search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Protest"

    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் ஜஸ்டின் செல்வ மிதிஷ் (வயது 29). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஜஸ்டின் செல்வ மிதிஷ் தலையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 22-5-2018 முதல் 29-6-2018 வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் கலவரத்தில் காயம் அடைந்ததால் அரசு சார்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் ஜஸ்டின் செல்வமிதிசுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜஸ்டின் செல்வ மிதிசின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 23-9-2018 அன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதன்பிறகு கடந்த 9-ந் தேதி டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, 10-ந் தேதி மீண்டும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் ஜஸ்டின் செல்வமிதிஷ் பரிதாபமாக இறந்தார்.
    மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்ப‌ட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.



    முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்ப‌ட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டு உள்ளது.

    நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
    மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தின் முடிவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிலத்தடி நீர் ஆய்வு வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

    இதில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேஹ்வால் பதில் அளிக்கையில் கூறியதாவது:-



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் காட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சேனிக் ஆகிய உலோக மாசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அதே போல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளோரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார். #ThoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். #thoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டு இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார். #ThoothukudiProtest #Sterlite
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டு இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த சதிக்கு அரசும், காவல்துறையும் மறைமுகமாக துணை நிற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி, கடந்த மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற போது, காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவிகளை படுகொலை செய்தது.

    இதைத் தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பணிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 24ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அன்றே ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு மே 28ஆம் தேதி வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்ட மக்களின் இடைவிடாத போராட்டமும், தமிழகம் முழுவதும் எழுந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பலையும் தான் தாமிர உருக்காலை மூடப்படுவதற்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ஆலை நிர்வாகம், இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது.

    இதற்கான பிரச்சாரத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு பிரிவினர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் ஸ்டெர்லைட் ஆலை அவசியம் என்பதால் அதை மீண்டும் திறக்க ஆணையிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைக்கும் நாடகம் வாரந்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    அவ்வாறு மனு கொடுப்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தான்; அவர்களைத் தவிர வேறு யாரும் அல்ல.

    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் தூத்துக்குடி நகரத்தையும், புறநகரையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளாமானோர் தங்கள் உறவுகளை புற்றுநோய்க்கு பலி கொடுத்துள்ளனர். கருச்சிதைவு, உடல் உறுப்பு செயல்பாடு பாதிப்பு என ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட தீய விளைவுகளுக்கு வாழும் எடுத்துக்காட்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளனர்.

    22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடினார்கள்.



    ஆலைக்கு எதிராக இருமுறை நடந்த ஒன்று கூடல்களில் யாரும் அழைக்காமலேயே லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்... இல்லாவிட்டால் தங்களைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழங்கினார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி மனு கொடுக்கிறார்கள் என்று கூறுவதை நம்ப முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தாமிரத்தின் விலை உயர்ந்து விட்டது; எனவே, ஆலையை திறக்க ஆணையிட வேண்டும் என்று வணிகர்களைக் கூற வைத்து ஒரு நாடகத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நடத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும், அதன் விலை அதிகரித்ததும் உண்மை தான். இப்போது இறக்குமதி மூலம் நிலைமை சீராகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மனிதகுல பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இது பொருட்படுத்தக்கூடிய வி‌ஷயமே இல்லை.

    தாமிர உருக்காலையால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்; இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுவோர் அனைவரும் சீனாவின் கைக்கூலிகள் எனக் குற்றஞ்சாற்றும் வகையில் அவதூறு கருத்துக்களைக் ஒரு காணொலி வைரலாக்கப்பட்டு வருகிறது.

    அதை தயாரித்து வழங்கியது யார்? என்ற விவரம் அதில் இல்லை என்பதிலிருந்தே அது யாரால், எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    ஸ்டெர்லைட் ஆலையின் இத்தகைய நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்பது தான் வேதனையளிக்கும் வி‌ஷயமாகும். ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவுகளை நினைத்துப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்கக்கூடாது என்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக்கூடாது.

    ஆலையை மூட ஆணை பிறப்பித்து விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்து, வழக்கை முறியடித்து நாசகார ஆலை நிரந்தரமாக மூடப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #ThoothukudiProtest #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூடவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

    ஆலையில் இருக்கும் அமிலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கேட்டு பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு கொடுத்துள்ளது.

    மேலும் ஒப்பந்ததாரர்களும் ஆலையை திறக்க‌ வலியுறுத்தி மனுக்கள் கொடுத்து வருகின்ற‌னர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தினர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் குடியிருப்பை காலி செய்து சென்றுவிட்டனர். உள்ளூர் ஊழியர்கள் மாற்றுப்பணிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். மும்பை, பெங்களூரில் இருந்து பணியாற்றியவர்கள் தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு சென்றுவிட்டார்கள்.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறித்தி உள்ளனர். ஆலையில் இருந்து வாகனங்கள் மூலமாக ஊழியர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து ஊழியர்களையும் ஆலை குடியிருப்பு பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து ஆலைக்கு பல்வேறு பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று காலை வர தொடங்கினர். ஆலை வாகனங்கள் மூலமாகவும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். ஆலை குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர்களிடம் ஊழியர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்கச்செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். #ThoothukudiProtest #sterlite
    தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #Sterlite #jaggivasudev
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சென்ற யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்கு தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.



    சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Sterlite #jaggivasudev
    சமூக விரோதி என்று பொதுமக்களை விமர்சனம் செய்த ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கீழ் கோர்ட்டை அணுகும்படி பத்திரிகையாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #rajinikanth #highcourt #sterliteprotest

    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் பேராட்டம் கடந்த மே 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டபோது, அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில், 17 வயது சிறுமி உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

    பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டனர். போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது, அதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூறினர்.


    இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் சிலம்பரசன் என்பவர் புகார் செய்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    இதையடுத்து தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலம்பரசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓசூர் குற்றவியல் கோர்ட்டை அணுகி மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #rajinikanth #highcourt #sterliteprotest

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசுப், முகமது இசரத், வேல்முருகன், சோட்டையன், சரவணன் ஆகிய 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    கலவர வழக்குகள் தொடர்பாக நேற்று அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ், நாம்தமிழர் கட்சி நிர்வாகி இசக்கிதுரை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கல் வீசியதாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த அக்பர் (வயது 47) என்பவரை சிப்காட் போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் (29), சிலுவைபட்டியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை வடபாகம் போலீசாரும் கைது செய்தனர்.

    மேலும் 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் கைது நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலக்கத்தில் உள்ள‌னர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    செய்துங்கநல்லூர் அருகே பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #sterliteprotest
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் பதட்டமான சூழல் நிலவியதால் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி ஒரு அரசு டவுண் பஸ் சென்று கொண்டிருந்தது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் பாலத்தில் அந்த பஸ் வந்த போது சிலர் வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மெஞ்ஞானபுரம் நவ்வலடி விளையை சேர்ந்த சுடலை (வயது70), அவருடைய மனைவி வள்ளியம்மாள்(63), காரைக்குடியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் கடந்த 31-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வள்ளியம்மாளின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரத்தில் பலியானவர்க்கு வழங்குவது போல், பஸ் எரிப்பில் பலியான வள்ளியம்மாள் குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

    தங்களது கோரிக்கையை நிறைவேற்று வரை வள்ளியம்மாளின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வள்ளியம்மாள் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை என்றும், தீவைப்பு சம்பவத்தில் இறந்ததால் ரூ.5 லட்சம் நிவாரனம் வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.

    இது தொடர்பாக வள்ளியம்மாளின் உறவினர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    தங்களின் கோரிக்கை குறித்து வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகம் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்த நிலையில் நேற்று வள்ளியம்மாளின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் குடும்பத்தினரிடம் நேற்று மாலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. உதவி கலெக்டர் தங்கவேலு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வள்ளியம்மாள் மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது, அரசு நிவாரண தொகை ரூ.10 லட்சத்தை பெற்று கொள்வதாகவும், நாளை(அதாவது இன்று) தனது தாயாரின் உடலை பெற்று இறுதி சடங்கு செய்வதற்கும் ஆறுமுகம் ஒப்புக் கொண்டார். அத்துடன் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்மாளின் உடல் இன்று அவரது மகன் ஆறுமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வள்ளியம் மாளின் உடல் அவரது சொந்த ஊரான நவ்வலடிவிளைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #sterliteprotest
    தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதி தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #Sterliteprotest #Kamalhassan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.

    காவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன்.

    கர்நாடக முதல்-மந்திரியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எப்படி அமையும்? நம்முடைய கோரிக்கை என்ன? என்று ஊருக்கே தெரியும். இரு மாநிலங்களுக்கும் தெரியும். நமக்கு என்ன தேவை. அவர்களால் என்ன இயலும் என்பதை பேச உள்ளேன்.

    சட்டமன்றத்துக்கு மீண்டும் தி.மு.க. செல்ல முடிவு செய்து இருப்பது நல்ல முடிவாகும். இது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் மீது செய்யப்படுவது விமர்சனம். அது அவருடைய கருத்து. நான் மக்களின் கருத்துகளை மக்களின் பிரதிநிதியாக பிரதிபலிக்கிறேன். நான் மக்களிடம் கேட்டு சொன்ன கருத்து ஒட்டுமொத்த மக்களின் எதிரொலிதான். நானாக எந்த கருத்தையும் சொல்லவில்லை.

    கர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு.

    தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் கிடையாது. அப்படி பார்த்தால் நானும் சமூகவிரோதிதான். போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகும் என்பது ரஜினிகாந்தின் கருத்து. ஆனால் என்னுடைய கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததுகூட இல்லை.



    காந்தி இறந்தபின் பிறந்தவன் நான். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அந்த தன்மை என்ன? என்று காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து செய்வது போராட்டம் கிடையாது.

    துப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை தனது எல்லையை கடந்து பேராசையினால் பல தவறுகளை செய்து இருக்கிறது. பெரிய ஆலைகள் வர வேண்டும் என்பது காந்தி, பாரதியின் கனவுகள். ஆனால் அவை மண்ணின் சட்டங்களை மதித்து நடக்கும் ஆலைகளாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவரை எப்போதும் தள்ளி நின்று வாழ்த்துகின்ற ரசிகன் நான். அந்த கூட்டத்தில் பார்த்திருக்க முடியாது. பிறந்த நாள் முடிந்தபின்னர் நான் சென்று வாழ்த்தி இருக்கிறேன். இந்த முறையும் அப்படித்தான் போய் வாழ்த்துவேன்.

    தூத்துக்குடியில் வீடு, வீடாக சென்று சோதனை நடப்பதாக சொல்கின்றனர். ஆனால் உண்மையான தகவல் என்ன என்று தெரியாமல் பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterliteprotest #Kamalhassan
    தன்னலம் இல்லாமல் மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று பேசுவது வெட்கக்கேடு என்று ரஜினிகாந்துக்கு, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Seeman #ThoothukudiIncident
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மருத்துவமனையில் ரசிகர்களை கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படப்பிடிப்பா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்வா? துணை முதல்-அமைச்சரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள், அவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்?

    இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? என்று எல்லாம் தெரிந்த ரஜினிகாந்த் அடையாளம் காட்டுவாரா?

    போராடும் மக்களை சமூகவிரோதிகள், விஷமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது. இவ்வாறு பேசுபவர்கள் தான் விஷமிகள். கலவரத்தை தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வருவார்களா?

    தொழில்வளர்ச்சி குறித்து பேசும் ரஜினிகாந்த், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா? அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

    போராடும் மக்களைப் பொதுவாக சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ, நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன? முன்னெடுத்த போராட்டங்கள் எத்தனை?

    போராடுபவர்களுக்கு துணை நிற்க முடியாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள். போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு. பிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள், விஷமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு ஆகும். இது கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார். #Rajinikanth #Seeman #ThoothukudiIncident
    ×