என் மலர்
விளையாட்டு

தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு முதல் நாளில் 7 பதக்கம்
- முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
- பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தொடக்க நாளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் எஸ். தமிழரசு புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 10.22 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு பஞ்சாப் வீரர் குரீந்தர்வீர் சிங் 2021-ம் ஆண்டு 10.27 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
23 வயதான தமிழரசின் சிறந்த நிலை இதுவாகும். இதற்கு முன்பு இந்த ஆண்டு கொச்சியில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் 10.42 வினாடியில் கடந்ததே சிறந்ததாக இருந்தது. மற்றொரு தமிழக வீரர் ராகுல் குமார் 10.40 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். கர்நாடகாவுக்கு வெள்ளி கிடைத்தது.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை அபிநயா 11.58 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ரீகன், கவுதம் ஆகிய இருவரும் 5.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் கூட்டாக தங்கத்தை வென்றனர். இதற்கு முன்பு கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த எஸ்.சிவா 5.11 மீட் டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதை ரீகனும், கவுதமும் முறியடித்தனர்.
மற்றொரு தமிழக வீரர் கமல் லோகநாதன் 5 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் பெற்றார். போல் வால்டில் 3 பதக்கமும் தமிழகத்துக்கே கிடைத்தது.
ஆண்களுக்கான டெகத்லானில் 5 போட்டி முடிவில் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர்) தமிழக வீரர் மனோஜ் குமார் 3721 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளார். மற்ற தமிழக வீரர்களான ஜான்பால் 3664 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஸ்டாலன் ஜோஸ் 3611 புள்ளியுடன் 4-வது இடத்திலும் உள்ளார். டெகத்லானில் இன்னும் 5 போட்டிகள் இருக்கிறது.
பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இமாசலபிரதேச வீராங்கனை சீமா 15 நிமிடம் 46.92 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனையோடு தங்கம் வென்றார்.
பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு.ஐ. தேவாரம், தலைவர் டி.கே. ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ், தி.மு.க. விளையாட்டு பிரிவு செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2-வது நாள் போட்டிகள் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. டெகத்லான் போட்டிகளுக்கான 110 மீட்டர் தடை தாண்டுதல், வட்டு எறிதல், போல்வால்ட் ஆகியவை நடைபெற்றது.






