search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்ப பக்தர்கள்"

    • டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.

    கடலூர்:

    சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர். 

    வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார். 

    இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சபரிமலை சீசனையொட்டி மதுரைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள்-கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.



    மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தும் இடத்தில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்.

     ....................

    மதுரை

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போதும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள். இதனால் சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ள ஊர்களில் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.

    மதுரைக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி, மாசி வீதிகளில் காலை முதல் இரவு வரை அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மதுரையில் உள்ள கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை அதிகரித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட கனரக வாகனங்களில் வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எல்லீஸ் நகரில் உள்ள கோவில் வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. அந்த பகுதியில் உள்ள சாலையில் நாள் முழுவதும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் தோன்றி உள்ளன.

    இதே போன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    • சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு
    • 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது.

    இதையடுத்து பேச்சிப்பா றை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதை ஆறு, வள்ளியாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக திற்ப ரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது.

    தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள் ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைந்ததையடுத்து திற்ப ரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவி யில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலை மோதி வருகிறது.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணி கள் சபரிமலையில் தரிச னம் செய்துவிட்டு கன்னியா குமரிக்கு வருகை தர தொடங்கியுள்ளார்கள். கன்னியாகுமரிக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் திற்பரப்பு அருவிக்கு செல்கிறார்கள். அங்கு செல்லும் அய்பப்ப பக்தர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.இதனால் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விடுமுறை தினமான இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.

    • சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
    • சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம், ஹூப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.

    கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும். இந்த ரெயில் போத்தனூரில் நள்ளிரவு 1 மணிக்கும், திருப்பூரில் 1.50 மணிக்கும், ஈரோடுக்கு 3 மணிக்கும் செல்லும்.

    ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி ஹூப்ளியில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு காலை 5.10 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், போத்தனூருக்கு 6.45 மணிக்கும் செல்லும்.

    கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி கொல்லத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். பெல்காம்-கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 15-ந் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம்-பெல்காம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07130) கொல்லத்தில் வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்ட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு கோவைக்கும், 1.20 மணிக்கு திருப்பூருக்கும், 2.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 3.25 மணிக்கு சேலத்துக்கும் சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று சேரும்.

    ஆந்திர மாநிலம் நரசப்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (07131) நரசப்பூரில் வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு சேலத்துக்கும், 9.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.20 மணிக்கு கோவைக்கும் சென்று இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.

    கொல்லம்-நரசப்பூர் சிறப்பு ரெயில் (07132) வருகிற 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோவைக்கும், 5.05 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் சென்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நரசப்பூர் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஈரோடு:

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.

    இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.

    • மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம்
    • போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி,:

    அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் மாலை அணிய வந்த அய்யப்ப பக்தர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்கா முன்பு நிறுத்தி வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு சென்றனர்.

    இதற்கிடையில் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு தலைவரும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான சி.எஸ்.சுபாஷ் தலைமையில் பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் அய்யப்ப பக்தர்களும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    • ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மண்டல பூஜை

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

    இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள்

    தமிழகத்தில் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் குருசாமிகள் முன்னிலையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

    இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருப்பூர் மாநகரில் அய்யப்பன் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    • பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது.
    • அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.

    திருப்பூர் :

    அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட யூனியன் சார்பில் பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டர்படை நிர்வாகி சுனில்குமார் குருசாமி தலைமையில் நாளை 20-ந் தேதி இரவு 8:30 மணிக்கு திருப்பூரில் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.

    வருகிற 21-ந் தேதி அதிகாலை உழவாரப்பணியை தொடங்க உள்ளனர். முதலில் பம்பை நதி படிக்கட்டு பகுதியையும், பிறகு கன்னிமூல கணபதி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர்விட்டு கழுவி சுத்தம் செய்கின்றனர்.சுப்பிரமணியர் கோவில், மரக்கூட்டம், சரங்குத்தி, நடப்பந்தல் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய இருக்கின்றனர். இரவு 18 படிகளையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தல், சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்,மஞ்ச மாதா கோவில், பாண்டி தாவளம் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.வருகிற 22-ந் தேதி அய்யப்ப தரிசனம் முடித்து சபரி பீடம், அப்பாச்சி மேடு, நீலிமலை, பம்பை பஸ் நிலையம் பகுதிகளை சுத்தம் செய்து, உழவாரப்பணியை நிறைவு செய்து திருப்பூர் திரும்ப இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
    திருப்பூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளை கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக திருப்பூர் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் துளசி மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
      
    திருப்பூர் அய்யப்பன் கோவிலில் இன்று காலை முதல் விரதம் தொடங்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான துளசி மாலைகளை வாங்கி சென்றனர். மேலும் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் தூய்மைப்பணிகள் நடக்கிறது. 
    ×