search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thachanallur"

    • மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தச்சநல்லூர் மண்டலத்தில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் உடையார்பட்டி சாலைத்தெருவில் 2 கட்டிடங்கள், நெல்லை மண்டலத்தில் பாண்டியாபுரம் வடக்கு தெருவில் ஒரு கட்டிடத்திலும், திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்திலும், தெற்கு மவுண்டு ரோடு பகுதியில் 2 கட்டிடங்கள் என மொத்தம் 6 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    எனவே மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • கொலை செய்யப்பட்ட பேச்சிராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா (வயது 26). கட்டிட தொழிலாளி.

    நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் பேச்சிராஜாவை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட பேச்சிராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும், குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

    இந்த நிலையில் மானூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு(30), சுதர்சிங்(30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன்(20) ஆகிய 3 பேரும் தச்சநல்லூர் போலீசில் சரண் அடைந்தனர்.

    சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாதுரை, சரண் அடைந்த 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 3 மகன்கள். இதில் 3-வது மகன் மாசான மூர்த்தி தூத்துக்குடியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு பொங்கலையொட்டி ஊருக்கு வந்தபோது அவரை 10 பேர் கும்பல் கடத்திச்சென்று கொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தில் பேச்சிராஜாவும் சேர்க்கப்பட்டு இருந்தார். தற்போது சரண் அடைந்த வர்களில் ஒருவரான ராஜவேலு, மாசானமூர்த்தியின் நெருங்கிய நண்பர். லாரி டிரைவரான இவர், தனது நண்பனை கொலை செய்தவர்களில் யாராவது ஒருவரையேனும் கொலை செய்துவிட வேண்டும் என்று ஆதங்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    வாடகைக்கு வீடு

    இதற்காக தனது உறவினரான கல்லூரி மாணவர் ஹரி நாராயணன் மற்றும் நண்பர் சுதர்சிங் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் 3 பேரும் பாளை பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    அங்கிருந்து கொண்டு 3 பேரும் தினமும் தச்சநல்லூர் பகுதிக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். தினமும் காலை பேச்சிராஜா வேலைக்கு செல்லும் நேரத்தை அறிந்து அவர்கள், கொலை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் இவர்கள் 3 பேருக்கு மட்டும் தான் தொடர்பா? அல்லது வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தச்சநல்லூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கைதான வாலிபர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் தேனீர் குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ். (வயது 27).

    குண்டர் சட்டம்

    இவர் மீது மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்து தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனையடுத்து இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், சந்திப்பு சரக உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    அதன் பேரில், நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை இன்று பாளை சிறையில் அடைத்தனர்.

    • நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • முகாமில் பிறப்பு, இறப்பு கோரி கேட்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆனால் தொலைவில் உள்ள பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் உள்ளிட் டவர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வர சிரமம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களது குறைகளை கேட்கும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டத்தை முதன் முறையாக மேயர் சரவணன் தொடங்கினார்.

    இந்த திட்டத்தின் முதல் படியாக இன்று தச்சநல்லூர் பகுதியில் மக்களை தேடி மேயர் திட்டம் அங்குள்ள வரி வசூல் மையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    இதில் மண்டலத்திற்குட்பட்ட 1,2,13 மற்றும் 14-வது வார்டு பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    முகாமில் பிறப்பு, இறப்பு கோரி கேட்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது. குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாலையில் உரிய பெயர் மாற்றத்துடன் ஆணை வழங்கப்படுகிறது.

    கட்டிட அனுமதி மற்றும் மனை பிரிவு அனுமதி குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    மேலும் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மண்டலத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்குள்ள பகுதிகளில் பசுமையான நெல்லையாக மாற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர்.

    • சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை.
    • நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 65). இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை மேய்சலுக்கு திறந்து விடுவார். மாலையில் அவை மீண்டும் வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் அப்பகுதியில் தேடிச்சென்றார். ஆனால் அவைகளை அங்கு காணவில்லை.இந்நிலையில் சேந்திமங்கலத்தில் உள்ள ஒரு கிணற்றில் 4 ஆடுகள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.

    மேலும் கிணற்றின் அருகில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் மேலும் ஒரு ஆடு இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது தவறி கிணற்றில் விழுந்த இறந்ததா? அல்லது நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக சென்றபோது கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தச்சநல்லூரை சேர்ந்த சிவனனைந்த பெருமாள் என்பவர் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • வீட்டில் இருந்து மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் அழகனேரி நாடார் தெருவை சேர்ந்தவர் சிவனனைந்த பெருமாள்.

    இவர் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 24) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சிவனனைந்த பெருமாள் டவுனில் உள்ள ஒரு கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஐஸ்வர்யாவை திடீரென காணவில்லை.

    வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிவனனைந்த பெருமாள், தனது மனைவியை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 26-ந்தேதி மாயமான தொழிலாளி நேற்று ஹவுசிங் போர்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 26-ந்தேதி மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாயாண்டி தச்சநல்லூர் அருகே சிதம்பரம் நகர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காரணம் என்ன?

    இதில் சம்பவத்தன்று மாயாண்டியுடன் கறிக்கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர் மாயாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதும், அப்போது குடிபோதை தகராறில் அவர் மாயாண்டியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை மாயாண்டியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர்.

    ×