ராஃப் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். ஹசன் அலி அல்லது வேறு ஒரு இளம் வீரர் அல்ல. எங்கள் காலத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு முறையும் இல்லை" என்றார்.

    ராஜாசாப் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து, கேரளாவிலும் படப்பிடிப்புகள் நடைபெற்றது.

    அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரெயிலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    • விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடியவுதான்- இந்தியா வெற்றி- பிரதமர் மோடி.
    • எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்- காங்கிரஸ்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான சைகைகளில் ஈடுபட்டனர். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வாக்குவாத்தில் ஈடுபட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியது போன்றும், விமானம் கீழே விழுந்து நொருங்குவது போன்றும் சைகை காட்டினார். இது கடும் பேசும்பொருளானது. பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசி-யிடம் புகார் அளித்தது.

    இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடிவுதான்- இந்தியா வெற்றி பெற்றது! நம்முடைய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா, அந்த பதிவை டேக் செய்து "பிரதமர் ஜி, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியானது அல்ல.

    2ஆவது, நீங்கள் எந்த வகையிலும் ஒப்பீடு செய்திருந்தால், அதன்பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, வெற்றியை (ஆபரேஷன் சிந்தூர்) நெருங்கி வந்தபோது, எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டை தன்னுடைய தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதை வைத்துதான் கெரா இவ்வாறு தெரிவித்து்ளளார்.

    • மக்கள் துயரத்தில் இருக்கும்போது உங்கள் போட்டோஷூட்டால் மேலும் துன்புறுத்தாதீர்கள்.
    • மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!

    நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.

    அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...

    என்ன அவதூறு பரவியது?

    -உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?

    -உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?

    பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?

    உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?

    அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?

    கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?

    சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டுகளித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் அவர்களே?

    எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!

    இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.

    மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
    • மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.

    அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.

    அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.

    டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.

    • த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார்.
    • கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

    ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை ஆணைய தலைவராக இருந்தவர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்றே தனது விசாரணையை தொடங்கினார். நேற்று பகல் கரூருக்கு சென்ற அவர், முதல்கட்டமாக 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.

    பிரசார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள். சம்பவ இடத்தில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்கு பிறகு விரைவில் விரிவான அறிக்கையை அவர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

    • ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
    • கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

    இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.

    இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

    இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×