search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்"

    • பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.
    • ஏ.டி.எம். மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. மிகப்பெரிய பேருந்து நிலையமாக இருந்தபோதிலும், போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்யப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்திமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.

    ஏ.டி.எம். மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் 24-ந்தேதி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்திவைத்தால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், 'கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் மனுதாரர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. அதில் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளாம்பாக்கத்துக்கு செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல ஆந்திரா, கர்நாடகம் செல்லும் ஆம்னி பஸ்களை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், 'பயணிகளை இறக்கி விட்டு காலியாக வரும் பஸ்களை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். ஆனால் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. ரூ.400 கோடி செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பெண்களுக்கான பிரத்யேக வசதிகள், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், எஸ்கலேட்டர்கள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தூரத்தைத் தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை.

    கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண இன்று (வெள்ளிக்கிழமை) பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது' என்றார்.

    இதையடுத்து நீதிபதி, 'இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார். பின்னர், ''எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்ட வேண்டும். எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க இயலாது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது.
    • கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    * மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும்.

    * மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    * அம்பத்தூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், இப்போது மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 20 சதவீத பஸ்களை இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    வடசென்னை பகுதியை சேர்ந்த மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து மாதவரத்தில் இருந்து இந்த பஸ்களை இயக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17 நடைகள், விருதாச்சலத்துக்கு 6 நடைகள், கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரம் 16, கும்பகோணம் 14, சிதம்பரம் 5, நெய்வேலி 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5 நடைகளும், திண்டிவனத்துக்கு 10 நடைகள், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக 22 நடைகள், போளூர், வந்தவாசிக்கு 20 நடைகளும் என 160 நடைகள் இயக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் மாற வேண்டும் என்ற சூழல் இல்லாமல், இங்கிருந்தே மக்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும்.

    குறிப்பாக திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஒருநிலை இருந்ததை மாற்றி மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்படும். மாதவரம் பைபாஸ் வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படும்.

    2 ஆயிரம் நடைகள் கிளாம்பாக்கத்தை தொட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 1400 நடைகள் இயக்கப்படுகிறது.

    கிளாம்பாக்கத்தில் இருந்து இப்போதைக்கு கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேட்டுக்கு எப்படி இணைப்பு இருந்ததோ அதேபோல கிளாம்பாக்கம் சென்று பஸ் பிடிப்பதற்கு எல்லா பகுதியில் இருந்தும் பஸ் இயக்கப்படுகிறது.

    கேள்வி:- பொதுமக்கள் வீட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வது பெரிய சவாலாக உள்ளது என்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு கிளாம்பாக்கம் எங்கிருக்கு என்பதே தெரியாது என்கிறார்களே?

    பதில்:- ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பஸ் நிலையத்தை மாற்றிய போதும் இதுபோன்ற சிரமம் இருந்தது. மக்களுக்கு புரிதல் வரும் வரை அந்த சிரமம் இருந்தது. அதேபோல்தான் இப்போது கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கு செல்லும்போது சிரமம் இருக்கலாம்.

    இந்த பேருந்து முனையத்தை அ.தி.மு.க. ஆட்சியில்தான் திட்டமிட்டார்கள். ஆனாலும் நாங்கள் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கைவிடவில்லை.

    ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற காரணத்தால் அதில் செயல்படுத்தபடாமல் இருந்த 70 சதவீத பணிகளை செயல்படுத்தி முழு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

    ஒரு விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் புதிய பேருந்து முனையம் அமைந்துள்ளது. ஏற்கனவே தாம்பரம் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் கோயம்பேடுக்கு வந்து பஸ் ஏற எவ்வளவு தூரம் இருந்ததோ அதே தூரம் தான் கிளாம்பாக்கம் செல்வதற்கும் ஆகிறது.

    திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    வடசென்னை பகுதியில் இருப்பவர்களுக்கு இப்போது அந்த பிரச்சனை வராமல் இருப்பதற்காகத் தான் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    எனவே சிரமம் இல்லாமல் அவர்கள் செல்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
    • 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்ட லூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதன் தொடர்ச்சியாக நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்களின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    மேலும், 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

    மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி ஆகிய வட மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பஸ்களும் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும்.

    கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.

    மேற்கண்ட பஸ் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பஸ்கள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மேற்கண்ட தகவலின்படி மக்கள் பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.
    • நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.

    ஆம்னி பேருந்துகளை எங்கிருந்து இயக்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் நிறுத்தப்படுகிறது.

    ஆனால் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்தான் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கறாராக தெரிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

    இதனால் நேற்று மாலையில் இருந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகளும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை தாண்டி சென்னை மாநகருக்குள் நுழைய முயற்சித்தன. ஆனால் போலீசார் ஆம்னி பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.

    இதனால் ஆம்னி பேருந்து டிரைவர்கள் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தினர். கோயம்பேட்டில் நிறுத்துவார்கன் என நினைத்த பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.

    கோயம்போடு, தாம்பரம் மற்றும் கிண்டி போன்ற இடங்களுக்கு அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் குழந்தைகள் மற்றும் லக்கேஜ் உடன் ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முயன்றனர். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து அதிகத்தொகை கேட்டதால் நெருக்கடிக்குள்ளாகினர்.

    குழந்தைகளுடன் மாநரகப் பேருந்துகளில் செல்ல விருப்பம் இல்லாமலும், அதிகத் தொகை கொடுத்து வாடகை ஆட்டோ, கார்களில் செல்ல முடியாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பரிதவித்த நிலையில் பெரும்பாலான பயணிகள் நிற்க வேண்டியிருந்தது.

    இதற்கிடையே கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி மற்றும் ரெட் ஹில்ஸ் செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு வழியாக செல்கிறார்.

    விடுமுறை நாட்களாக தற்போது ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்காணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் புறப்படும், அங்குதான் வந்து சேரும் என நம்பியிருந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

    பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்.
    • ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.

    அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.

    நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    • தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
    • தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.

    ஆனால் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்.

    நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.

    அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.

    ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×