search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியங்குடி"

    • சுசீலா சேர்ந்தமரத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பர்சை திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டியை சக பயணிகள் பிடித்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சேர்ந்தமரத்திற்கு செல்வ தற்காக சுசீலா என்ற பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவரது அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் சுசீலா கையில் வைத்திருந்த பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு தப்பி ச்செல்ல முயன்றார்.

    அதனை அறிந்த சுசீலா கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் அந்த மூதாட்டி யை பிடித்தனர். தகவல் அறிந்து புளியங்குடி போலீ சார் அங்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி பாத்திமுத்து(வயது 70) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பர்சை மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நெல்லை கொக்கிர குளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • முப்பெரும்தேவியருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • வருகிற 2-ந்தேதி பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாகக் கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரைப் திருவிழாவிற்கு நாள் கால் நட்டுதல் நிகழ்ச்சி இன்று குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவியர் அம்மாக்களுக்கு சந்தனம், குங்குமம், தயிர், பால், இளநீர் நறுமணப் பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின் சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, மகாகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடி, அலகு குத்துதல் நடைபெற இருக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணி அளவில் சிறப்பு அன்ன தானம் நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை 6 மணி அளவில் கோவில் முன்பு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாலை 6 மணி முதல் முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா ஆந்திரா கர்நாடகா மும்பை ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • புளியங்குடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுப்ரமணியன் காட்டு பன்றியை வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு பன்றியை கொன்று வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்ட சுப்ரமணியனுக்கு ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.  

    • அனிதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை.
    • மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் அனிதா மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.

    நெல்லை:

    புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா(வயது 35). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை. அவரது பெற்றோரும் இறந்துவிட்டதால் தனது சகோதரிகளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அனிதா திடீரென மாயமானார். இதனால் அவரது தங்கை மகன் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அனிதா மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். புளியங்குடி போலீசாரும் அங்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி மீனாட்சி அம்பாள் சொக்கலிங்க சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜை களை கோவில் அர்ச்சகர் சிவா பட்டர், கண்ணன் பட்டர், முத்துக்குட்டி பட்டர் நடத்தினர். விழாவில் செயல் அலுவலர் ஸ்ரீதேவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சித்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன், உபயதாரர்கள் கணேசன், செல்லத்துரை, செல்வ நாராயணன், பால்ராஜ், மரியதாஸ், வைத்தியலிங்கம் மற்றும் பிரதோஷ கமிட்டி குமார், ஆண்டியப்பன், மகேந்திரன், உதயகுமார், ரமேஷ், முன்னாள் திருப்பணி கமிட்டி ஆவுடையப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்த மனோஜ்பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மனோஜ்பாண்டி (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவன் பலி

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (16). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்கள் இருவரும் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த மனோஜ்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 27வகை அபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் தை மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா தைப்பூசம், தை மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 27வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
    • சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணிபேரிபுதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது43). இவரது மனைவி கலாவதி.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அய்யாத்துரை தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் அய்யாத்துரை நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலம் தொடர்பாக கருத்தபாண்டியின் சகோதரர்களான சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று அய்யாத்துரை தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு வந்த அலங்காரம், சின்னப்பாண்டி, சின்னபாண்டி மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து புளியங்குடி சின்னப்பாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள அலங்காரத்தையும், பேச்சியம்மளையும் தேடி வருகின்றனர். 

    • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 6.30 மணியளவில் முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப் பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    பின்னர் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடந்தது.

    முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    • மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடியின் மையப்பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    புதிய கடைகள் கட்டும் வரை தற்காலிகமாக அரசு மருத்துவமனை அருகில் இயங்கி வந்தது. 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இந்தநிலையில் நகர்மன்ற கூட்டத்தில் இடிக்கப்பட்ட காந்தி மார்க்கெட் பழைய இடத்தில் கட்டுவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பழைய இடத்திலேயே மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்க நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன், தி.மு.க. நகர செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணிசாமி, மார்க்கெட் வியாபாரிகள், நகர வர்த்தக சங்கத்தினர், கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் பழைய இடத்திலயே கடைகள் கட்டப்பட வேண்டும். மேலும் இது நகரின் மைய பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும், வெளியூர் மக்களும் வந்து செல்ல ஏற்ற இடம் என்று பல்வேறு காரணங்களை எடுத்து கூறினர்.

    பின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் அரசுக்கு எடுத்து சொல்லப்படும். அனைவரின் விருப்படியே பழைய இடத்தில் கடைகள் கட்டுவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குமார் சிங், பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, மானேஜர் செந்தில் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • இவ்விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாள்கள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.
    • முப்பெரும்தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்களும்,சிறப்பு அலங்காரங்கள், பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அருள் வாக்கிற்கு பிரசித்திப் பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு நடைபெற்றது.

    இவ்விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாள்கள் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு, திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் குழந்தை பாக்கியம், இல்லாத திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஆடிப்பூரம் வளைகாப்பு பற்றி குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

    அதனைத்தொடர்ந்து முப்பெரும்தேவியருக்கு பால், பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், உள்பட 21 வகையான அபிஷேகங்களும், தொடர்ந்து முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அலங்காரங்கள், பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

    கோவில் குருநாதர் சக்தியம்மா முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு 21 வகையான சிறப்பு வளைகாப்பு சாதமும் படைக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, செங்காளியம்மனுக்கும் வளைகாப்பு பூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அம்மாக்களின் வளைகாப்பு சாதம், வளையல்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாத மாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முககவசம், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி ரோட்டரி கிளப் வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ் வரவேற்று பேசினார். இந்த ஆண்டிற்கான புளியங்குடி ரோட்டரி கிளப்பின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன், செயலாளராக ஜோசப் அமல்ராஜ், பொருளாளராக முருகையா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆறுமுகப் பாண்டியன் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ரோட்டரி கிளப்பின் நோக்ககத்தினையும் கிளப்பின் மூலம் செய்த சாதனைகளையும் விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற புளியங்குடி எஸ்.டி.ஏ. பள்ளி மாணவன் ஆதித்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தீக்க்ஷா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கிளப் சார்பில் பள்ளிகளுக்கு மைக்ரோஸ்கோப், பீரோ, மின் விசிறி, தையல் மிஷின், மாணவ- மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜேம்ஸ் ஆரோக்கிராஜ் நன்றி கூறினார்.

    ×