search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பாறை"

    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவி உள்ளனர்.
    • மைசூர் சென்றவர்கள் வந்த பின்னரே கொள்ளை போன நகை, பணம் குறித்த முழு விபரம் தெரிய வரும்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலை அருகே உள்ள எஸ்.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தர ராஜா பெருமாள் (வயது 55). தொழிலதிபரான இவர் புத்தானத்தம் பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இன்று அவருக்கு திருமண நாள் ஆகும். இதையடுத்து அதனை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தினருடன் மைசூர் சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக அங்கு வேலை செய்யும் பெண் சென்றார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த அறையின் கதவுகளில் இருந்து பூட்டுகளும் உடைந்த நிலையில் கீழே கிடந்தன. அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு முன்கூட்டியே அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். விரல் ரேகையையும் பதிவு செய்தனர். இதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள தோப்பில் சென்று நின்றது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மைசூர் சென்றவர்கள் வந்த பின்னரே கொள்ளை போன நகை, பணம் குறித்த முழு விபரம் தெரிய வரும்.

    ×