search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Presidential Election"

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.
    • தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை.

    சென்னை:

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இதேபோல், குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் இறங்க இருக்கிறார்.

    மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த 3 பேரும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளனர். இவர்களில் யார் வேட்பாளர் என்பதை கட்சி உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் இந்திய வம்சாவளி வரிசையில் 4-வது நபராக சிவா அய்யாதுரை என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்ற 3 பேரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், விஞ்ஞானியும், தொழில் அதிபருமான சிவா அய்யாதுரையோ சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.

    தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை. இவருடைய தந்தை பெயர் வெள்ளையப்பன் நாடார். தாயார் மீனாட்சியம்மாள். சிவா அய்யாதுரையின் தாயார் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர்.

    அமெரிக்க நடிகை பிரான் டிரெஷ்சரை திருமணம் செய்த சிவா அய்யாதுரை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். உள்அலுவலக மின்னஞ்சல் (இ-மெயில்) முறையை கண்டுபிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர் என பைடன் தெரிவித்தார்
    • திறமையற்றவர் ஜோ பைடன் என டிரம்ப் தாக்கினார்

    அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77).

    அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி "மக் ஷாட்" எனப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டார்.

    அந்த புகைப்படங்களை டிரம்ப் தனது சொந்த வலைதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டிருந்தார்.

    இந்த புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது, "நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்தேன். டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர்" என டிரம்பை கேலி செய்யும் விதமாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப், பைடனை விமர்சித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

    அதில், "கெட்ட எண்ணம் படைத்தவர் ஜோ பைடன். அவர் திறமையற்றவர் மட்டுமல்ல, சீரான மனநிலையை இழந்தவர் என நான் நம்புகிறேன். நாட்டு மக்களை அச்சுறுத்தும் விதமாக நாட்டின் எல்லைகளை அனைவருக்கும் திறந்து வைத்திருக்கிறார். நீதித்துறையையும், மத்திய புலனாய்வு துறையையும் அவர் சரியாக கையாளவில்லை. மனநிலையை இழந்தவராக நாட்டை நரகத்தை நோக்கி நகர்த்தி, ஒரு காரணமும் இல்லாமல் அமெரிக்க மக்கள் மீது 3-வது உலகப்போரை திணித்து விடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வரும் டிரம்பிற்கும், பைடனுக்குமான கருத்து மோதல்கள், தேர்தல் நெருங்க நெருங்க எந்த நிலையை எட்டும் என அரசியல் வல்லுனர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    • எலான் மஸ்க், விவேக் ராமசாமியை நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என தெரிவித்திருந்தார்
    • எங்கள் இருவருக்கும் பொதுவான சிந்தனை இருக்கிறது என்றார் விவேக்

    அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

    ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும், அவர் பல கிரிமினல் வழக்குகளில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் அதிபர் போட்டியில் தொடர முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

    இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய பெற்றொர்களுக்கு பிறந்தவர் விவேக் ராமசாமி (37). அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவரான இவர், போட்டியிடும் வேட்பாளர்களிலேயே வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்களுக்கு விடை காணும் வகையில் பல இடங்களில் விவேக் கூறும் கருத்துக்களுக்கு பொது மக்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

    உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் டுவிட்டர்) ஆகியவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க், களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கூறி விவேக் ராமசாமியை குறித்து பாராட்டும் விதமாக சமீபத்தில் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தனக்கு ஆதரவு கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விவேக் ராமசாமி, அமெரிக்காவின் மத்திய மேற்கில் உள்ள ஐயோவா மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    நான் வெறும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஒரு புதிய கலாச்சார அடையாளத்துடன் புதிய அமெரிக்க கனவினை உருவாக்க பாடுபடுகிறேன். அமெரிக்காவை முன்னணி நாடாக்க வேண்டுமானால் நாம் முதலில் அமெரிக்காவை மீண்டும் கண்டெடுக்க முயற்சிக்க வேண்டும். நான் வெற்றி பெற்று அதிபரானால், புதியதாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர்களை என் அரசாங்கத்தில் நிர்வாக ஆலோசனைகளுக்காக நியமித்து கொள்வேன்.

    இதில் எலான் மஸ்க்கையும் சேர்த்து கொள்ள விரும்புகிறேன். அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறாரோ அதே போல், நான் அமெரிக்க நிர்வாகத்தை மறுசீரமைத்து அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கள் இருவரின் சிந்தனையும் பல விஷயங்களில் ஒத்து போகிறது.

    இவ்வாறு விவேக் ராமசாமி தெரிவித்தார்.

    கடந்த வருடம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அதிரடியாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
    • புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்

    அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.

    அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.

    சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.

    அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.

    அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.

    அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.

    சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

    சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.

    உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.

    • குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தியது
    • விவாதத்திற்கு பிறகு கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராக விவேக் ராமசாமி இருந்தார்

    2024-ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.

    டிரம்ப் ஆதரவாளர்களான புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோருடன் டிரம்பை எதிர்க்கும் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் உட்பட பல வேட்பாளர்கள் குடியரசு கட்சியிலேயே களத்தில் உள்ளனர்.

    குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.

    இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

    இதனை ஒரு பிரசார மேடையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை குறித்த கருத்து தெரிவித்தவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பேசுபொருளானது.

    இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர் அங்குள்ள பல ஊடகங்கள் அவரை பாராட்டி வரும் நிலையில், கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் விவேக் ராமசாமி இருந்தார்.

    விவேக்கிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை குறிக்கும் விதமாக கட்சிக்கான நிதியளிப்பில் ஏராளமானோர் முன்வந்து நன்கொடையளித்து வருகின்றனர்.

    நிகழ்ச்சி முடிந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே விவேக் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதரவாக சுமார் ரூ.4 கோடி ரூபாய் ($450000) இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானது போல, அமெரிக்காவிலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபர் ஆனால், வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள் வெள்ளையர்களின் நாட்டை ஆள்கிறார்கள் எனும் சிறப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம்.

    உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது. உதாரணமாக அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியாது. அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்ற அந்த நாட்டு படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.

    அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நடந்தது. அடுத்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியாவை போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை..

    அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்க இந்த கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர். கடந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ்(58) அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உள்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் சொல்ல தொடங்கி உள்ளன.

    அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க அதிபருக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

    கமலா ஹாரிஸ், பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது முன்னோர் மன்னார்குடி அருகில் துளச்சேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே போல் விவேக் ராமசாமி பிறந்தது அமெரிக்காதான். ஆனால் அவர்களது பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழியும் தமிழ் தான். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடக்கஞ்சேரியில் வசித்தவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று அதிபர் ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

    தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

    • அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.
    • துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

    அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே, விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளனர்.

    இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் உள்ளது. அவர்களின் அடிப்படை சுதந்திரங்களுக்காக நிற்க வேண்டும். இதுவே நம்முடைய கொள்கை என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுடன் சேருங்கள். வேலையை முடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களாகிய நாம் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது ஜனநாயகம் அதற்காகப் போராடுவதற்கான நமது விருப்பத்தைப் போலவே வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஜோ பைடன் மற்றும் நானும் மறுதேர்தலில் போட்டியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 நடைபெறுகிறது.
    • டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டப்ளின் :

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர், அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன், தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×