search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Twitter"

    • ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
    • சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.

    அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.

    எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

    இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.

    இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

    எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.

    "கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.

    செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
    • புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்

    அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.

    அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.

    சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.

    அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.

    அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.

    அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.

    சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

    சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.

    உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.

    • எக்ஸ் பயனர்களுக்கு வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்படுகிறது.
    • இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது.

    எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி எக்ஸ் பயனர்களுக்கு உலகளவில் வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    பலர் எக்ஸ் தளத்தில் இருந்து வருவாய் கிடைப்பதை ஒட்டி மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், மேலும் பலர் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் 2014 மற்றும் அதற்கும் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இணைய முகவரிகள் மாயமாகி வருவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

     

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, டுவிட்டர் தளத்தில் இருந்து வரும் பில்ட்-இன் யு.ஆர்.எல். ஷார்ட்னர் கொண்டு பகிரப்பட்ட இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது. புகைப்படம் மற்றும் இணைய முகவரிக்கு மாற்றாக புகைப்படம் இல்லாமலும், ஹைப்பர்லின்க் நீக்கப்பட்டோ அல்லது இயக்க முடியாத வகையிலோ உள்ளது என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் எலென் டிஜெனரெஸ் டுவிட்டரில் பதிவேற்றம் செய்த உலக புகழ்பெற்ற ஆஸ்கர் செல்ஃபி தற்போது காணப்படவில்லை. இந்த செல்ஃபியில் பிரபல நடிகர்களான பிராட்லி கூப்பர், ஜெனிஃபர் லாரன்ஸ் மற்றும் மெரில் ஸ்டிரீப் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர். இந்த டுவீட் மட்டும் 2.8 மில்லியன் முறை ரி-போஸ்ட் செய்யப்பட்டு, சுமார் 2 மில்லியன் லைக்குகளை வாரிக் குவித்தது. இந்த டுவீட்-ஐ பார்க்கும் போது, அத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படம் இல்லாததை கண்டுபிடிக்க முடியும்.

    இதே போன்று 2012-ம் ஆண்டு பராக் ஒபாமா பதிவிட்ட டுவிட்டர் பதிவில் புகைப்படம் காணப்படுகிறது. அந்த வகையில், இந்த புகைப்படம் நீக்கப்பட்டதா அல்லது மீண்டும் ரிஸ்டோர் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாற்றம் குறித்து எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
    • எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்

    செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.

    இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.

    உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.

    இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.

    இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-

    தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.

    இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-

    நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.

    இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.

    இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

    • லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
    • X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே இதனை டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.

    X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு செய்வதில் இருந்து தற்போதைக்கு எலான் மஸ்க் பிரேக் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.

    அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.

     

    சமீபத்திய பேட்டி ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார். "நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்," என்று யாக்கரினோ தெரிவித்தார்.

    இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது. வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

    • மஸ்க், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
    • எக்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி பெறவில்லை என நகர நிர்வாகம் கூறியது

    இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர்.

    டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.

    கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார்.

    இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.

    ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது.

    மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.

    இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.

    இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.

    • டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் உள்ளன.
    • மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    டுவிட்டர் தளத்தில் மாற்றங்கள் செய்வதை எலான் மஸ்க் தற்போதைக்கு நிறுத்த மாட்டார் என்றே தெரிகிறது. தற்போது X என்று மாறி இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என்பது தான்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து தளத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய அம்சம் பற்றிய தகவலை, டுவிட்டர் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இவற்றில் முதல் ஆப்ஷன், வழக்கமான வெள்ளை நிற பேக்கிரவுன்டை வழங்குகிறது. டிம் ஆப்ஷன் டுவிட்டர் தளத்தை சுற்றி இருள் சூழ்ந்ததை போன்று காட்சியளிக்கும் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது. லைட்ஸ் அவுட் ஆப்ஷனில் திரை முழுக்க கருப்பு நிற பேக்கிரவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய மாற்றம் அமலுக்கு வரும் வரையில், இந்த மூன்று ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

    டுவிட்டர் தளத்தில் எழுத்துக்களின் அளவை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி எழுத்துக்களை எல்லோ, பின்க், பர்பில், ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டார்க் மோட் மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டர் வலைதளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
    • உலகளவில் டுவிட்டர் வருவாய் பங்கீட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

    எலான் மஸ்கின் X, முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் டுவிட்டர் அல்லது X புளூ சந்தா வைத்திருப்போருக்கு உலகளவில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில், புதிய X தளத்தில் வருவாய் ஈட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இதற்கு கிரியேட்டர்கள் மற்றும் பயனர்கள் வைத்திருக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    1 - பயனர்கள் X புளூ சந்தா வைத்திருப்பது அவசியம் ஆகும். இதோடு கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 ஃபாளோவர்கள் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

     

    2 - அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களை கடந்தபிறகு அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

    3 - எதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ம் தேதியிட்ட வாரத்தில் இருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

     

    4 - இந்த திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளை (Ads Revenue Sharing and Creator Subscriptions) செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

    5 - புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியம் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க, இந்த திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

    • புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக டுவிட்டர் நிறுவன லோகோ நீல பறவையில் இருந்து X ஆக மாற்றப்பட்டது.

    உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது. 

    இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

     

    மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    • புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    • மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.

    டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    "நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.

    டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது  அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டரில் புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
    • டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரான்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரான்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளம் தான் திறக்கிறது. twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

    "வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

    இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம்.
    • டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் எலான் மஸ்க் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறினார்.

    வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×