search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் பழனிசாமி"

    மணப்பாறை, திண்டிவனம் அருகே புதிதாக 2 தொழில்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

    சிப்காட் நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகள், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் வெளியிடுகின்றேன்.

    தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் மேம்படுத்துதலுக்கு உதவி செய்யவும், தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தவும், “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023”ஐ உருவாக்கி, தமிழ்நாடு அரசு நடை முறைப்படுத்த உள்ளது.

    இக்கொள்கையினால், அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி, சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும். “தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023”-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதத்தினை அடையும் வகையில் இக்கொள்கை அமையும்.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானியச்சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், அதிகபட்ச மானியத் தொகை 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    2018-2019-ம் நிதியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், 70.33 ஏக்கர் நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டைபகுதி 2 நிறுவப்படும்.

    புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் மூலமாக புத்தாக்கம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்தாக்கம், தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் மூலமாக புத்தாக்கத்தினை உருவாக்குதல் அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பரிசோதனைக் கூடங்கள் மூலமாக முன்மாதிரி மேம்பாடு மற்றும் பொருட்கள் பரிசோதனை செய்வதற்காக மானியம் வழங்கப்படும். உலக அளவில் பல நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புத்தாக்கத் திறனை அதிகரித்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு 400 தொழில் முனைவோர்களுக்கு புதுமைகளை புகுத்து வதற்காகவும் மற்றும் சிறிய அளவிலான தொழில்நுட்ப சிக்கல்களை அறிவுசார் ஆலோசகர்களுடன் இணைந்து சரி செய்வதற்காகவும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.



    5.6.2018 அன்று இப்பேரவையில் நான் அறிவித்த “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை” அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, எளிதில் மக்கக் கூடிய மாற்றுப் பொருட்களை கண்டறியவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

    தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்திலும் அனுமதி வழங்கவும், ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்துவதற்காக வேண்டி ஒருங்கிணைப்பு முகமையாகவும் இது விளங்கும்.

    மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள், தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன் மொழிபவர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் முகமையாகவும் இந்த அமைப்பு செயல்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை தாக்கி இறந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை: 

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் பராமரித்து வந்தார்.

    கடந்த 25-ம் தேதியன்று கோவில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், சமயபுரம் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமயபுரம் கோவில் யானை மசினி தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், யானை தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #Tamilnews
    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.#bansterlite #sterliteprotest #Ramadoss #EdappadiPalanisamy
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 13 அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்ட பிறகு தான் இப்படி ஒரு முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பு மேலோட்டமாகப் பார்க்கும் போது திருப்தியளித்தாலும், நம்பிக்கையளிப்பதாக இல்லை. இது போராடும் மக்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்தாது.

    சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட பணிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,‘‘ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு இனி எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப்படாது.

    இதை ஏற்று பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். தமிழக அரசின் கடந்த கால செயல்பாடுகளையும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது பினாமி ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. அதனால் தான் போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் அறிவிக்கவில்லை.



    ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் திட்டம் தங்களிடம் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்கு 45 நாட்களுக்கு ஆலை மூடப்படும். இப்போது சற்று கூடுதலாக மூடப்பட்டுள்ளது. ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை.

    அதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடந்துள்ளோம். அந்த வழக்கு ஜூன் மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல தீர்ப்பை வாங்கி ஆலையை திறப்போம்’’ என்று ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்திருக்கிறார்.

    கடந்த காலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அதன் பண பலத்தை பயன்படுத்தி ஆலையை ஒரு சில வாரங்களில் திறந்திருக்கிறது. இத்தகைய கடந்தகால வரலாறுகளை அறிந்த எவரும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் வாய்வழி அறிவிப்பை நம்பமாட்டார்கள்.

    அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பெரு நிறுவனங்கள் தான் தீர்மானிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எந்தவொரு கொள்கை முடிவையும் மத்திய அரசு அனுமதிக்காது. இந்தியாவின் நீதித்துறை கூட பெருநிறுவனங்கள் மீது பாசத்துடன் தான் நடந்து கொள்ளும். அதனால் தான் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட பிறகும், ஆலையை மூடாமல் ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட மாட்டோம் என்று ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆலையை மூட வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால் கூட, அதை மத்திய அரசு விரும்பாது. அத்தகைய தருணங்களில் மத்திய அரசு அளிக்கும் அழுத்தத்தை தாங்கும் திறன் எடப்பாடி அரசுக்கு இல்லை. இப்போது ஆலையை மூடப்போவதாகக் கூறும் பினாமி அரசு, மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்துக்கு பணிந்து ஆலைக்கு அனுமதி அளிக்கத் தயங்காது. மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளிக்குமா?



    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தால் அவர் முதலில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அவரது கருத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் நிலவும் பதற்றத்தைப் போக்குவதற்காக அவர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. இதைக்கூட செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதை பொதுமக்கள் நயவஞ்சகமான ஒன்றாகவே பார்ப்பார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

    பழனிச்சாமி உடனடியாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்தித்து பேச வேண்டும். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இது ஒன்று தான் வழியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#bansterlite #sterliteprotest #Ramadoss #EdappadiPalanisamy
    ×