search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னோர்களுக்கு திதி"

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.

    மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.

     தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

     திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

     மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.

    • புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.

    மோகனூர் காவிரி

    அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    இதற்காக சிவாச்சாரி யார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை, பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.

    புனித நீராடினர்

    தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றின நடுப்பகுதிக்கு சென்று இலையுன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் காவிரி ஆற்று படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

    அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குமாரபாளையம்

    இதேபோல் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு நீராடினர்.

    மேட்டூர்

    சேலம், மேச்சேரி நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மேட்டூருக்கு குவிந்தனர். இங்குள்ள மேட்டூர் அணையின் காவிரி பாலம், படித்துறை, எம்.ஜி.ஆர். பாலம் ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் பெயரை கூறி பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர்கள். பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபட்டனர்.

    இந்த நிலையில் திதி கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும், உடைகள் மாற்ற அறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

    எடப்பாடி

    பூலாம்பட்டி படகு துறை, படித்துறை, கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை உள்ளிட்ட பல்வேறு காவிரி கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கரைப்பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    புரட்டாசி மகாளய அமாவாசை திதியை ஒட்டி பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரி கரை பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில், காவிரி கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி பகுதியில் திரண்டு இருந்த பக்தர்களுக்கு பூலாம்பட்டி வாசுதேவர், ஸ்ரீவர்ஷன் உள்ளிட்டோர் தலைமையிலான ஆன்மீக குழுவினர் வழிகாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்ததால் இங்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
    • ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் திதி கொடுத்தனர்

    திருவண்ணாமலை :

    ஆடி அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். போளூரில் உள்ள பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், காஞ்சி சங்கர வேத பாடசாலை ஆகிய இடங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெரியமலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் வளாகம், பெரியகொழப்பலூர் திருக்குராஈஸ்வரர் கோவில் வளாகம், நெடுங்குணம் தீர்க்காஜல ஈஸ்வரர் கோவில் வளாகம், தேசூர் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகம், ரேணுகாம்பாள் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் சிவாச்சாரியார்களிடம் முன்னோர்கள் பெயரில் தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆரணி புத்திரகா மேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    இதில் திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    அதேபோல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் ஏராளமான மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • கனமழை பெய்து வந்ததால் காவிரியில் 2 மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்தனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் இந்து முறைப்படி இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்வது வழக்கம். இந்த சடங்குகளை ஆற்றங்கரையிலும் ஊரின் குளக்கரைகளிலும் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இறந்தவர்களுக்கு தர்பணம் செய்து வந்தனர்.

    தற்பொழுது தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் காவிரியில் 2 மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கும், இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்வதற்கும் தடை விதித்து உள்ளனர்.

    எனவே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் 2 மாவட்ட எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தினசரி இறந்தவர்களுக்கு ஈம சடங்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து தங்களின் முன்னோர்களுக்கு ஈம காரியங்களை செய்தனர்.

    ×