search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tithi to the ancestors"

    • புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.

    மோகனூர் காவிரி

    அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    இதற்காக சிவாச்சாரி யார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை, பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.

    புனித நீராடினர்

    தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றின நடுப்பகுதிக்கு சென்று இலையுன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் காவிரி ஆற்று படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

    அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குமாரபாளையம்

    இதேபோல் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு நீராடினர்.

    மேட்டூர்

    சேலம், மேச்சேரி நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மேட்டூருக்கு குவிந்தனர். இங்குள்ள மேட்டூர் அணையின் காவிரி பாலம், படித்துறை, எம்.ஜி.ஆர். பாலம் ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் பெயரை கூறி பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர்கள். பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபட்டனர்.

    இந்த நிலையில் திதி கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும், உடைகள் மாற்ற அறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

    எடப்பாடி

    பூலாம்பட்டி படகு துறை, படித்துறை, கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை உள்ளிட்ட பல்வேறு காவிரி கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கரைப்பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    புரட்டாசி மகாளய அமாவாசை திதியை ஒட்டி பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரி கரை பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில், காவிரி கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி பகுதியில் திரண்டு இருந்த பக்தர்களுக்கு பூலாம்பட்டி வாசுதேவர், ஸ்ரீவர்ஷன் உள்ளிட்டோர் தலைமையிலான ஆன்மீக குழுவினர் வழிகாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்ததால் இங்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    ×