search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Game"

    • ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார்.
    • வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ரோகித் குமார் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது தந்தை வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.

    ரோகித் குமார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் ரோகித்குமார் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி கடனை கட்டினார்.

    மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.

    இதனால் விரத்தி அடைந்த ரோகித் குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். ரோகித் குமாரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கன்னவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுமன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார்.
    • வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக இவருக்கு வருமானம் வந்தது. அந்த ஆர்வத்தில் சல்மான் தொடர்ந்து ஆன்லைனின் சூதாட்டம் ஆடினார். அதில் அவர் தனது சம்பள பணத்தை இழந்தார். மேலும் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நடந்த சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் அவர் மறைத்தார். சம்பவத்தன்று சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சல்மான் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டம் ஆடினேன். அதில் சம்பள பணம் முழுவதையும் இழந்து விட்டேன். எனக்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பில் பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார்.

    ஆளுநருடனான சந்திப்பில் ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
    • வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.

    ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அவரது மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

    பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்" என கருத்து தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததாகவும், மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.
    • சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    • கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார்.
    • நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருபவர் சரத்குமார் திவாரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார். பின்னர் மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவனை திட்டியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை. இது தொடர்பாக மாணவனின் தந்தை போன் மூலம் ராயலா நகர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்கள்.

    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது.
    • எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

    மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுவதாக சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.

    இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.

    சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    அதில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் செயல்பட உள்ளது. இந்த ஆணையத்தில் ஐ.டி.வல்லுனர்கள், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    இவர்கள் எந்தெந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

    உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணை அறிக்கையை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தது.

    இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர தமிழகத்தின் நலன், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    • ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
    • அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.

    துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஏடு கொண்டலு தனது வருவாய் அனைத்தையும் இழந்தார்.
    • மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்தவர் ஏடு கொண்டலு. (வயது 45). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது மைத்துனர் அப்பண்ணா. இவரும் அரசு பள்ளியில் கைவினை கலை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஏடு கொண்டலு தனது வருவாய் அனைத்தையும் இழந்தார். மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தார்.

    இந்த நிலையில் அப்பண்ணாவின் மகனுக்கு கடந்த ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணமகள் தனது வீட்டிலிருந்து சீதனமாக கொண்டு வந்த நகை, பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகை, பணம் அனைத்தையும் அப்பண்ணா வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அப்பண்ணா தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 கிலோ தங்க நகைகள், ரூ 21.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பண்ணா கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர்.

    கடந்த வாரம் ஸ்ரீகாக்குளம் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா குறை தீர்வு கூட்டம் நடத்தினார். அப்போது அப்பண்ணா ராதிகாவிடம் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

    இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மணமகன் மற்றும் மணமகள், வாடகைதாரர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அப்பண்ணா தன்னுடைய வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது என தனது மைத்துனர் ஏடு கொண்டலுவுக்கு தெரியும் எனவும் வெளியூர் செல்லும்போது வீட்டு சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்வதாகவும் கூறினார்.

    இதையடுத்து ஏடு கொண்டலு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனது விவசாய நிலத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்று கடன் கொடுத்ததாகவும், மேலும் கடன் இருந்ததால் மைத்துனர் வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார்.

    போலீசார் ஏடு கொண்டலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 9 மாதத்திற்கு பின் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது.

    • இளம்பெண் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார்.
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கரூரை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் பொள்ளாச்சி கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், 23 வயது உறவுகார பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் நாங்கள் கரூரில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை கோமங்கலத்திற்கு வந்தோம்.

    இங்கு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறான். இந்த நிலையில் எனது மனைவி எனது செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார். அதனை நான் கண்டித்தேன்.

    ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். சம்பவத்தன்று நான் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் மாலை நான் வீடு திரும்பியபோது எனது மனைவி வீட்டில் இல்லை.

    அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தேன். அப்போது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைகாரரிடம் கேட்டபோது அவர் எனது மனைவி பொள்ளாச்சி பஸ் ஏறி சென்றதை பார்த்ததாக கூறினார். அதன் பின்னர் அங்கும் சென்று தேடி பார்த்தேன். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    சந்தேகம் அடைந்த நான் அவர் விளையாடும் பிரீ பையர் விளையாட்டை பரிசோதனை செய்தேன். அதில் எனது மனைவி ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அதிக மெசேஜ் அனுப்பி அதனை அழித்து வைத்திருந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. அந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எனது மனைவி அந்த வாலிபருடன் சென்று இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவியை தேடி கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இதையடுத்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    ×