search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tennis"

    • இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
    • இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து)- கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதினார்கள். இதில் லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கேத்தே காயத்தால் விலகினார். இதனால் மக்டா லினெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்றொரு அரையிறுதியில் லிண்டா புருவர்தோவா (செக்குடியரசு) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாடியா போடோரோவை (அர்ஜென்டினா) கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    3-ம் நிலை வீராங்கனையான மக்டா லினெட் இதுவரை 2 டபிள்யூ. டி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அவர் 3-வது பட்டத்தை வெல்வாரா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    30 வயதான மக்டா தற்போது உலக தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ளார். 2020-ம் ஆண்டில் அவர் 33-வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். கிராண்ட்சிலாம் போட்டியை பொறுத்தவரை மக்டா லினெட் 3-வது சுற்று வரை நுழைந்ததே சிறப்பாகும்.

    ஒட்டு மொத்த டென்னிஸ் போட்டியில் 403 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 309 போட்டியில் தோற்றுள்ளார்.

    இந்த போட்டியில் 28-வது வரிசையில் உள்ள லிண்டா மிகவும் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 17 வயதான அவர் உலக தர வரிசையில் 130-வது இடத்தில் உள்ளார். இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    முன்னதாக நடைபெறும் இரட்டையர் இறுதி போட்டியில் டாப் ரோஸ்கி (கனடா)-ஸ்டெபானி (பிரேசில்) ஜோடியுடன் லின்கோவா (ரஷியா)- ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) ஜோடி மோதுகிறது.

    • கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான்- ஹிபினோ மோதினார்கள்.
    • இன்று இரவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள்.

    முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

    2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள்.

    கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3


    போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொண்ட லிண்டா (இடது)-வார்வரா கிராசெவா.

    முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.

    இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    • இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர்.
    • காலிறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர்.

    சென்னை:

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இதில் கிராச்சேவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இன்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புசார்ட் (கனடா)-போடோரோஸ்கா (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். 6.15 மணிக்கு நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிராச்சேவா (ரஷியா)-லின்டா ப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

    இரவு. 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மெக்டாலினெட் (போலந்து)-மரினோ (கனடா), இரவு 8.45 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வான் (இங்கிலாந்து)-நாவ் ஹிபினோ (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    அனுபவம் வாய்ந்த வீராங்கனையான புசார்ட் அரை இறுதிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டியில் புசார்ட் (கனடா)-விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி, அன்னா பிஸிங்கோவா (ரஷியா)-டிசலமிட்ஜ் (ஜார்ஜியா) ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    நேற்று நடந்த கால் இறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர். இதன் மூலம் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெளியேறி விட்டனர்.

    • 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.

    சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

    அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.

    அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.  குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.

    கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது. 

    • தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார்.
    • ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடக்கிறது.

    இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இந்தியாவின் சாய்சமர்தி, லட்சுமி பிரபா, சவ்ஜன்யா பவி செட்டிரியா பாட்டியா ருதுஜா போசாலி உள்பட 24 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சவ்ஜன்யா பவிசெட்டி, ஜப்பானின் கியோகா ஓஹமுகரவுடனும், லட்சுமி பிரபா ஜப்பானின் யுகி நைய்டோவுடனும் மோதினர்.

    • கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
    • கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

    இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.

    இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    • முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
    • 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
    • பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

    கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் முன்னணி ஜோடியை சானியா மிர்சா ஜோடி வீழ்த்தியது.

    ஒட்டாவா:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
    • சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.

    இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.

    போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.

    ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×