search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் ரவி"

    • கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

    தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்ற அமர்வு முன்பு வந்தது.

    இதில், கருக்கா வினோத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

    நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    • நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

    இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்ற 4 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, இந்த மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என புகழாரம் சூட்டினார்.

    இதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சனுக்கும், முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கும் வாழ்த்து.

    அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது, வருங்கால மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது.
    • வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    கவர்னர் ரவி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசும்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாக மாறுகின்றன. கடந்த 4ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அவர் பேசும்போது, "தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பதுதான் பொருத்தமானது" என்று பேசி இருந்தார்.

    கவர்னரின் இந்த கருத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு என்றால் கவர்னருக்கு எட்டிக்காயாக இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதுபோல காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் கவர்னருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டன. போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. அன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். தமிழக அரசு தயாரித்து வழங்கியிருந்த அந்த உரையில் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்தார்.

    குறிப்பாக தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்ற பத்திகளை அவர் வாசிக்காமல் கடந்து சென்றார். மேலும் கவர்னர் உரையில் சில புதிய கருத்துக்களை சேர்த்தார். இது தி.மு.க. தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கவர்னரின் செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் உடனடியாக பதில் அளிக்கும் வகையில் 2 பக்க தீர்மானத்தை வாசித்து அதை நிறைவேற்றினார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரை தான் சட்டசபை குறிப்புகளில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். இதையறிந்த கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டார்.

    கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. சார்பில் இதுபற்றி ஜனாதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 12-ந் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க.வினர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை கொடுத்தனர்.

    கடிதத்தை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே மறுநாள் (13-ந் தேதி) கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் சட்டசபையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக பேசுவதற்காக சென்றிருப்பதாக கூறப்பட்டது.

    ஆனால் 14ம் தேதி இரவே டெல்லியில் இருந்து கவர்னர் சென்னை திரும்பிவிட்டார். டெல்லியில் அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளில் சிலரை கவர்னர் சந்தித்து பேசிவிட்டு வந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பேசியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023 ஜனவரி 4ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

    அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

    அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் குழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

    எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைபோல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
    • கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது.

    தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

    ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன.

    அற்ப அரசியல் லாபங்களுக்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்ததன் மூலம் சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு.

    ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே, திமுக கூட்டணிக் கட்சிகள் போராடத் தயாராகிவிட்டனர்.

    சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.

    ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது.

    கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது. ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு.

    திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ?

    மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பில் பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார்.

    ஆளுநருடனான சந்திப்பில் ஆன்லைன் ர​ம்மி தடை சட்டம் தொடர்பாக பேசியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

    ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×