search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer health"

    • வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி.
    • சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது.

    கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.

    இயற்கை முறையில் தீர்வுகள்

    * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.

    * வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

    * வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.

    * இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

    * அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

    * மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

    * பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

    * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

    * சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.

    * உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

    * குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.

    • துரித திண்பண்டங்களை கண்டிப்பாக வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது.
    • கோரைப்புல் படுக்கை விரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது.

    கோடை காலம் தொடங்கி விட்டாலேஅதனுடன் இணைந்த நோய்களும் உடலுடன் ஒட்டிக்கொள்கின்றன.மழையைகூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் வெயிலை ஏற்பது என்பது இயலாதது. அவ்வாறான காலங்களில் வசதி படைத்தவர்கள் கோடைவாச ஸ்தலங்களை நாடிச்செல்வார்கள். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளியோர் உணவு முறை மாற்றத்தின் மூலம் தான் இந்த கோடையை கடக்க வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களால் உடல் நிலை பல்வேறுவகையில் பாதிக்கப்படுகிறது. மேலும் மனிதனின் தற்போதைய நவீன வாழ்க்கை முறை, நவீன உணவு முறை மாற்றங்களும் உடல் பாதிப்படையவும், உடற்சூடுஏற்படவும்காரணமாகின்றன.

    இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப்பாய் பயன்படுத்திய காலம் மாறி, இன்றுசெயற்கைபோம் மெத்தை, தலையணைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். வெயில் காலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் படுத்து உறங்க, உட்கார சிறந்தது இலவம் பஞ்சால் செய்த இருக்கை, மெத்தை, தலையனைதான் சிறந்தது. இலவம்பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து, உடல் சூட்டை சமச்சீராக்கி உடல் முழுவதையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.

    கொதிக்கும் கோடை வெயில் காலங்களில் போம் வகை செயற்கை மெத்தை, தலையனைகளைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல், கட்டி, கொப்புளங்கள், கண் எரிச்சல், மலக்கட்டு, மூலம், பவுத்திரம், பிறப்புறுப்பு பாதிப்பு, விந்தணுக்கள்அழிவு, சினைப்பைநீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், ஞாபக மறதி, உடல் வலி, அசதி போன்றவை வருவதற்கான காரணங்கள் அதிகம்.

    இதைத் தெரிந்து தான் நம் முன்னோர்கள் செயற்கை மெத்தை, தலையணைகளைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இலவம் பஞ்சு மெத்தை, தலையணையை பயன்படுத்தி, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தற்காத்து வாழ்ந்தனர்.

    காற்றின்இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரை புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரினால் கோர்த்து சேர்த்த கோரைப்புல் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் படுக்கை விரிப்புகளால் உண்டாகும் நோய்கள் மிகக்குறைவாகவே இருந்தது. இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நெகிழிப் பாய்களை குளிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் எவ்வித மருத்துவ குணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.

    வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் உடலும் சூடாகி தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. மேலும் உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது. தமிழ் மக்கள் பாரம்பரியமிக்க கோரைப் பாயை படுக்கைவிரிப்புகளாக பயன்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிந்துதான் இதைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.

    இந்தகோரைப்புல் படுக்கைவிரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது. இதில் படுப்பதால் நல்ல தூக்கம் வருவதோடுமலக்கட்டு பிரச்சினைகள்ஏற்படாது. கெட்ட கனவுகள் வராது, உடற்சூட்டினால் ஏற்படும் மூலம், பவுத்திரம் தொந்தரவு வராது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குத்தல், வலியை ஏற்படுத்தாது. கண்ணுக்கும், மூளைக்கும்,உடல் முழுமைக்கும் குளிர்ச்சியைத் தரும். ஆண், பெண் பிறப்புறுப்பு பிரச்சினைகள், நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    கோரைப் பாய் குளிர்ச்சி தரும்,நல்லநித்திரை தரும்... என்ற பாடல் வரி, கோடைக்காலத்தில் நாம் தேடும் குளிர்ச்சியை வழங்கி, சுகமான உறக்கத்தையும் கோரைப்பாய் அள்ளிக் கொடுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவேஅழகு, ஆடம்பரம் தவிர்த்து செயற்கை படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகளை கண்டிப்பாக தவிர்ப்போம்.

    உடற்சூடு அதிகரிக்க காரமான உணவுகள், அதிக சூடான உணவு, நேரம் தவறி உண்பது, நேரம் தவறி உறங்குவது, பல்வேறு நோய்களுக்கு நிறைய மருந்துகளை தொடர்ந்து உண்பது, அடுப்பின் முன் நீண்ட நேரம் நின்று சமைப்பது, அதிக நேரம் வெயிலில் சுற்றுவது, அதிக புகைப்பழக்கம், தலைக்கு, உடலுக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், குளிக்காமல் தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உடற்சூடு ஏற்படலாம். மேலும் பல்வேறு வகை ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிவது, காற்றோட்டம் இல்லாத ஆடைகளை இறுக்கமாக அணிந்திருப்பது, நாள்பட்ட மலக்கட்டு பிரச்சினை இருப்பதும் உடற்சூட்டை அதிகப்படுத்த காரணமாகிறது.

    மனக் கவலை, மன உலைச்சலும் காரணமாகலாம். உடற்சூட்டைபோக்க தலைக்கு எண்ணெய் வைப்பது, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்திற்குஇரண்டு முறைவயிறு பேதிக்கு சாப்பிடுவது, உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களைச் சாப்பிடுவது, தண்ணீர் நிறைய குடிப்பது, மோர், பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் சாப்பிடுவது, எலுமிச்சை பழச்சாறு குடிப்பது, மண்பாணையில் தண்ணீர் வைத்து குடிப்பது, இயற்கை உந்தல்களை (மலம், சிறுநீர்) அடக்காமல் தவிர்ப்பது, இறுக்கமாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது, துரித உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, மது-புகையிலை தவிர்ப்பது, இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது, அதிக காரம், மசாலா சேர்ந்த உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவைகளால் உட ற்சூடு வராமல் தடுக்கலாம்.

    உடற்சூட்டைத் தணிக்க திரிபலா சூரணம் -மாத்திரை, அதிமதுர சூரணம்-மாத்திரை, கடுக்காய் சூரணம்-மாத்திரை, பரங்கி ப்பேட்டை சூரணம்-மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், வில்வாதி லேகியம், துறுஞ்சி மணப்பாகு, நன்னாரி சர்பத் (தரமானது) போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

    மேலும் துரித உணவுகள், துரித திண்பண்டங்கள் கண்டிப்பாக வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும் திண்பண்டங்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு முறைகளை பின்பற்றினால் உடற்சூடு வராமலும் அதனால் ஏற்படும் நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
    • டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.

    அவர் கூறியதாவது:-

    வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.

    பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

    கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

    காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.

    காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.

    இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.

    நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

    கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

    பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.

    இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.

    பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.

    இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.

    இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும்.
    • ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு.

    கோடை காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமானது. பருத்தி ஆடை அணிந்து, சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசி வெளிப்புற உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதுபோல் உட்புற உடல் நலனையும் பேண வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் ஒருசில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

    தண்ணீர் அருந்தாமல் இருப்பது:

    கோடை காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் உடலில் நீரிழப்பை தவிர்க்க போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டும். இருப்பினும் கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். அத்துடன் பழ ஜூஸ்கள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழ வகைகள், திரவ வகை உணவுகளை தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.

    உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் உப்பு அதிகம் கலந்த திண்பண்டங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள், குக்கீஸ்களை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் உப்பு உள்ளடக்கத்தை நீர்த்துப்போக செய்வதற்கு உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க உப்பு நிறைந்த தின்பண்டங்களை ஒதுக்கிவைப்பதுதான் சரியானது.

    அதிக கலோரி கொண்ட பானங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிப்பதற்கு குளிர்பானங்களைத்தான் பலரும் நாடுவார்கள். அதிக கலோரி கொண்ட பானங்களை தவிர்ப்பதுதான் நல்லது. இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.

    பருவகால பழங்களை புறக்கணிப்பது:

    ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அவை பருவகால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். உடல் உபாதை பிரச்சினைகளையும் தவிர்க்கச்செய்யும். இந்த கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம், கிர்ணி போன்றவற்றை ஒரு போதும் தவிர்க்கக் கூடாது.

    • குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
    • குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

    டாக்டர் உமாசங்கர், (இணை பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி):-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இளநீர், நுங்கு அதிகமாக கொடுக்கலாம். பொதுவாக குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் பெற்றோர்தான் அவர்களை கட்டாயப்படுத்தி தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

    மேலும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரைதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்க்கலாம். எக்காரணத்தை கொண்டும் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்த அதிக குளிர்ந்த தண்ணீரை குடிக்க கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மண் பானை தண்ணீரை பயன்படுத்தலாம். அதிக வெயில் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சின்னம்மை ஆகிய நோய் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகளவில் தண்ணீர் குடித்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    மெடிக்கல் எமர்ஜென்சி

    டாக்டர் நம்பிராஜன், (இதயவியல் துறை தலைவர், அரசு ஆஸ்பத்திரி):-

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது சருமத்தில் ஒருவித வறட்சி ஏற்படும். இதன் தாக்கம் அதிகரிக்கும்போது தோல், சிவப்பாக மாறி மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்லும்.

    இதுபோன்று ஏற்பட்டால் அது மெடிக்கல் எமர்ஜென்சி ஆகும். இந்த நேரத்தில் உடனடியாக அந்த நபரை நிழலில் அமர வைத்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு தண்ணீர் உள்பட எதுவும் குடிக்க கொடுக்கக்கூடாது.

    மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நமது உடலில் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. அதை நாம் குடிக்காமல் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள செல் சுருங்கும். இதனால் இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக துடிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுதான் மாரடைப்புக்கு காரணம் ஆகும்.

    தண்ணீர் முக்கியம்

    இது தவிர சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற நோய் இருப்பவர்கள் அதிக வெயிலில் வெளியே செல்லக்கூடாது.

    வெயில் நேரத்தில் அதிகளவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வெயிலுக்கு உடலுக்கு தண்ணீர்தான் முக்கியம். அதை தவறாமல் குடித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடைக்காலத்தில் வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
    • உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    கோடை வெயில் கொளுத்ததொடங்கினாலும், மதுக்கடைகளில் விற்பனைவெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மது பானங்கள் தவிர மதுப்பிரியர்களின் கிக் கேற்றும் குளிர்பானமாக திகழும் பீர் விற்பனை பொங்கி வழிகிறது. இதனால் அதற்கு சில வேளைகளில்தட்டுப்பாடும் உள்ளதாக கூறுகின்றனர்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் பீர், மற்றும் மது பானங்களை அருந்துகிறவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக கூறுகின்றனர். வெயில் காலங்களில் மது அருந்தும்போது உடலில் உள்ள ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும்.

    இந்த நிலையில் போதையால் தாகம் தடைபடும்போதும், தவிர்க்கப்படும் போதும், தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை. இந்த நிலையில் போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும். இதனால் ரத்த நாளங்களில் அதிக பாதிப்புஏற்படும்.

    இதனால் அடைப்புஏற்பட்டு இதயத்தில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். ஆகவே ஜில்பீர் மட்டுமின்றி, எந்த வகையான பீர் மற்றும் மது பானங்களை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபத்தானது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

    • மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
    • உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது.

    கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

    ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

    கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைக்கால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.

    ப.கோபிகா

    12-ம் வகுப்பு,

    ஜெ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

    • கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம்.
    • கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

    தமிழகம் முழுவதும் பள்ளி தேர்வுகள் முடிவுற்ற நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும் அடுத்த வராம் முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தாலும் கொளுத்தும் கோடை வெயிலால் குழந்தைகள் உடல்நலனில் அதிக அக்கற்றை காட்ட வேண்டிய சூழல் பெற்றோருக்கு ஏற்பட்டு உள்ளது.

    பள்ளிக்கூடம் இல்லை, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை, படிப்பு இல்லை என்பதால் கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம். கோடைகாலம் என்பது புதிய விஷயங்களை ஆராய்வதற்கும், பயணம் செய்வதற்கும், கண்டு பிடிப்பதற்கும் சிறந்த நேரம்.

    இந்த நேரத்தில் குழந்தைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் நாள் முழுவதும் குழந்தைகள் இருக்கும்போது, அவர்களை நிர்வகிப்பது பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனவே, கோடை விடுமுறையை வீணாக்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருந்தபடியே அதை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.

    போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு இல்லாமல் சுத்தமான காற்றில் நடப்பதால் அதிகாலை நடைப்பயிற்சி மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. தவிர, கவனச் சிதறல்களிலிருந்து விலகி உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உரையாடலை நடத்தவும், அவர்களை நன்கு அறிந்து கொள்ளவும் முடியும்.

    உங்கள் குழந்தைகளை சமையலறை வேலைகளில் ஈடுபடுத்தும் போது, அவர்களுக்கு சில அடிப்படைக் கற்றலைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடலாம். இதனால் குழந்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். நீங்கள் ஒருபோதும் யோசிக்காத யோசனைகளை அவர்கள் கொண்டு வர முடியும்.

    செல்போன்கள் மற்றும் டேப்லெட்களில் கேம்களை விளையாடுவதால், நல்ல பழைய போர்டு கேம்கள் பின்சீட்டைப் பெற்றுள்ளன. செல்போன் கேம்களால் உற்சாகமான எதுவும் நடக்கவில்லை. எனவே உங்கள் கோடை விடு முறையை குடும்பத்துடன் சில பலகை விளையாட்டுகளில் செலவிடுங்கள்.

    ஆண்டு முழுவதும் குழந்தைகள் பொருட்களை சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடுக்கி வைக்கவோ, வரிசைப்படுத்த அவர்களுக்கு நேரம் இல்லை. அதை நீங்களே செய்ய தொடங்கும்போது, விரைவில் அவர்களும் இணைவதை நீங்களே காண்பீர்கள்.

    பள்ளி நாட்களில் குழந்தைகள் சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். விடுமுறை என்பது அவர்கள் சற்று தாமதமாக எழுந்திருக்கும் நேரம். ஒவ்வொரு வார இறுதியில் ஒரு நல்ல திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும். குடும்பமாக ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிப்பதை விட வேடிக்கை வேறு எதுவும் இல்லை

    இங்கு புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை. மேலும் பல வந்துகொண்டும் இருக்கின்றன. புத்தகங்கள் வாழ்க்கை அடிப்படைகளை கற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு புத்தகமும் கற்பிக்க ஏதாவது உள்ளது.

    எனவே படிக்கும் பழக்கம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து படித்து, புத்தகத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்களிடம் தோட்டம் இருந்தால், அல்லது நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைக்கு ஒரு செடியை பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.

    ஒரு செடி எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை அவருக்கு வழி காட்டுங்கள். செடி வளர்வதை பார்ப்பது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும்.

    கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஓவியம் வரைய செய்வது போன்ற விஷயங்களிலும் ஈடுபட செய்யலாம்.

    ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு கோடை விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கும் குழந்தைகளின் நேரத்தை, ஒரு சரியான திட்டமிடல் மூலம் ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் மறக்கமுடியாத விடுமுறையாக மாற்றிக் கொள்ளலாம்.

    எனவே, இந்த திட்டங்களை கடைபிடித்து விடுமுறையை நிச்சயமாக வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றலாம்.

    • அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.

    அதாவது, தினமும் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மர நிழலை தேடி ஓடுவதை போல், குளிர்பானங்களை தேடி அதனை ஆசையாய் பருகிவருகிறோம். இந்த நிலையில் வெயில் காலங்களில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், உடலில் உள்ள நீர் சத்துகள் உடனடியாக குறைந்து விடுகிறது. அதனை அதிகப்படுத்துவதற்கு குளிர்பானங்களை சாப்பிடுகிறோம். அதாவது, குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களால் மூக்கடைப்பு பிரச்சினை, அடிக்கடி தும்மல் வரும். அதனை தொடர்ந்து, காது வலி வருகிறது. அதன்பின்னர், தொண்டை வலியும் வருகிறது. குளிர்பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம். வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இதுபோன்ற உணவுகள் உள்ளது. முடிந்த வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான பானங்களை கோடைக்காலத்தில் அருந்த வேண்டும்.

    அதுபோல், வெயிலில் சென்று விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த உடன், குளிர்ந்த பானங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பநிலையும், அறையில் உள்ள வெப்பநிலையில் சமமாக இருக்காது. எனவே, வெளியில் சென்று விட்டு வந்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த பானங்களை சாப்பிடலாம்.

    வெயில் காலத்தில் பெரியவர்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.

    கோடைக்காலம் வந்தாலே காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தான் அதிக அளவில் வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருப்பதால் காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு சிகிச்சைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
    • குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கோடை காலம் குழந்தைக்கு புது பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதாவது அடினோ வைரஸ், இன்புளூயன்சா, பாவி இன்புளூயன்சா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பெரியவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இது குழந்தைகளை கஷ்டப்படுத்துகிறது.

    பெரும்பாலும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுதல், தொண்டை வலி, கண்களில் கண்ணீர் பொங்கி வடிதல் போன்ற அறிகுறிகளாலேயே ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 2 மற்றும் 3-வது அலைகளில் ஏற்பட்டதைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுதல், மிக குறைந்த அளவில் சாப்பிடுவது, ஆக்சிஜன் அளவு குறைவு ஆகிய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள பிரபலமான குழந்தைகள் நல மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான குழந்தைகளை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோடை விருந்தாக இந்த சாதாரண வைரஸ்கள் தான் குழந்தைகளை கஷ்டப்படுத்துவதாக கூறினார்கள்.

    அரசு பொது சுகாதாரத் துறை ஆய்வகத் தரவுகள் படி கடந்த 2 மற்றும் 3-வது அலையை ஒப்பிடும் போது மிக குறைவான அளவே தொற்றுகள் பதிவாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்கள் வீரியத்துடன் இருந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது ஒமைக்ரான் வைரஸ் குடும்பத்தின் உட்பிரிவுகள்தான் பரவி வருகிறது. இவை குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான விசயம். மேலும் இது வீரியம் குறைந்த வைரஸ் என்ற முடிவுக்கும் வரமுடிவதாக துணை இயக்குனர் ராஜூ கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணை நோய் பாதிப்பு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
    • செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம் கூறியதாவது:-

    பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

    * வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.

    * நமது பாரம்பரிய பானங்களான நீர்மோர், பதநீர், நுங்கு, இளநீர், கூழ் வகைகள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுடன், வெயிலால் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளும் கிடைக்கிறது.

    * இயற்கையாக கிடைக்கும் கரும்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

    * சித்த மருத்துவ மூலிகையான நன்னாரி வேரினை கொண்டு தயாரிக்கப்படும் மணப்பாகுவை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் எரிச்சலில் இருந்து பாதுகாக்கலாம். நமது தாகமும் தணியும்.

    * வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் அம்மை, சிறுநீரக கல் போன்றவை வராமல்பார்த்து கொள்ளலாம்.

    * இரவில் தூங்கும் போது கால் பாதத்தில் நெய் தேய்த்து கொண்டு தூங்கினால், கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.

    * குறிப்பாக நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலைங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

    * வெள்ளரிக்காய் சாப்பிடுவதுடன், உடலில் அதனை பூசிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் தோல் அலர்ஜியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    * எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டிகளில் வைத்த குளிர்ந்த தண்ணீர், செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
    • கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்

    கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

    * பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

    * தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

    * அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

    * மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

    * குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

    * சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×