search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அணி"

    • 97 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது.
    • இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

    91 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    புனேயில் 2019-ம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

    தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் குவித்து முத்திரை பதித்து உள்ளனர்.

    இன்று காலை நடந்த போட்டிகளில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. இன்று மதியம் நிலவரப்படி தமிழ்நாடு 37 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் ஆகமொத்தம் 94 பதக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

    இன்று பிற்பகலில் நீச்சல் பந்தயத்தில் 1 தங்கப் பதக்கமும் 2 வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தக்க வைத்தது.

    மராட்டியம் 55 தங்கம் உள்பட 156 பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளது. அரியானா 35 தங்கம் உள்பட 103 பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது.

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
    • தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது.

    5-வது நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது.

    தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன. மல்லர் கம்பம் போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குத்துச்சண்டையில் 4 வெண்கலம், சைக்கிளிங் பந்தயம், வாள்வீச்சில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.

    தடகள போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழகத்துக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.

    ஸ்குவாஷ் போட்டியில் ஏற்கனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

    மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கலமும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

    வாள்வீச்சு போட்டியில் ஆண்கள் சப்ரே பிரிவில் அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.

    குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    தடகளம், ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழக பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாசில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன், 48 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    மராட்டியம், அரியானா முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. 

    • பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி
    • மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

    தக்கலை ;

    முளகுமூடு புனித ேஜாசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஜோலின் என்ற மாணவன் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதுபோல் பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அளவில் நடைபெறும் கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்கள். அவர்களை பள்ளி தாளாளர் டோமினிக் கடாட்ச் தாஸ், பள்ளி முதல்வர் பின்சி செபாஸ்டின், உடற்கல்வி ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தூய மரியன்னை பசிலிக்கா ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    ஜாம்ஷெட்பூர்:

    இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    62-வது தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. 19-ந் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

    சிவக்குமார், இலக்கிய தாசன், சாய் சித்தார்த், தமிழரசன், விஷால், ஆரோக்கியராஜீவ், பிரதீப் , ஜெஸ்வின் ஆல்டிரின், பிரவீன் சித்ரவேல், முகமது சலாகுதீன் போன்ற முன்னனி வீரர்களும், அர்ச்சனா, கிரிதரணி, சுபா, வித்யா, நித்யா, திவ்யா, ரோசி, ஹேமமாலினி, தீபிகா போன்ற முன்னணி வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    • 44-வது தேசிய சீனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் பீகாரில் தொடங்குகிறது.
    • இந்த போட்டிக்கான் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்கத் தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    44-வது தேசிய சீனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பீகாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்கத் தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார்.

    தமிழக அணி வருமாறு:-

    பெண்கள்:-பியூலா ஜாய்ஸ், கிருத்திகா, சுஜிதா, வர்ஷினி, நேத்ரா, ஜீவிகா, மனோன்மணி, கனிஷ்கா, வினோதினி, கிறிஸ்லின், லாவண்யா, ஹேமா ஜெயஸ்ரீ, சுவாதி, சபரீ ஸ்வரி, சுபஸ்ரீ, மணிமேகலை.

    ஆண்கள்:-இசக்கி துரை, ஸ்ரீதரன், சுபாஷ், தீபக்குமார், கோகுல், திவா கர், லோகேஷ்வரன், சஞ்சய், ரூபன்ராஜ், பிரதீப்குமார், லட்சுமிகாந்த், லோக பிரீத்தம், ராய்சன், சூர்யா, நிஷாந்த்குமார், கிரீஷ்.t

    • வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.
    • பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி. கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    கொச்சி:

    24-வது தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தை பிடித்தது. தமிழக அணிக்கு 5 பதக்கம் கிடைத்தது.

    14 வயதுக்குட்பட்ட தனிநபர் பாயல் பிரிவில் நிபின்ராஜ் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும், அபிலின் ஷானு (கன்னியாகுமரி) சபரே பரிசுப் வெள்ளிப் பதக்கமும், பெஜினோ ஜிப்ரின் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாயல் பிரிவில் தமிழக அணிக்கு (நிபின்ராஜ், ஆஸ்கெர், அகிலேஷ், திருக்குமரன்) வெண்கல பதக்கம் கிடைத்தது. அணிகள் சாப்ரே பிரிவில் வெள்ளிப்பதக்கம் (ஆஸ்பின், வினிஷ்குமார், ஷானு, நரேன்) கிடைத்தது.

    பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி.கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சாதனையை ஜெகதீசன் முறியடித்தார்.
    • இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது.

    இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே 2022 தொடரின் லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் எலைட் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழகம் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்டது.

    பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் நாராயன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலிருந்தே அருணாச்சல பிரதேச பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டனர். பவர் பிளே முடியும் போதே 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்த ஜோடி.

    எதிரணி பவுலர்களை கதற கதற அடித்த இந்த ஜோடியில் ஜெகதீசன் முதலாவதாக சதமடித்தார். அவருக்கு போட்டியாக சாய் சுதர்சன் சதமடிக்க அவரையும் மிஞ்சிய பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெகதீசன் இரட்டை சதமடித்தும் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.

    மொத்தம் 38.3 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்ற இந்த ஜோடி 416 ரன்கள் குவித்து மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாய் சுதர்சன் 154 (102) ரன்களில் ஆட்டமிழந்த போது பிரிந்தது. சில ஓவர்களில் 25 பவுண்டரி 15 மெகா சிக்சருடன் 277 (141) ரன்களை குவித்த ஜெகதீசனும் ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

    இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் 277 ரன்கள் குவித்த தமிழக வீரர் ஜெகதீசன் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் தமிழக வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

    இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 154 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் இத்தொடரில் ஏற்கனவே 4 சதங்களை அடித்திருந்த அவர் இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களின் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. நாராயண் ஜெகதீசன் : 5* (2022)

    2. விராட் கோலி : 4 (2008)

    3. பிரிதிவி ஷா : 4 (2021)

    4. ருதுரா கைக்வாட் : 4 (2021)

    5. தேவ்தூத் படிக்கல் : 4 (2021)

    அத்துடன் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட வீரர் என்ற வரலாற்றையும் ஜெகதீசன் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. நாராயன் ஜெகதீசன் : 15, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*

    2. ஜெய்ஸ்வால் : 12, ஜார்கண்டுக்கு எதிராக, 2019

    கடைசி 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதமடித்துள்ள அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    இதற்கு முன் இலங்கையின் குமார் சங்ககாரா (2105), தென் ஆப்பிரிக்காவின் அல்வீரோ பீட்டர்ஸன் (2014/15), இந்தியாவின் தேவதூத் படிக்கல் (2021) ஆகியோர் அதிகபட்சமாக 4 போட்டிகளில் 4 தொடர்ச்சியான சதங்களை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

    அது போக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. நாராயன் ஜெகதீசன் : 277*, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக,

    2022* 2. அலி ப்ரவுன் : 268, கிளாமோர்கன் அணிக்கு எதிராக, 2002

    3. ரோஹித் சர்மா : 264, இலங்கைக்கு எதிராக, 2014

    4. டார்சி ஷார்ட் : 257, குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2018

    மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலியாவின் டிராவீஸ் ஹெட் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

    அந்த பட்டியல்: 1. நாராயன் ஜெகதீசன் : 114 பந்துகள், அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*

    2. டிராவிஸ் ஹெட் : 114 பந்துகள், குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2021

    • ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
    • பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது.

    நேற்றைய போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.

    கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • போபாலில் ஏழுவர் விளையாடும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏழுவர் விளையாடும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், மணிப்பூர் உள்பட 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அணிக்கும், மத்திய பிரதேச அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அணி வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.தமிழ்–நாடு, ஆந்–திரா பேரில் 8 சிறுவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய அளவில் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தை திருப்பூர் வீரர் முகுந்தன் ஆதித்யா வென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை திருப்பூர் வந்த வீரர்களுக்கு பல்வேறு கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அகில இந்திய ஏழுவர் கால்பந்து கழக மாநில செயலாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் திவ்யபாரதி, வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×