search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம் , திருமுருகன் பூண்டி , வெள்ளகோவில் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான போனஸ் வழங்கிட வேண்டும், ஆண்டு களாக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கை வலியுறுத்தி இன்று காலை 300 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், 'என் குப்பை என் பொறுப்பு' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்கள் வழியாக விழிப்புணர்வு, கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் நகரங்களிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், மரக்கன்று நடுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் அடிப்படையில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் உடுமலை நகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள், சங்கங்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமையில், மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    • பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
    • அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது.

    அவிநாசி :

    அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

    பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர் வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணைய தளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் நிறுவனர் நெல்சன், உடுமலை நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகர்நல அலுவலர் கௌரி சரவணன் ,சுகாதார ஆய்வாளர் செல்வம், வியாபாரிகள் சங்கதுணைசெயலாளர் தங்கமணி, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.
    • சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தூய்மை பணி செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் சில காரணங்களுக்காக தங்களது சொந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வீட்டில் மகன் முரளி மட்டும் தங்குவது வழக்கம். நேற்று வேலை விஷயமாக அவர் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டில் உள்ள கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் செயின், வெள்ளி கப்பு, வெள்ளி விளக்கு, மகளுடைய பிரசவத்திற்காக வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்று உள்ளார்கள்.

    காலையில் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபால கிருஷ்ணன் ஆரல்வா ய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் பிரான்ஸிஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×