search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலோ விளையாட்டு போட்டி"

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
    • வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர்.

    வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது.

    அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி.

    விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

    கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.

    ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கரை விளையாட்டுகள், சுற்றுலா துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வி திட்டத்தில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைத்துள்ளோம்.

    விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் என்பதை உள்ளடக்கமாக கொண்டது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் ஆகும்.

    ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற உழைத்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம். கேலோ இந்தியா முத்திரையில், வீர மங்கை வேலுநாச்சியார் இடம்பெற்றிருப்பது பெருமை.

    மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
    • விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

    நேரு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தைடைந்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.

    பிறகு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியாவின் முத்திரையான வீர மங்கை சிலையை நினைவுத் பரிசாக அளித்தார்.

    தொடர்ந்து, ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.

    பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தாக்கூரை வரவேற்கிறேன். தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது. 6வது கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

    ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தினோம். விளையாட்டுத் துறையில், இந்திய அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது.

    விளையாட்டுகளையும் கல்வியின் அங்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். தமிழக வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

    விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×