search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈவிகேஎஸ் இளங்கோவன்"

    • அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவின்போது தேர்தல் திருப்திகரமாக நடப்பதாக கூறினார்.
    • வாக்கு எண்ணிக்கையின்போது தோல்வி அடைந்ததும் பணநாயகம் வென்றதாக மாற்றி கூறுகிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக அவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கு.செல்வபெருந்தகை இருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்தனர்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றால் அவர்தான் சட்டமன்ற குழு தலைவர் ஆவார். கட்சியின் மூத்த தலைவர். காங்கிரசில் நீண்டகால அனுபவம் பெற்றவர். எனவே, அவரைத்தான் தலைவராக்க விரும்புவார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இதுபற்றி அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர் இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லையே. இப்போது அந்த பதவியில் இருப்பவர் நன்றாகத்தானே செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். எனவே, காங்கிரஸ் குழு தலைவர் பதவியை அவர் ஏற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால் இளங்கோவன் பேட்டி அளித்தபோது செல்வபெருந்தகையும் அருகில் நின்றதாகவும் அதனால்தான் அவர் அப்படி கூறினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவின்போது தேர்தல் திருப்திகரமாக நடப்பதாக கூறினார்.

    ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது தோல்வி அடைந்ததும் பணநாயகம் வென்றதாக மாற்றி கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் இப்படி மாற்றி கூறினார் என்றார்.

    • 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 அதாவது 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் இளங்கோவன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 அதாவது 64.58 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். எப்படி சாத்தியமாயிற்று இவ்வளவு பெரிய வெற்றி?

    அ.தி.மு.க. எப்படி இவ்வளவு சரிவை சந்தித்தது? என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நிச்சயம் எண்ணி பார்த்திருக்கும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த வகையில் இளங்கோவன் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி 2011-ம் ஆண்டு உருவானது. அப்போதிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011, 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 4 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

    2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று 10 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7,794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க. வலுவான பகுதி என்ற பெயர் உண்டு. அது தவறும் அல்ல. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றுப்போனது என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் இடம்பெற்று இருந்தது. இந்த 2 கட்சிகளின் வாக்குகளும் எங்கே போனது? என்ற ஆச்சரியமும் வருகிறது.

    இந்த வெற்றிக்கு காரணம் ஆளும் கட்சியின் நல்லாட்சி மற்றும் மக்கள் தி.மு.க. கூட்டணி மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் ஆளும் கட்சி தரப்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சி தரப்பில் ஜனநாயகம், பணநாயகத்தால் தோற்கடிக்கப்பட்டது என்றும் பேசப்படுகிறது.

    இவையெல்லாம் மேம்போக்கான வாதமாகத்தான் இருக்கும். உண்மையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னதான் நடந்திருக்கிறது என்று அலசிப்பார்க்கும் போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

    மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. அந்த தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார். எல்லா தரப்பினரிடமும், குறிப்பாக சிறுபான்மையினரிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்து உள்ளார். இதன் மூலம் இந்த தேர்தலில் களம் இறங்கியது அவரது தந்தை என்பதும், அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பொறுத்தவரை ஒரு தலைவர் அந்தஸ்தில் இருப்பவர் அவர் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற எதுவும் வந்ததில்லை.

    இதனால் மறைந்த எம்.எல்.ஏ.வின் அனுதாபம், இளங்கோவன் மீதுள்ள மரியாதை இந்த இரண்டும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

    எல்லாவற்றையும் விட முக்கியம் தி.மு.க. கூட்டணி வகுத்த தேர்தல் வியூகம். களத்தில் போட்டியிட்டது காங்கிரசாக இருந்தாலும், இந்த தேர்தல் முடிவு 21 மாத கால ஆட்சிக்கு ஒரு அங்கீகாரமாகவும், அடுத்து வர போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அமையும் என்பதால் இந்த தேர்தலை தி.மு.க. இடைத்தேர்தலாக கருதவில்லை. தங்களுக்கான எடைத்தேர்தலாகவே நினைத்து பணியாற்றியது.

    இதனை ஒரு கவுரவ பிரச்சினையாகவும் எடுத்ததன் விளைவு, தி.மு.க.வே போட்டியிடுவது போன்ற எண்ணத்தில் அந்த கட்சியினர் களம் இறங்கி பணியாற்றினார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தி.மு.க.வினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்கள். ஒரு யுத்த களத்தில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டுமோ அதே போல் வியூகத்தை அமைத்தார்கள். மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 746 வாக்காளர்களில் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதை முதலில் பிரித்து வகுத்து வைத்தார்கள்.

    முதலியார்கள் 80 ஆயிரத்து 142 பேர். அதாவது 35 சதவீதம் பேர். அடுத்ததாக இஸ்லாமியர்கள் 62 ஆயிரத்து 126 பேர். அதாவது 27.15 சதவீதம். அடுத்ததாக பிள்ளைமார் 19 ஆயிரத்து 166 பேர். அதாவது 8.37 சதவீதம். தலித்துக்கள் 14 ஆயிரத்து 360 பேர். அதாவது 6.28 சதவீதம். கிறிஸ்தவர்கள் 12 ஆயிரத்து 650 பேர். அதாவது 5.53 சதவீதம், வெள்ளாள கவுண்டர்கள் 9 ஆயிரத்து 450 பேர் அதாவது 4.13 சதவீதம். நாயக்கர் 8 ஆயிரத்து 620 பேர். அதாவது 3.77 சதவீதம். இவர்களுக்கு அடுத்தப்படியாக வட இந்தியர்கள், பிராமணர்கள், நாடார்கள், தேவர்கள், போயர், வன்னியர், விஸ்வகர்மா, செட்டியார்கள் ஆகிய சமூகத்தினர் சராசரியாக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை இருக்கிறார்கள்.

    இந்த சதவீதத்தை அடிப்படையாக வைத்து முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் ஆகிய 4 சமூகத்தினர் 73.99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 73 சதவீதத்தில் 60 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பது தி.மு.க.வினருக்கு கட்சி மேலிடத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. இந்த இலக்கை எட்டுவதற்குதான் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று திட்டமிட்டு தேர்தல் களத்தில் கையாண்டு இருக்கிறார்கள். முதலில் 11 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பகுதியை பிரித்து இருக்கிறார்கள். 3 முதல் 4 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் தேர்தல் பணியை கையில் எடுத்துள்ளார்கள்.

    அதற்கு ஏற்றாற்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களை தங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைத்துக் கொண்டார்கள். அமைச்சர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என்று தெரு வாரியாக ஒரு பெரிய படை பலமே முகாமிட்டது. அப்படி முகாமிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் குறைந்த பட்சம் 100 முதல் 250 வாக்காளர்களை வைத்திருந்தார்கள். அவர்களை தினசரி சந்திப்பது, கவனிப்பது என்று தங்கள் கண் பார்வையிலேயே வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களாக வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாத வகையில் ஒருவிதமான மூளை சலவைக்குள் கொண்டு செல்வது போல் கொண்டு சென்று விட்டார்கள்.

    அதில் முக்கியமாக எதிராளிகளை சந்திக்க முடியாத வகையில் அவர்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி வைத்துக்கொண்டார்கள். அடுத்ததாக பணத்துக்கு பஞ்சம் இல்லை. பரிசு பொருட்களுக்கும் குறைவு இல்லை. வாரி வழங்கப்பட்டது. 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் என்ற அடிப்படையில் புதுவகையான வேலைத்திட்டமும் செயல்படுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட வாக்காளர்கள் ஒருவித மயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். இவைகளால்தான் இந்த வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    • ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது.
    • தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் இந்த வெற்றியின் பெருமைகள் சேரும். அவரின் 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் ராகுல்காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து முதல்-அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிற சட்டப்பேரவையில் நானும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல் திறனிலும் பல மடங்கு உயர்ந்தவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இன்றைக்கு சில பேர் தேர்தல் ஆணையம் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை, மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி கொடுத்தபோது, தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாக அவரே கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நாகரிகமாக, நாணயமாக, சட்டப்படி நடந்து கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனுமதியின்றி செயல்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    எனது மகன் விட்டு சென்ற பணியை நான் தொடர உள்ளேன். ஏற்கனவே என் மகன் இங்கு பல பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்றனர்
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

    இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    • அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

    தற்போதுவரை வெளியான 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்றுள்ள இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது. அவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,666 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானதை அடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    • திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
    • வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறி வந்தேன்.

    * பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றி உள்ளது.

    * பாராளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.

    * வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.

    * நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன்.

    * திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.

    * நாலாந்தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார்; மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
    • வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் நான்கு சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,928 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    இதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.

    * வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

    * அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு கடுமையாக உழைத்தார்களா என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
    • நோட்டாவிற்கு 23 வாக்குகள் பதிவாகி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. நோட்டாவிற்கு 23 வாக்குகள் பதிவாகி உள்ளது.

    3 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.

    • ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது.

    ஈரோடு:

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று ஈ.வி.கே.எஸ்.இங்கோவன் தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துடன் சென்று வாக்களித்தார்.

    பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும்.

    அதேபோல் ராகுல் காந்தியின் தியாக நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும். வரப்போகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, வெள்ளோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமையும்.

    எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என என் பெயர் அறிவிப்பதற்கு முன்னாலேயே மக்கள் முடிவு செய்து விட்டனர். எனவே மிகப்பெரிய வெற்றியாக இது அமையும்.

    வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்.

    தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல் சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடி விட்டனர். எனவே தேர்தல் நல்லபடியாக நேர்மையாக நடக்கிறது.

    நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள்.

    மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும்.

    வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை ஏன் ஆவணமாக ஏற்க மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. எதிர்கட்சிகளை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
    • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.

    • தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது.

    ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

    தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

    இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.

    எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×