search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pariyerum Perumal"

    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாடப்படுகிறது. #PariyerumPerumal #96Movie
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம்  வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

    இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. 

    நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.

    இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம். 



    அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்த விரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.
    பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் படம் பார்க்கும் வரை எனக்கு பதற்றம் இருக்கும் என்று கூறினார். #PariyerumPerumal #MariSelvaraj
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  

    இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ‘பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். 

    என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். 



    பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்’ என்றார்.
    அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள் என்று பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பா.ரஞ்சித் பேசியுள்ளார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  



    தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
    பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி இருக்கிறார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் நடிகர் கமல் பாராட்டி இருக்கிறார்.



    படம் பார்த்து கமல்ஹாசன் தனது நண்பர்கள் பலர் போன்செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.
    கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மக்கள் பாராட்டுவதை அறிந்த விஜய், அவரை நெகிழ வைத்து பாராட்டி இருக்கிறார். #Kathir #Vijay
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.

    இது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.



    அப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. நல்லா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது'' என்றார்.
    ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்று விட்டது, காட்சிகள் உயரும் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    கடந்த வாரம் செக்கச் சிவந்த வானம் வெளியானதால், பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் தியேட்டர் குறைவாக இருப்பதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.



    இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மிக்க நன்றி!! நீங்கள் தரும் ஆதரவுக்கு ஏற்ற திரையரங்க காட்சிகள் உயர்த்துவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறோம்.. ஏற்றம் வரும் காத்திருப்போம்!!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  கவனத்துக்கு’ என்று பதிவு செய்திருந்தார்.

    இதற்கு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட (அருவி, மாநகரம்). மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்!’ என்று கூறியிருக்கிறார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பரியேறும் பெருமாள்' படத்தின் விமர்சனம். #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi
    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர். ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.

    ஊருக்காக போராட வேண்டுமென்றால், ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார். எதையும் வெளிப்படையாக பேசும் கதிருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அவரது வகுப்பில் படிக்கும் யோகி பாபுவுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. இந்த காரணத்தாலேயே இருவரும் நண்பர்களாகின்றனர்.



    அதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. மற்றவர்களை விட கதிருடன் பேச ஆவல் கொள்கிறார். கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.

    இந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். தனது நண்பனிடம் ஒரு நல்ல துணியை வாங்கி போட்டுக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது. கயல் ஆனந்தியை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரது தந்தையான மாரிமுத்து மற்றும் ஆனந்தியின் அண்ணன் கதிரை ஒரு அறையில் பூட்டிவைத்து அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.

    இதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார். ஆனால் விடாத கருப்பாக கதிருக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.



    இந்த பிரச்சனை கல்லூரி முதல்வர் வரை செல்கிறது. அந்த கல்லூரி முதல்வர், தனது அனுபவத்தை கதிருக்கு அறிவுரையாக கூறி, கதிரை தேற்றிவிடுகிறார். மேலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார். 

    கல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். மேலும் கதிரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்கள்.



    கடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா? தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா? ஆனந்தியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதிருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக பரியேறும் பெருமாள் அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொரு முறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.



    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கயல் ஆனந்தி இன்முகத்தோடு வருகிறது. தன்னை சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதை அறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். கயல் ஆனந்தியை இனிமேல் ஜோ ஆனந்தி என்று கூறும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக, பதியும்படியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். 

    மற்றபடி மாரிமுத்து, சண்முகம், லிங்கேஸ்வரன், கராத்தே வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்களும் கலைஞர்களோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

    பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை. 



    தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    படத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. 

    மொத்தத்தில் `பரியேறும் பெருமாள்' சிறப்பான படைப்பு. #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi

    கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் நாளை ரிலீசாகவிருக்கும் நிலையில், பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் தான் என்று நடிகர் கதிர் கூறினார். #Kathir #PariyerumPerumal
    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார் கதிர். அவர் அளித்த பேட்டி...

    ‘பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக மாரி செல்வராஜிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது புதிதாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது. திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. கடும் வெயிலில் பொட்டல்வெளி என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பரவாயில்லை என உட்கார்ந்து விடுவேன்.



    படத்தில் கருப்பி என்ற நாய்க்கு அதிக முக்கியத்துவம் போல?

    ஆமாம், அதன் நிஜப்பெயரே கருப்பி தான். இயக்குனரின் அண்ணன் வீட்டு நாய். அது நம் நாட்டு இனத்தை சேர்ந்த வேட்டை நாய்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில் அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக் கொண்டதால் தான் நடக்கவே முடிந்தது.



    சிகை, சத்ரு என்று நீங்கள் கஷ்டப்பட்டு நடிக்கும் படங்கள் கூட ரிலீசில் பிரச்சினைகளை சந்திக்கின்றன. இது வருத்தம் இல்லையா?

    சினிமாவில் பின்புலம் மிக அவசியம். நான் எந்த பின்புலமும் இல்லாமல் கோவையில் இருந்து வந்தவன். என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும், படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான். ஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம். ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

    சினிமாவில் உங்கள் பாதை விஜய்யா? விக்ரமா?

    விஜய்சேதுபதி பாதை. #Kathir #PariyerumPerumal

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முன்னோட்டம். #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
    நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

    இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

    இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.

    மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் படக்குழு யோகி பாபு பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் நானும் கல்லூரி சென்று படிச்சிருக்கலாமோ என்று வருத்தப்பட்டதாக கூறினார். #PariyerumPerumal #YogiBabu
    யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். கதாநாயகனாக நடிக்கிறார் என்று செய்தி வந்தபோது அதை மறுத்தார். ஆனால் கூர்கா என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. 

    யோகிபாபு நடிப்பில் அடுத்து பரியேறும் பெருமாள் படம் வர இருக்கிறது. கதிர், ஆனந்தி இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் படம் உருவான விதத்தோடு யோகி பாபு படம் பற்றிய தனது கருத்துகளையும் கூறியுள்ளார். 



    “நான் பத்தாவது வரை தான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். 32 நாட்கள் கல்லூரியிலே வலம் வந்தது நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடித்துள்ளேன். நடித்து முடித்து மானிட்டரைப் பார்க்கும்போது எனக்கும் இத்தகைய காட்சிகளில் நடிக்க வருகிறதே என்று நினைத்தேன். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திரைக்கதையை உருவாக்கியிருப்பார் என நினைக்கிறேன். நெல்லை மக்கள் வீரமாகவும், பாசமாகவும் உள்ளனர். 

    படப்பிடிப்பின்போது அவர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கட்டிப்பிடித்து பாராட்டினார்” என்று யோகி பாபு கூறி உள்ளார். செப்டம்பர் 28-ஆம் தேதி பரியேறு பெருமாள் திரைப்படம் வெளியாக இருக்கிறது. #PariyerumPerumal #YogiBabu

    யோகி பாபு பேசிய வீடியோவை பார்க்க:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கயல் ஆனந்தி முதல்முறையாக டப்பிங் பேசியுள்ளார். #PariyerumPerumal #Kathir
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. 

    இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
    முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். 

    இந்த படத்திற்காக முதல்முறையாக கயல் ஆனந்தி தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். கயல் ஆனந்தி சினிமாவில் நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், படத்தில் அவரது கதாபாத்திரம் பூரணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டதற்கு இணங்க, முதல்முறையாக தனது சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்க்கது.



    சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசையை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #PariyerumPerumal #Kathir #KayalAnanthi

    அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும் என்று பரியேறும் பெருமாள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராம் பேசினார். #PariyerumPerumal #PaRanjith
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இயக்குநர் ராம் பேசியதாவது,

    எனக்கு ஒரு கவிதையில், நான் வாசித்த காட்சி ஞாபகம் வருகிறது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

    மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப்படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும், என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.



    இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

    ×