search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்தசாரதி கோவில்"

    • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

    2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

    இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று வேங்கட கிருஷ்னன் திருக்கோலத்தில் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர், வேணுகோபாலன், காளிங்க நர்த்தனர், சக்கரவர்த்தி திருமகன், ஏணிக் கண்ணன், பரமபத நாதன், பகாசு ரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளி கண்ணன், நாச்சியார் ஆகிய திருக்கோலங்களில் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கிறார். பகல் பத்து விழாவில் 6-ம் நாள் மாலை முதல் 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    வைகுண்ட ஏகாதசியான வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி 23-ந்தேதி அதி காலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரி சனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப் பத்து உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    • 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
    • அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதால் கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி’ என்று பெயர்.

    விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பார்த்தன் என்ற பெயருடைய அர்ச்சுனனுக்கு, சாரதியாக இருந்து தேர் ஓட்டியதால், கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி' என்ற பெயர் வந்தது. அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து, கீதையை உபதேசம் செய்து, மகாபாரதப் போரை வெல்ல உதவியாக இருந்த கிருஷ்ணனுக்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    சுமதிராஜன் என்ற மன்னர் திருமால் பக்தராக இருந்தார். அவருக்கு குருஷேத்ர போரில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) இருந்த கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவிக்க, திருமாலும் அவ்வண்ணமே காட்சி கொடுத்து அருள்பாலித்தார். தான் விரும்பிய கோலத்தில் கிருஷ்ணரைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அதேகோலத்தில் இத்தலத்தில் கோவில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

    போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது, கிருஷ்ணர் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதேபோல இத்தலத்திலும், ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பார்த்தன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகள் அனைத்தையும் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரின் முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் இருக்கும்.

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன. திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மை கொண்டது என்ற தத்துவத்தை அனைவரும் உணர்வதுண்டு. மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்சவர் பார்த்தசாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்கப்படுகிறது.

    முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சோழர்கள் இந்த ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர், வராகர் போன்ற மகாவிஷ்ணுவின் திருமேனிகளை இங்கே தரிக்க முடியும். ராமர் மற்றும் நரசிம்மர் சன்னிதிகளை அடைய தனித்தனி வாசல்கள் இருக்கின்றன. பல நுணுக்கமான அலங்காரக் குடைவு வேலைப்பாடுகளை, இக்கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம்.

    • சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா... என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.
    • கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார்.

    பகவானை தரிசித்து பரவசப்பட வந்த பக்தர்கள் அமைச்சரை பார்த்து பரவசப்பட்ட ருசிகர சம்பவம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்தது.

    வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்து காட்சி தரும் பெருமாளை தரிசிக்கவும் அவரை பின் தொடர்ந்து அதே வாசல் வழியாக சென்று தரிசித்து பலன் அடையவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நள்ளிரவிலேயே குவிந்த பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்து கிடந்தது. அறநிலையத்துறையின் கணக்குப்படி முற்பகல் வரை தரிசித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று தெரியவந்துள்ளது.

    சொர்க்க வாசல் திறக்கும் போது கூட்டம் முண்டியடிக்கும். எனவே மாலையில் போகலாம் என்று காத்திருந்தவர்கள் பிற்பகலில் கோவிலில் திரள தொடங்கினார்கள்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கரை புரண்டது. வரிசையும் நீண்டு கொண்டே சென்றது.

    செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் தனித்தனி வழிகளில் சென்று வந்தார்கள்.

    ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறந்ததும் ரங்கநாதரை தரிசித்து திரும்பிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...

    பார்த்தசாரதியையும் பார்த்து தரிசித்து வர காரில் வந்து இறங்கினார்.

    மாலை 6.... கூட்டத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் இருந்த அதிகாரிகளிடம் 'யோவ்.....என்னய்யா இப்பவும் லட்சக்கணக்கில் கூட்டம் நிற்கிறது... சொர்க்க வாசல் காலையிலேயே திறக்கப்பட்டிருக்கும் அல்லவா? என்றார்.

    அதற்கு "ஆமா சார்.. தரிசனத்துக்காகத்தான் காத்திருக்கிறார்கள்." என்றனர்.

    அமைச்சரை பொறுத்தவரை எந்த இடையூறும் இல்லாமல் பத்திரமாக அதிகாரிகள் சாமி சன்னதி வரை அழைத்து சென்று விடுவார்கள். நிம்மதியாக சாமி தரிசனம் செய்து விட முடியும்.

    சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா.. என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.

    ஆனால் அவரோ கோவில் பிரதான வாசல் முன்பிருந்து 'கியூ' எதுவரை நிற்கிறது என்று பார்ப்பதற்காக விறுவிறு என்று நடக்க தொடங்கினார். 4 வீதிகளையும் சுற்றி பார்த்து மலைத்து போனார். கூட்டம்.. கூட்டம்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கூட்டம்.

    கியூ இப்படியே ஆமை வேகத்தில் நகர்ந்தால் ஒரு நாள் கூட ஆகலாம் என்று கருதியவர் மீண்டும் முன் வாசலுக்கு விறுவிறு என்று நடக்க தொடங்கினார்.

    வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் "சார்... 2 மணி நேரமாக நிற்கிறோம்.... 3 மணி நேரமாக நிற்கிறோம் என்று பரிதாபமாக கூறினார்கள். கை குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள்.

    கோவில் முன்பு வந்த சேகர்பாபு வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரைகளுடன் தரிசனத்துக்கு வந்தவர்கள் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டதை பார்த்தார். உடனடியாக அவற்றை தடை செய்ய சொன்னார்.

    அடுத்ததாக மீண்டும் வரிசையாக நின்ற பகுதிக்கு சென்று பக்தர்களை அவரே ஒழுங்குபடுத்தினார். அந்த கூட்டத்தில் முதியோர்கள், கைக்குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளை பார்த்து விரைவாக செல்ல ஏற்பாடு செய்தார்.

    அதன் பிறகு கூட்டம் கொஞ்சம் வேகமாக நகர தொடங்கியது. பின்னர் சன்னதி அருகே வந்து மாற்றுதிறனாளிகள், பெரியவர்கள், கைக்குழந்தையுடன் வந்த பெண்களை மட்டும் சுமார் 1 நிமிடம் வரை சுவாமி முன்பு நின்று தரிசித்து செல்ல ஏற்பாடு செய்தார்.

    அதன் பிறகும் வேலை முடிந்தது கிளம்பலாம் என்று நினைக்கவில்லை. கோவிலை சுற்றி நடந்த படியே வரிசையாக நின்றவர்களை பார்த்து ம்ம்.. நகருங்க... நகருங்க.. என்று விரைவாக அனுப்பிக் கொண்டே இருந்தார்.

    சரியாக மாலை 6 மணிக்கு நின்றவர் உட்காராமல் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்தார். இரவில் பனி கொட்ட தொடங்கியபோது கொட்டிய பனியிலும் அசையாமல் பெருமாளை தரிசித்தே செல்ல வேண்டும் என்று பக்தர்கள் பிடிவாதமாக வரிசையில் நின்றது போல் கடைசி பக்தர் வரை பெருமாளை பார்த்த பிறகே தானும் இங்கிருந்து செல்வேன் என்று அங்கேயே நின்றார் அமைச்சரும்.

    சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு அதாவது அதிகாலை 2 மணிக்கு அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்து முடித்தனர். கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார். " உன் பக்தர்களை எல்லாம் விரைவாக உன்னைக்காண அனுப்பி வைத்து விட்டேன்" என்று சொல்லி இருப்பாரோ...?!

    பின்னர் நடை சாத்தப்பட்டதும் ஊழியர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். பக்தர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    8 மணி நேரம் உட்காராமல் நின்று கொண்டிருக்க சிரமம் இல்லையா என்று கேட்டதற்கு "சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க முன்பெல்லாம் இதை விட கூடுதலான நேரம் காத்து நின்று இருக்கிறேன். எனவே பகவான் பாதபலத்தை தந்திருக்கிறார்" என்றார் சிரித்த படியே....

    ×