search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னம்பிக்கை"

    • வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
    • நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.

    1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

    2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.

    3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.

    4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.

    5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.

    7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.

    • பெண்கள் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு வருகின்றனர்.
    • தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும்.

    வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.

    தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக் கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும்.

    இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம். இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும்.

    • அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.
    • அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.

    பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை. அப்படி இருக்க உழைப்பு, உழைப்பு என்று உண்ண, உறங்க நேரம் இன்றி உழைப்பவர்களை பார்த்து இருக்கிறோம். அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல் அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வை தொலைப்பவர் களையும் பார்க்கிறோம். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிடவும் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தை துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப் போவதும் இல்லை. மனிதராய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.

    மாடமாளிகையில் வாழ்பவர்கள் முதல் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப்பம் ... தனி மரியாதை .... தனி கவனம் உண்டு.

    அதிர்ஷ்டம் என்றால் என்ன?அதை அடைவது எப்படி? நாம் விரும்பும் போது வருவது அதிர்ஷ்டமா? அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால் வாஸ்துவால் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட கற்களால் அழைக்க முடியுமா? தேடும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் முகம் காட்டுவது ஏன்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது ஐந்தாமிடம். ஒருவரின் ஜனன காலத்தில் ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி மற்றும் ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களே அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது.

    அதே நேரத்தில் பிரபஞ்சத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடிய தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி ஒருவருக்கு வழங்கும் அதிர்ஷ்டத்தை பெற என்ன தகுதி வேண்டும் என்பதை சிறு புராண கதை மூலம் தெரிந்து கொள்வோம்.

    அர்ஜுனனும், கிருஷ்ணரும் உலாவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார். முதியவருக்கு மகிழ்ச்சி. `ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.


    சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலை உயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினார். முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார்.

    இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.

    அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

    சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.

    அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்துவிடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.

    செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.

    யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.

    இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல். சந்தோஷ மிகுதியால் `சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்.

    அதேநேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

    அர்ஜுனன் கண்ணனிடம், `வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே… ' இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலை உயர்ந்த கல்லை தானும் உபயோ கிக்காமல், மற்றவருக்கும் பயன்படா மல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவை இரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிட மிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.

    இந்த கதையின் நீதி பொது நலமுள்ள வர்களுக்கும், தான, தர்மம் செய்பவர்களுக்கும், பாவ புண்ணியம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ஷ்ட கடாட்சம் கிடைக்கும் என்றார். அத்துடன் எந்த செயலாக இருந்தாலும் அதன் பலன் கிடைக்க போதிய கால அவகாசம் தேவை.

    அதிர்ஷ்டம் ஒருவரைத் தேடி வரும் வரை பொறுமையாக விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.

    • புத்தக திருவிழாவில் பேராசிரியை பர்வீன்சுல்தானா அறிவுரை
    • வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம் உள்பட பல்ேவறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    நீலகிரி புத்தக திருவிழாவின் 3-வது நாளில் 278 மாணவர்கள் உள்பட 1403 பேர் கலந்து கொண்டு ரூ.79,585 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி புத்தக திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சி.எஸ்.ஐ ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம், சமூகவிழிப்புணர்வு நாடகம் மற்றும் பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புத்தக ங்களை படிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர் அன்புகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் படிப்பு மட்டுமின்றி நற்பண்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    குழந்தைகள் எண்ணிய இலக்கை எட்டும்வரை தன்னம்பிக்கையுடன் பாடுபட வேண்டும். வெற்றி, தோல்வி என கருதாமல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதுவே உங்களின் முதல் வெற்றி என நினைக்க வேண்டும். மனஉறுதியுடன் இலக்கை எட்டும்வரை விடாமுயற்சியுடன் போராட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

    புத்தகங்களை வாசிக்க தினமும் ஒருசில மணி நேரங்கள் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் பல நல்ல விஷயங்கள் உண்டு.அதனை நீங்கள் படித்து மனதில் நிறு த்தி வாழ்க்கையில் பி ன்பற்ற வேண்டும். சிகரம் அடையும்வரை நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் எனில் நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடந்து கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது.
    • திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம்.

    எந்த ஒரு தொழிலில் ஈடுபட விரும்பினாலும் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டியது தான். யோசனையே இன்றி கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினோம் என்றால் அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் நமது எண்ணம் வெறும் யோசனையாகவே இருந்து விட்டால் எந்தவித பயனும் இல்லை.

    தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு நன்றாக யோசனை செய்த பின்னர் அதை ஆக்கபூர்வமாக செயல்படும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அபரிமிதமான ஆர்வத்தை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டும்.

    சாதாரணமாக எந்த ஒரு செயலோ அல்லது தொழிலோ புரிய வேண்டுமானால், அதில் நிறையவே சிரமங்கள் உண்டு. கஷ்டப்படாமல் எதிலும் வெற்றி பெறவும் இயலாது. ஏன், செயல்படவும் இயலாது.

    எனவே மிக அதிக அளவு யோசனை மற்றும் ஆராய்ச்சியில் இறங்கினால் அதில் ஏராளமான பிரச்சினைகள், கஷ்டங்கள், பாதகங்கள் தென்படும். முடிவில் அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பெண்கள் ஓரளவு சிந்தித்து விட்டு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும். பிறகு அதில் வரும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். சாதாரணமாக மாத வருமானம் பெறுபவர்களுக்கும், தொழில் மூலம் சம்பாதிப்பவர்களுக்கும் தூரத்தில் இடைவெளி உண்டு.

    சமான்யமானவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வீடு, ஒரு வாகனம் என்ற அளவிலேயே இருப்பது கண்கூடாக காணும் உண்மை. ஆனால் தொழில் மூலம் சம்பாதித்து பல வீடுகள், பல வாகனங்கள், ஏராளமான பணியாட்கள் என பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையுடன் திகழ்கின்றனர்.

    இது தானாகவோ, வெகு எளிதாகவோ வந்ததாக நிச்சயம் இராது. இரவு, பகல் பாராது உழைத்து எண்ணற்ற சிரமங்களை சமாளித்து அவற்றை தக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது. திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம். யோசனை ஆக்கப்பூர்வமாக இருத்தல் வேண்டும். தடைக்கல்லாக இருத்தல் கூடாது.

    ஒரு ஆற்றை கடக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு முழுவதிலும் உள்ள ஆழத்தை எப்படி கண்டறிவது? ஆற்றில் இறங்கி மெதுவாக தடவித்தடவி செல்ல வேண்டியது தான்! கடக்க இயலாத அளவு ஆழம் இருப்பின் மாற்று வழி தேட வேண்டியது தான். இல்லாவிடில் ஆற்றையே பார்த்துக்கொண்டு கரையிலேயே உட்கார வேண்டியது தான்.

    • தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது.
    • திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான், நல்ல சம்பளத்தில், சிறப்பான பணியிடத்தில் உங்களுக்கான பணிச்சூழலைக் கட்டமைக்க முடியும்.

    1. தொழில்நுட்ப அறிவு

    தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    2. சிக்கல் தீர்க்கும் திறன்

    நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    3. மேம்பாடு

    கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத கற்றல் செயல்முறையாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.

    4. தொடர்பு திறன்

    உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    5. நிறுவன திறன்கள்

    ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.

    6. நேர மேலாண்மை

    நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிக்க உதவுகிறது.

    • நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
    • பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    பெண்களுக்கு குடும்பத்திலும் தொழிலிலும் எதிர்பாராத விதமாக நிதி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை சமாளிப்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்திருப்பது நன்மை தரும். பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    நிதி திட்டமிடல்

    எந்த செயலில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கான நிதி திட்டமிடல் என்பது முக்கியமானது. எப்போதும் பட்ஜெட்டை விட சிறிது கூடுதலாகவே நிதியை இணைத்து திட்டமிட வேண்டும். தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டமிடும் போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மற்றவர் உதவியின்றி தீர்வு காண முடியும். இதுவே தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை தகுதியாகும்.

    அவசரகால நிதி

    தொழிலை பொறுத்தவரை அவசர கால நிதியை தனியாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச்செலவு, உபகரணங்கள் சேதமடைதல் எதிர்பாராத விபத்து, தொழில் இழப்பு என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நிதி உதவும். இந்த நிதியை எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர கால நிதிக்கென வங்கியில் தனி கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். அதன் மூலம் வட்டித்தொகையும் கூடுதலாக கிடைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும்.

    கடனை திருப்பி செலுத்துதல்

    யாராக இருந்தாலும் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு அடிப்படையாக கடன் பெறுவது இயல்பானது. இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பி செலுத்துதல் அவசியமானது. கடனைக்கண்டு கொள்ளாமல் விடும்போது மொத்தமாக செலுத்தும் நெருக்கடி ஏற்படலாம். இதனால் நிதி சுமையை சமாளிக்க முடியாமல் தவிப்புகுள்ளாகலாம். எனவே முடிந்தவரை கடனை அவ்வப்போது திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்துவதன் மூலம் கடனுக்கான தரவரிசை அங்கீகாரத்தைபெற முடியும்.

    முதலீடுகள் அவசியம்..

    எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சிறந்த வழி முதலீடு செய்வதாகும். தொழில் தொடங்கும் போதே முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும். நிதி நெருக்கடி என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது. கடன் பெறுவது மட்டுமின்றி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றாலும் அதனை சமாளிக்க முடியும்.

    பிரச்சனையின் தீவிரத்தை உணருதல்

    நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்பு பிரச்சனையின் தீவிரத்தை உணர வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை தகுந்த ஆலோசகரிடம் கேட்டு சரியான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலை பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதுடன் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும்.

    சந்தைப்படுத்தும் உத்தி

    நிதி நெருக்கடியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதுடன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தியையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

    • தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
    • தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைப்பவர்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி அடைவது என்பது இக்கட்டுரை விளக்குகிறது.

    தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து துறை சார்ந்த செய்திகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகவல்கள் என்பது அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்வது தான் தொழில் முனைவோர்களுக்கான அடிப்படை தகுதியாக உள்ளது. அதாவது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி குறுகிய காலகட்டத்தில் தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.

    தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி தலைமை பொறுப்பில் உள்ளோர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் தொழிலை நடத்தி செல்வதற்கான மனத்தெளிவு கிடைக்கும். தம்மைப்பற்றி பெருமையாகவோ அல்லது தாழ்வாகவோ நினைப்பவர்கள் எளிதாக சூழ்நிலை கைதிகளாக மாறுகிறார்கள். எனவே தம்முடைய பலம் மற்றும் பலவீனம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் ஒரு செயலை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதில்லை தெளிவாக சொல்வதன் மூலம் மற்றவர்களது நம்பிக்கையை எளிதாக பெறுகிறார்கள்.

    தொழில் முனைவோர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதற்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் தங்களுக்குரிய இடத்தை கச்சிதமாக அறிந்திருப்பதுடன் சக போட்டியாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

    திறமையான தொழில் முனைவோர்கள் தங்கள் செயல் திட்டங்களை சரியாக திட்டமிடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை, உடனடியாக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகிய தகவல்களை தெளிவாக அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக தினமும் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளப்படும் குறிப்புகள் கூட வெற்றிக்கு அடிப்படையாக அமையக்கூடும். மேலும் எண்ணங்கள் குறிப்புகளாக எழுதப்படும் போது அவை ஒருவரது நிறை குறைகளை வெளிக்காட்டும் கண்ணாடியாக அமைகிறது. தினமும் டைரியில் அன்றைய தினத்தில் நடந்தவை பற்றி குறிப்பாக எழுதுவதன் மூலம் ஒருவரது நினைவாற்றல் மேம்படுகிறது. வெற்றிக்கு அது அவசியம்.

    தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் சொந்த அனுபவங்கள் மூலமாகவும், சரியான நபர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறனை பெற வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைக்கும் பெண்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    • எளிதில் உணர்ச்சிவசப்பட்டால் எந்த காரியமும் கைகூடாது.
    • எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது.

    எளிதில் உணர்ச்சிவசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும். சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை. அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம்.

    தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம்.

    வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும்.

    உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    • எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும்.
    • கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

    மனிதராய் பிறந்த எல்லோரிடத்திலுமே ஆற்றலும், அறிவும்,திறமையும் உண்டு. பலர் தங்களது தகுதியையும், திறமையையும் அறியாமல் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள். நம்மை நாமே கேள்வி கேட்பதன் மூலமாக நமக்குள் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றின் மூலம் வாழ்வில் உயர முடியும்.

    பலம்என்ன ?

    தங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் பலர் பலம் என்னவென்று அறிவதற்கு சிரமப்படுவார்கள். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? எவற்றில் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்? என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் நாமே கேட்பதன் மூலம் நம்முடைய பலம் என்ன என்பதை எளிதாக கண்டறியலாம்.

    பிறரிடம் கேட்டறிதல்

    எதிர்மறையான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது நமது பலம் என்னவென்று தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் பெற்றோர் ஆசிரியர், நெருங்கிய நண்பர் போன்றவர்களிடம் நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? என கேட்டறிந்து அந்த திறமைகளை மெருகேற்றிக்கொள்ளலாம்.

    தள்ளிப்பபோடுவது கூடாது

    நமது கேள்விகளுக்கு விடை கிடைத்து திறமைகளை அறிந்த பிறகு அவற்றை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும். அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்மைவளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

    தயக்க வேண்டாம்

    திறமைகளை மேம்படுத்தி கொள்ளும் முயற்சியின்போது நமக்குள் பல சந்தேகங்கள் எழலாம். எந்த தயக்கமும இல்லாமல் அவற்றுக்கான விடைகளை நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு செயலை செய்யும் போதோ ஒரு விஷயத்தை கற்கும்போதோ மனதில் கேள்விகள் உருவாகும். அவற்றுக்கான விடைகளை கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறலாம்.

    முக்கியமான கேள்வி

    முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டு கொள்ளும் போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும் அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றி அமைக்க வேண்டும்.

    கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நம்மிடம் நாம் கேட்கும் கேள்விகளும், அதற்கு பெறுகிற பதில்களும் நமது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

    • கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார்.
    • ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் மோகன் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர்.

    நல்ல உடல் தகுதியுடன் கை, கால்கள் திடகார்த்தமாக உள்ள சிலர் உழைக்காமல் சோம்பேறிதனமாக ஊதாரியாக திரிகிறார்கள். சிலர் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் வேலைகளை அதாவது உட்கார்ந்து பார்க்கும் வேலைகளை சொந்தமாகவோ அல்லது மற்றவர்களை சார்ந்திருந்தோ செய்வார்கள்.

    ஆனால் புதுவையில் ஒரு காலை இழந்த ஊனமுற்ற நபர் ஒருவர் வாழ நினைத்தால் எப்படியும் வாழலாம் என்பது போல ஒற்றைக்காலில் 12 மணி நேரத்திற்கும் மேல் நின்று கொண்டு வேலை செய்கிறார்.

    புதுவையை சேர்ந்த மோகன் (வயது44) என்பவர் பைக்கில் பஸ் மோதிய விபத்தில் ஒரு காலை இழந்த நிலையில் உள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். 6-ம் வகுப்பு வரை அவர் படித்துள்ளார்.

    கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார். அவர் பங்குக்கு வரும் பைக்குகள் மற்றும் கார்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தனது ஒரு காலை ஊன்றியபடி ஓடோடி சென்று பெட்ரோல் போடுகிறார். அவர் 20 ஆண்டாக இந்த வேலையில் உள்ளார்.

    ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் அவர் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர். ஒரு காலில் அவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதை பார்த்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

    என்னால எதுவுமே செய்ய முடியலன்னு சோம்பேறிதனமாக இருக்கும் வாலிபர்களுக்கும் அப்பா-அம்மா உழைப்பில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த வீடியோ உள்ளது.

    ×