search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private schools"

    • பெற்றோர்கள், விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
    • சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந்தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    சென்னை:

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற நாளை (வியாழக்கிழமை) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர் நாளை முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மே 18-ந்தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- ந்தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்தோர் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகியவற்றை உரிய அலுவலரிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    பெற்றோர்கள், விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்கத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் மே 23-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 24-ந் தேதி இணைய தளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந்தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
    • சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்று.

    இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனை கொண்டு கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகள் மீது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு.
    • தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம்.

    மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் உறுதிமொழி படிவம் பெற்றது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் லூர்துமணி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

    இது தொடர்பாக நடந்த வன்முறையில் தனியார் பள்ளி வளாகத்தில் சில சமூகவிரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு பொதுசொத்துக்களை அடித்து சூறையாடி உள்ளனர். இது போன்ற சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளியின் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    நெல்லை பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாச்சலபதி என்ற குட்டி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் போது சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கேள்வித்தாளை முன்னரே ஆய்வு செய்யாமல் கடமையை செய்ய தவறிவிட்டனர்.

    எனவே கடமையை செய்யாத துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வணிகவியல்துறை தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவ பக்தர் ஒருவரும் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

    மேம்பாலம்

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், நெல்லையில் 1999-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    அவர்களின் நினைவாக கொக்கிரகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மாஞ்சோலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கருங்குளத்தை சேர்ந்த முதியவர் கணேசன் என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யுமாறு பலமுறை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையை சேர்ந்த மைக்கேல்ராஜ் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளிகள், இந்து ஆலயம் உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி காரணமாக மதுரையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.
    • கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கூடத்தில், மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பள்ளிகூடம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 'கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்புக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்' என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இருந்தபோதிலும் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் 300 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், இன்று வழக்கம் போல திறந்து இருந்தன. எனவே மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'மதுரை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஏராளமான வக்கீல்கள், இன்று மதுரை உயர்நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு திரண்டு வந்தனர். அப்போது பலியான கள்ளக்குறிச்சி மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வக்கீல்கள், 'தனியார் கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் பள்ளிமூடல் மிரட்டலை தடுத்து நிறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.
    • இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிகள் செயல்படுமா? அல்லது மூடப்ப டுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.

    இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை அளித்துள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டு உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன.

    தனியார் பள்ளிகள் இயங்குவதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது சட்டத்தை மீறும் செயல்.
    • மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகள் நாளை தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டுமே உள்ளதாகவும்,பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவது வழக்கம் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும், நாளை தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு.
    • தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் இன்று கலவரமாக மாறியது.

    அந்த தனியார் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.

    மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்களுக்கு தீ வைத்தனர். அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளின் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்குறிச்சி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பள்ளியில் படித்து வரும் ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நாளை காலை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், நிர்வாகிகள், கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு 2 நாட்களுக்குள் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் தனியார் பள்ளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சிபிஎஸ்சி கல்வி முறையில் இயங்கும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளால் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். மெட்ரிக்குலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மெட்ரிக் இயக்குனரிடம் அங்கீகாரம் பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது கல்வி துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து அந்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளாக இருந்தால் 33 சென்ட் நிலமும், நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதியாக இருந்தால் 1, 2 மற்றும் 3 ஏக்கர் நிலமும் வேண்டும்.

    இது தவிர பள்ளி கட்டிடத் தன்மை, தீ பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று ஆகியவை பெற வேண்டும். சுமார் 2 ஆயிரம் தனியார் பள்ளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.


    இவற்றில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த பள்ளிகளுக்கு மேலும் ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இந்த வாரத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லையெனில் இந்த மாத இறுதியில் பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க தயாராக உள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் தான் 86 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 55 பள்ளிகளும், அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

    அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை மூடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள 760 நர்சரி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அரசு பள்ளிகளை நடத்துகிறார்கள்.

    ஆனால் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். 760 நர்சரி பள்ளிகளில் தகுதியான பள்ளிகளுக்கு அரசு அனுமதி உடனே வழங்க வேண்டும். அதிகாரிகள் தாமதம் செய்வதாலும், அலட்சியத்தாலும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. மெட்ரிக்குலேசன், மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி தர வேண்டும். கட்டிட அனுமதி தொடர்பாக கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு இன்னும் தெளிவான முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசின் காலதாமதத்தால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. விரைந்து முடிவு எடுத்து அறிவித்தால் அங்கீகாரம் புதுப்பிக்கும் நடைமுறைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNGovtSchools #Sengottaiyan
    காஞ்சிபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
    ×