search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manapparai"

    மணப்பாறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    மணப்பாறை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மீன் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அதனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த பணம் மணப்பாறை தாலுகா அலுவ லகத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

    மணப்பாறை அருகே இன்று காலை வேன் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை தலை நசுங்கி பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர்.

    அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி நகர்த்தினார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை டிரைவர் கவனிக்கவில்லை.

    இதில் பின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக்கொண்டது. தலை நசுங்கிய நிலையில் கதறித்துடித்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

    ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

    பின்னர் பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் திருப்பதியை கைது செய்தனர்.

    டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த இந்த விபத்தில் ஏதுமறியாத குழந்தை பலியானது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #Tamilnews
    மணப்பாறை அருகே சாலை விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் பின்னர் பணி முடிந்து இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மணப்பாறை-மதுரை நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த வடுகப்பட்டி பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சரவணன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் சப்-இன்ஸ் பெக்டர் ரூபினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ  மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள 70 அடி ஆழ கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செட்டியப்பட்டியில் 70 அடி ஆழ கிணற்றில் ஒரு வாலிபர் தவறி விழுந்து விட்டதாக மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார்.

    அந்த வாலிபரின் பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த பஷிர்(வயது 35) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பஷிர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்ல ரெயில் டிக்கெட் எடுத்து விட்டு இடையில் செட்டியப்பட்டியில் இறங்கியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த நபரிடம் தன்னை ஒரு இடத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். இதனிடையே சந்தேகமடைந்த அந்த நபர், செல்போனை எடுத்து பேச முயன்ற போது, தன்னை பற்றித்தான் யாரிடமோ பேச போகிறார் என்று எண்ணி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ தரை மட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

    பஷிர் சென்னையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு பயணித்துள்ளார். இடையில் அவர் மணப்பாறையில் இறங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதலிப்பதாக கூறி ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (25) என்ற வாலிபர், அந்த சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் பழனிச்சாமியுடன் கடந்த சில மாதங்களாக நட்பில் இருந்துள்ளார்.

    மேலும் தனிமை கிடைக்கும் போதெல்லாம் அந்த சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரின் உடலில் மாற்றம் காணவே குடும்பத்தினர் கேட்டனர். அப்போது பழனிச்சாமி தன்னிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டதாக கூறியதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே சிறுமி கர்ப்பம் அடைந்த தகவல் அறிந்ததும் பழனிச்சாமி தப்ப நினைத்தார். மேலும் திண்டுக்கல் மாவட்டம், கொம்பேரிபட்டியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த வி‌ஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே இது தொடர்பாக மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் வாசுகி விசாரணை நடத்தினார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி 2 மாதமாக கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததுடன், மேலும் ஒரு பெண்ணை பழனிச்சாமி திருமணம் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். #Tamilnews
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி பொதுமக்கள் திருவிழா நடத்துகிறார்கள்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு வெள்ளையம்மாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது45), டெய்லர். இவரது மனைவி லட்சுமி (37). இவர்களின் மூத்த மகள் தனுஜா. மற்றொரு மகள் காவியா (12).

    மூத்த மகள் தனுஜாவிற்கு கடந்த 2007-ம் ஆண்டு 4 வயதான போது, டிசம்பர் மாதம் 23-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பன்னாங்கொம்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பால்வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனுஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தனுஜாவுக்கான ஈமச்சடங்குகள் நடைபெற்றது. அப்போது வேத மந்திரங்கள் கூறிக்கொண்டிருந்த ஐயர், தனுஜா போல பேசி தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், 3 ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் அருள் வாக்கு கூறினார்.

    இதேபோல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பழனிச்சாமியின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என்று அருள் வந்து கூறியுள்ளார்.

    இதையடுத்து பழனிச்சாமி, தனுஜாவிற்கு சுமார் 1½ அடி உயரத்தில் சிலை வைத்து தனுஜா அம்மன் என்ற கோவில் கட்டி வழிபாடு நடத்த தொடங்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழாவும் நடத்தப்பட்டு வந்தது. இதில் பால்குடம், பூக்குழி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தி பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து பால் குடம் புறப்பட்டு, தனுஜா அம்மன் கோவிலை வந்தடைந்ததும் தனுஜா அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். பின்னர் பொங்கல் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானமும், இரவு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அருள்வாக்கு பல்வேறு விதங்களில் தங்களுக்கு பலித்துள்ளதாக அங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி, பக்தர்கள் வழிபட்டு வருவது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×