search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples protest"

    • மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
    • சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பூனாட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இதையடுத்து ஒரு வாலிபர் நேற்று பள்ளிக்கு வந்து அந்த மாணவிக்கு தான் மாமா என்று கூறி விட்டு உள்ளே சென்றார். இதை தொடர்ந்து அவர் அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் இன்று காலை அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோடு பூனாட்சி பகுதியில் அந்த தனியார் பள்ளி அருகே ஒன்று திரண்டனர்.

    இதைதொடர்ந்து அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டடனர். இதையடுத்து நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பள்ளிக்கு வந்த வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீதும், மாணவியை கடத்தி சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க என கூறினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் மகன் மலர்மன்னன் (வயது 25), சுப்பையா மகன் மகேந்திரன் (25). இதில் மலர்மன்னன் டிரைவராகவும், மகேந்திரன் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மலர்மன்னன் மற்றும் மகேந்திரன் இருவரையும் ஒரு வழக்கு தொடர்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்களிடம் பேசி போலீசார் அழைத்து சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் போலீஸ் நிலையத்தில் இருந்து இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இருவரையும் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் பிடிபட்ட இருவரையும் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் விடுவிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இரவு வரை அவர்கள் இருவரையும் விடுவிக்காததை கண்டித்து ராஜபாளையம் அருகே தென்காசி-விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட ஆண்டிச்சாமி மற்றும் வடிவு ஆகியோர் சிறைப்பிடித்த இருவரையும் விடுவிக்க கோரி திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பம்மது குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அவர் சரிவர பதில் கூறவில்லை என தெரிகிறது.

    இதனால் இன்று காலை 8.30 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் ஆவடி- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது .
    • பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டது. தஞ்சை நகரில் மட்டும் 10 கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த பட்டியலில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் இடம் பெறவில்லை. எனவே இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இயக்கம், அமைப்புகள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்த நிலையில் மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது மூட வேண்டும்.. மூட வேண்டும்.. மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், மாட்டு மேஸ்திரி சந்து மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்தக் கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மூடப்பட்ட பட்டியலிலும் இந்த கடை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக்கை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.

    டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    • பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி விட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி இறந்தார். இதனை தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்றார்.

    திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்று பள்ளி குழந்தைகள், முதியவர்கள் அந்த சாலையில் பரபரப்பாக செல்லும் நேரத்தில் கனரக வாகனங்கள், லாரிகள் அந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பும் ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்தநிலையில் லாரிகள், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தினர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.

    மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
    • குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம்.

    இங்குள்ள பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது:-

    நாங்கள் 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் இந்த முள்வேலிகளை அகற்றாவிட்டால் விவசாய சங்கம், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சார்பில் முள்வேலிகளை அகற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பாதையை அடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அரசின் நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.

    புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.

    5-வதுநாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்துறை ஊழியர்களால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை பாயும் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள மகேஸ்வரி நகர், புவனேஸ்வரி நகர், சுப்பிரமணி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "புதிதாக திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டும் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

    இதையெல்லாம் மீறி டாஸ்டாக் கடையை திறக்க சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

    பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களும், டாஸ்மாக் கடைய திறந்தால் பாதிக்கப்படுபவார்கள் என்றும் எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.
    • புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.

    தங்கள் வீடுகளுக்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜநகரம் கிராமத்தைச் சார்ந்த மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து நிலம் வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர்.

    புகாரின் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த அளவீட்டு கற்களை அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் மாநில நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டி சாய்த்தனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஆர்.கே. பேட்டை தாசில்தார் தமயந்தியை சிறைபிடித்தனர். பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி 3 மணிநேரம் போராடிய தாசில்தார் திடீரென்று மயக்கம் அடைந்தார்‌. அவரை கடும் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து போலீசார் மீட்டனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது திடீரென்று போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை, மின்சாரத்தை தடை செய்து சரமாரியாக கற்கள் கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் போலீசார் அங்கிருந்து தப்பி ஓடினர். நேற்று மாலை இரவு வரை நடந்த இந்த சம்பவத்தில் ஆர்.கே பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்ய பிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் ஆகியோர் ஆர்.கே.பேட்டையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே உள்ள பாண்டியநல்லூரில் காமதேனு நகர், ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சோளிங்கர்- பானவரம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் அன்பரசு, கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில்- எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடந்த முறை மறியலில் ஈடுபட்டபோது தற்காலிகமாக குடிநீர் வினியோகம் வழங்கபட்டது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×