search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்"

    • பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.
    • குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம்.

    இயல்பான குடும்ப பெண்களை, பங்கு சந்தை முதலீட்டாளர்களாக மாற்றி வருகிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். சென்னையை சேர்ந்தவரான இவர், பங்குசந்தையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர். தனக்கு நன்கு பழக்கமான பங்கு சந்தையை, குடும்ப பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், அதை திறம்பட செய்து வருகிறார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஆன்லைன்-ஆப்லைன் பயிலரங்கம் மூலமாகவும் பெண்களுக்கு பங்குசந்தை கலையை கற்றுக் கொடுப்பவரிடம் பேசினோம். இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல், பங்கு சந்தையில் களமிறங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டுதல் வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை இதோ...

    * எப்படி தொடங்கியது இந்தப் பயணம்?

    எனக்கு பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் சார்ந்த அனுபவமும், படிப்பினையும் இருந்ததால், அதை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். சிறு முயற்சியாகத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பங்கு சந்தை முதலீட்டாளர்களாக, அந்த துறை சார்ந்த பணியாளர்களாக மாற்றி இருக்கிறேன்.

    * பங்கு சந்தை குடும்ப பெண்களுக்கு ஏற்றதா?

    மற்றவர்களைவிடவும், குடும்ப பெண்களுக்குத்தான் சிறப்பானது. காலை 9 மணிக்கு தொடங்கும் பங்கு சந்தை வர்த்தகம், மாலை 3.30 மணி வரை நடைபெறும். இந்த நேரம், ஒருசில குடும்ப தலைவிகளுக்கு பிசியான நேரமாக இருந்தாலும், ஒருசிலருக்கு ஓய்வு நேரமாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில், தையல் வேலை, ஆரி வேலைப்பாடுகள், யூ-டியூப் பொழுதுபோக்குகள் என நேரம் செலவாகும். இப்படி பொழுதுபோக்காக கழிக்கும் நேரத்தை, குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம். கூடவே, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் முடிந்த பங்களிப்பை பங்கு சந்தை வாயிலாக பெறலாம்.

    * குடும்ப பெண்கள், பங்கு சந்தையில் இணைவது எப்படி?

    ரொம்ப சுலபம். குடும்ப பெண்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொதுவானதுதான். டிமெட் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிரபல வங்கிகளே இந்தவகை கணக்குகளை வழங்குகின்றன. 15 நிமிடங்களில் டிமெட் கணக்கை தொடங்கிவிட முடியும். அதேபோல பங்குகளை வாங்கி, விற்க, நிர்வகிக்க நிறைய 'புரோக்கிங்' இணையதளங்களும் இயங்குகின்றன. அதில் ஒன்றில், உங்களுக்கு விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள்.

    * சிக்கலான பங்குசந்தையை குடும்ப பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ள முடியுமா?

    முடியும். பங்கு சந்தையின் செயல்பாடுகள் எளிமையானதுதான். அதன் அடிப்படையை புரிந்து கொண்டால், எளிமையாக வர்த்தகம் செய்யலாம். டி.வி. சேனல்கள், யூ-டியூப் சேனல்கள், பேஸ்புக் ரீல்ஸ், ஆன்லைன் படிப்புகள், வாட்ஸ் ஆப் குரூப்கள், கருத்தரங்குகள்... இப்படி நிறைய தளங்களில், பங்கு சந்தை பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. நிறைய தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் அதுபற்றிய படிப்பினையை வழங்குகின்றன. என்.ஐ.எஸ்.எம். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டி மார்க்கெட்) கல்வி நிறுவனத்தில், ஷேர் மார்க்கெட் பற்றிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

    * பயிற்சி வகுப்புகள் அவசியமா?

    உங்களது சேமிப்பை முதலீடு செய்ய இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் பயிற்சி வகுப்புகளும், வல்லுநர்களின் வழிகாட்டுதலும் அவசியம். இல்லையேல், உங்களது சேமிப்பு கரைந்துவிடும்.

    * பங்கு சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறதா?

    நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் இளம் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

    * பங்கு சந்தை, கல்லூரி மாணவிகளுக்கு பயன்படுமா?

    வணிகம் சார்ந்து படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பங்கு சந்தை சிறப்பான பயிற்சிக்களம். ஒரு பங்கு வாங்கினால், அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் நமக்கு வருடந்தோறும் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், பிரபல நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் எப்படி தயாரிக்கின்றன, நிதி மேலாண்மையை எப்படி கையாள்கின்றன... போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

    * பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் குடும்ப பெண்களுக்கு சிக்கல் நிறைந்த வேலைகளா?

    இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. பெண்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் 'வாங்க', 'விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும்.

    * பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்?

    கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    * பங்கு நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது?

    என்.எஸ்.இ. எனப்படும் இணையதளத்தை திறந்து பார்த்தால், 'நிப்டி 50' என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாக கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். அதுபோக, உலக நடப்புகள், உலக வர்த்தகம் போன்றவற்றையும் கவனித்து, அதற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

    * துறை சார்ந்த அறிவு தேவையா?

    நிச்சயமாக. நடப்பு 'டிரெண்ட்' பற்றி தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, ஒவ்வொரு காலகட்டத்தில் எந்த மாதிரியான துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த துறை அபார வளர்ச்சி பெறும், எது வீழ்ச்சி பெறும் என்பது போன்ற பொது சிந்தனைகளும், உங்களது பங்கு மதிப்பினை உயர்த்தி தரும்.

    * புதிதாக பங்கு சந்தைக்குள் நுழையும் பெண்கள் செய்யக்கூடாத ஒன்று எது?

    அவசரப்படக்கூடாது. ஒரு பங்கு வாங்குகிறோம் என்றால், அது சேமிப்பு என நினைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கழித்து, அதன் மதிப்பு கூடியிருக்கும் வேளையில், அதை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். இன்று முதலீடு செய்து, நாளை பல லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்றால், அதே அளவிற்கு நஷ்டத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    * பங்கு சந்தை முதலீடு அபாயம் தரக்கூடியதா?

    ஆம்..! கவனமாக செயல்படாத வரை அது, அபாயம் தரக்கூடியதுதான். ஆனால் தகுந்த படிப்பினையோடு கையாளும்போது, அது சிறப்பான முதலீட்டு தளமாக மாறிவிடும்.

    * பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசு அமைப்புகள் உண்டா?

    இருக்கிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் 'செபி' பங்கு நிறுவனங்களுக்கும், பங்குகளை வாங்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அது இவ்விரு பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    • சிவகங்கையில் தொழில் வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

    சிவகங்கை,

    சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறுத் துறைகளைச் சார்ந்த

    முதன்மை அலுவ லர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அடித்தளமாகவும், உதவிகரமாகவும் அமையும்.

    அறிவாற்றலைப் பொ றுத்தே எதிர்காலத்தில் நீங்கள் நல்ல வேலைவாய்ப்பை பெறமுடியும். குறிப்பாக அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக பேச்சாற்றால் திறமையை வளர்ப்பது முக்கியமாகும். கல்வி த்தகுதியின் அடிப்படையில் எளிதாகப் பெறும் வேலைவாய்ப்புக்களை தேர்ந்தெடுத்து அதைப் பெறு வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் துறைகள் குறித்து அதனைப் பற்றிய தெளிவான புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

    மேலும் அரசின் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு ஏதுவாக TNPSC, IBPS போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்க ளுக்கென அதற்கான பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திலும், மாவட்ட மைய

    நூலகத்திலும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலுள்ள சிவகங்கை படிப்பு வட்ட மையத்திலும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் சிவகங்கையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பிலும் இளைய தலைமுறையினர்கள் தொழில் பயன்பெறு வதற்கு ஏதுவாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டும், ஆர்வத்தின் அடிப்படையிலும் சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள்.
    • இன்முகத்துடன் பேசுங்கள்.

    தொழில்துறையில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    உழைக்க தயாராகுங்கள்

    வேலை கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். அது தன் எடையை விட மிக அதிக எடையை தூக்கி கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதே உழைப்புக்கு உதாரணம். நாளைய தேவைக்கு இன்றே அது களத்தில் இறங்கி விட்டது. நீ மட்டும் உழைக்க தயங்குவது ஏன்? சோம்பலை உதறி தள்ளு. எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள். அந்த உழைப்பு நிச்சயம் உங்களை சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டும்.

    இன்முகத்துடன் பேசுங்கள்

    தொழிலை நடத்துபவர்கள் தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும், நுகர்வோர்களிடமும் இன்முகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் கடினமான வேலை என்றாலும் அதை துச்சமாக மதித்து வேலைக்காரர்கள் கூடுதல் நேரமும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். சிடுமூஞ்சியுடன் பேசினால் எதிர்பார்த்த வேலை நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.

    நுகர்வோரும் நம்முடைய இன்முக பேச்சில் மகிழ்ந்து கூடுதல் பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு உண்டு. இன்முகத்துடன் பேசுங்கள். அது உங்கள் மதிப்பை தானாக மற்றவர்களிடம் இருந்து உயர்த்தி காட்டும்.

    நேரம் தவறாமை

    தொழில் செய்பவர்கள் நேரம் தவறாமல் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய விரும்பும் பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் தான் மீண்டும் ஆர்டர் கிடைக்கும். அது போல் நேரம் தவறாமல் பணிக்கு செல்ல கற்று கொள்ள வேண்டும். சூரியன் ஒருநாள் நேரம் தவறி உதித்தால் நிலைமை என்னவாகும். சிந்தித்து செயல்படுங்கள். நேரத்துடன் உழையுங்கள்.

    முயற்சியை கைவிடாதீர்கள்

    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப முயற்சி செய்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும். ஆதலால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். தோல்வி கிடைக்கிறதே என்று செய்ய முயன்ற தொழிலில் பின்வாங்கினால் நிச்சயம் சாதிக்க முடியாது.

    அந்த தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். பின்னர் தோல்வி தவிர்ப்பது எப்படி என்று உழையுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். கரையை தொடமுடியவில்லை என்று எப்போதும் அலைகள் தன் முயற்சியை கைவிடுவதில்லை. என்றாவது ஒருநாள் சுனாமி, பேரலைகளுடன் அது கரையை எட்டும்.

    திட்டமிடுதல் அவசியம்

    ஒருவர் தொழில்முனைவராக வர வேண்டும் என்றால் அதற்கு திட்டமிடுதல் அவசியமாகும். நாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பெறலாமா? என்று ஆராய்ந்து திட்டமிட்டு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியம் தோல்வியில் தான் முடியும். எனவே நீங்கள் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்று ஆராய்ந்து, அந்த தொழிலை மேற்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த தொழிலில் வெற்றியை பெற முடியும்.

    விளம்பர யுக்தி

    இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்கள் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான். ஆதலால் நீங்கள் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கொட்டும்.

    இதுபோல் இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
    • நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அர விந்த் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத் தொகையினை வழங்கினார். இதில் துணி வியாபாரம் செய்திட 17 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்மு தல் செய்யவும், ரூ.15 ஆயி ரத்திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட் சம் மானியமாகவும், மீன் வியாபரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ. 1 லட்சம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகையினை யும், வருவாய்துறையின் சார்பில் ஒரு நபருக்கு விதவை உதவித்தொகை ஆணையினையும் கலெக் டர் அரவிந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித் துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி மற்றும் அனைத் துத்துறை அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    தாலுகா, வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளில் முதல்வரின் முகவரித் துறை சிறப்பு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டரின் அறிவிப்பில், 'முதல்வரின் முகவரித் துறை சிறப்பு குறைதீர்வு வாரமானது இன்று (20-ந் தேதி) தோவாளை வட் டாட்சியர் அலுவலகம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 21-ந் தேதி அகஸ்தீஸ்வரம் வட் டாட்சியர் அலுவலகம், ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 22-ந் தேதி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம், தக்கலை மற்றும் திருவட்டார் வட் டார வளர்ச்சி அலுவல கங்களிலும், 23-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் வட்டாட்சி யர் அலுவலகம், கிள்ளியூர் மற்றும் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களி லும், 24-ந் தேதி விள வங்கோடு வட்டாட்சியர் அலுவலகம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலு வலகங்களிலும் நடைபெற வுள்ளது.

    பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவ ரித்துறை சிறப்பு குறைதீர்வு வாரத்தில் கொடுத்து பயன் பெறலாம்' என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
    • தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

    தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

    விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.

    இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.

    எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கூடுதல் விவரங்களுக்கு 04652-260008 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றும் பொருட்டு தொழில்களுக்கு தோள் கொடுத்து தொழில் வளம் பெருக்க புதிய தொழில்முனைவோர்களை கண்டறியும் பொருட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம் 15-ந் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும், 22-ந் தேதி தோவாளை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு செயல்ப டுத்தி வரும் வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ( UYEGP ) நமது மாவட்டத்திற்கு 98 நபர்களுக்கு ரூ.78 லட்சம் மானிய திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பலசரக்கு வியாபாரம், மின்சார பொருட்கள் வியா பாரம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து வகை யான வியாபாரங்களுக்கும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது . ரூ.5 லட்சம் வரையுள்ள திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு ரூ .385 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும்.

    இத்திட்டத்தில் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மத்திய அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 189 நபர்களுக்கு ரூ.546 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் சிறப்பு பிரிவினர் தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சம் 35 சதவிகிதம் மானியம் பெற வழிவகை

    உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற www.kviconline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மேற்படி கடன் திட்டங்க ளுக்கு விண்ணப்பிக்க கடவுசீட்டு அளவு நிழற்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , விலைப்புள்ளி, கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் மேற்படி அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ப வர்களுக்கு கூட்ட அரங்கி லேயே விண்ணப்பம் பதிவேற்றம் செய்து வழங்கப்படும் .

    மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் , தொழிற்பேட்டை கோணம் அஞ்சல் , நாகர்கோவில் -4 அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
    • ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.

    பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.

    அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.

    சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.

    ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.

    பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    • எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
    • தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

    தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

    தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.

    சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.

    முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    • சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
    • சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.

    வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.

    சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    உணவு பொருள் சிறுதொழில்:

    1.மசாலா பொடி தயாரிப்பு

    2.ஊறுகாய் தயாரிப்பு

    3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு

    4.ஜாம் தயாரிப்பு

    5.சிப்ஸ் தயாரிப்பு

    6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு

    7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு

    8.சிறு உணவகம்

    9.டீ கடை

    10.ஜூஸ் கடை

    11.சிற்றுண்டி விற்பனை கடை

    12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு

    சிறு விற்பனை தொழில்கள்:

    13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).

    14.சிறு பாத்திரங்கள் விற்பனை,

    15.அழகு சாதன பொருள்கள் விற்பனை

    16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை

    17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை

    18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை

    19.பழம் விற்பனை

    20.காய்கறி விற்பனை

    ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை

    பண்ணை சிறு தொழில்கள்:

    21.முயல் வளர்ப்பு

    22.கோழி மற்றும் காடை வளர்ப்பு

    23. தேனீ வளர்ப்பு

    24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )

    மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .

    மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.

    நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.

    ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.

    • ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.
    • பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

    படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

    பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊர்காய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.

    தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

    மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.

    வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலே உங்கள் பிஸ்னஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''

    • அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது.
    • இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும்.

    ஒரே மாதிரியான ஆபீஸ் கேபின் செட்டப், ஏ.சி. காற்று... எத்தனை நாள் இப்படியே வேலை செய்வீர்கள்? அதனால்தான் அவுட்டோர் ஆபீஸ் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவுட்டோர் ஆபீஸ் என்றால் அங்கேயும் வயர்லெஸ் இன்டர்நெட், லேப்டாப் சார்ஜிங் பாயிண்ட் என எல்லாமே இருக்கும். என்ன ஒன்று...? அலுவலகம் இயற்கை நிறைந்த திறந்தவெளியில் இருக்கும்.

    "அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது. அதை எதிர்கால சந்ததியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பேசும் ஜெர்ரி டாடே இதை வெறுமனே பேசவில்லை. கட்டிட வடிவமைப்பாளரான ஜெர்ரி, 2005-ம் ஆண்டே இயற்கையோடு இணைந்த வெளிப்புற அலுவலகத்தை லண்டனின் ஹோக்ஸ்டன் சதுக்கத்தில் கட்டமைத்தவர்.

    பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க சோதனை முறையில் உருவாக்கப்பட்டதே எட்டு நபர்கள் மட்டும் பணிபுரியும் இந்த அவுட்டோர் ஆபீஸ். ஹியூமன் ஸ்பேஸ் குளோபல் ரிப்போர்ட் ஆய்வுப்படி, இயற்கையோடு இணைந்த அலுவலகத்தின் மூலம் பணியாளர்களின் திறன் 15 சதவீதம் உயர்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

    "இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும். பணியாளர்களின் செயல்பாடுகளில் கிரியேட்டிவிட்டி மெல்ல அதிகரிக்கும்" என உறுதியாகப் பேசுகிறார் ஜெர்ரி.

    தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில் தொடங்கப்பட்டுள்ள அவுட் பாக்ஸ் என்ற வெளிப்புற அலுவலகத்தில் வை-பை, டேபிள்கள், அலங்காரங்கள் என அனைத்தும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். இது கோடை காலத்திற்கு மட்டும்தான்.

    "சலிப்பூட்டும் அலுவலக கேபின்களிலிருந்து மனிதர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விடுவிக்க நினைத்தே இதனை உருவாக்கினோம்" என்கிறார் அவுட்பாக்ஸை உருவாக்கிய பீட்டர்சன் நிறுவனத்தின் லாரி யான்கோவ்ஸ்கி.

    வெளிப்புற அலுவலகம் கோடை காலத்தில் மட்டும் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், மழை. ஏனெனில் அலுவலக கட்டமைப்பு பெருமளவு சூரிய வெளிச்சத்தை நம்பியே இருப்பதால், மழை வரும்போது அலுவலகத்தை முழுக்க தார்பாயால் மூடுவது போன்ற ஏற்பாடுகள் தேவை. இதற்கடுத்து இரைச்சல். ஒரு பூங்காவில் அலுவலகம் போன்று வேலை செய்தாலும், ஏ.சி. மட்டுமே உறுமும் அலுவலக அமைதி கிடைக்காது.

    "வெளிப்புற அலுவலகத்தைச் சுற்றி மெஸ், கடைகள், பஸ்கள் என செல்வதால் தனிமையில் பணியாற்ற விரும்புபவருக்கு இச்சூழல் சிரமம்தான்" என்கிறார் யான்கோவ்ஸ்கி.

    கூகுள், ஸ்பாட்டிபை போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக 'அவுட்டோர் ஆபீஸ்' முறையை பயன்படுத்தினாலும் பல்வேறு நிறுவனங்களுக்கு இது புதுசுதான். எதிர்காலத்தில் இந்த அவுட்டோர் ஆபீஸ் சாத்தியமாக அதிக வாய்ப்புண்டு.

    • சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்.
    • முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள்.

    நீங்கள் புதிய தொழில் தொடங்கும் சிந்தனையில் உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான யோசனைகள் தான் இவை. இதை பின்பற்றினால், வெற்றிக்கொடி பறக்க விடலாம். அப்படி என்னதான் தெரிந்து கொள்ள போகிறீர்கள் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.:-

    சந்தையை தேர்வு செய்தல்

    சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.

    எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் தொடங்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம். நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில் முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள்.

    சிறியதாக தொடங்குங்கள்

    சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

    புதிய சிந்தனை

    அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். இது வரை யாரும் செய்திராத ஒரு விஷயத்தை செய்யுங்கள். ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது.

    கடைசியாக இருங்கள்

    ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது. கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது. எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.

    ×