search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala police"

    கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகாரில் கைதான பிராங்கோ முல்லக்கல் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது. 

    தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டார்.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவரை, விசாரணைக்காவலில் எடுக்க திட்டமிட்டுள்ள போலீசார், அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். #Seeman
    சென்னை:

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அதிக அளவில் சென்றுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பிலும் கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக குடிநீர், உடைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் திரட்டப்பட்டன. ரூ.15 லட்சம் மதிப்பிலான இந்த நிவாரண பொருட்களுடன் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் கேரளா சென்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரி முகாமுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பினர்.

    நாம் தமிழர் கட்சியினர் சென்ற வாகனங்களில் பிரபாகரன் படத்துடன் கூடிய பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மடக்கினர். கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் சீமான் அங்கு விரைந்து சென்றார். போலீஸ் நிலையத்தில் வைத்து சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் கடும் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். நீங்கள் கொண்டு வந்திருக்கும் உணவு பொருட்களின் மீது நம்பகத்தன்மை இல்லை என்றும், பிரபாகரன் படத்தை வைத்திருப்பதால் அனைவரும் விடுதலைப்புலிகள் தானோ? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் கூறியதுடன், இது போன்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதனை கேட்டு சீமான் அதிர்ச்சி அடைந்தார். நாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களை நன்றாக பரிசோதனை செய்யுங்கள். அதுவரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறினார். பின்னர் 4 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீமான் கூறியதாவது:-

    நிவாரண பொருட்களை கொண்டு செல்ல, அங்குள்ள பெண் வட்டாட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தோம்.

    கோட்டயத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் உணவு பொருட்களை கொண்டு சென்றோம். அம்மாநில காவலர்களே பொருட்களை இறக்குவதற்கு உதவி செய்தனர். ஒத்துழைப்பும் அளித்தனர். கொண்டு சென்ற பொருட்களையெல்லாம் இறக்கும் வரையில் 2½ மணி நேரம் நானும் அங்கேயே இருந்தேன். பின்னர் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டோம்.

    இதன் பிறகுதான் கட்சியினரை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகே நான் அங்கு சென்றேன்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, எங்களுக்கு மேலிட உத்தரவு. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம் என்று கூறி விசாரித்தனர். 7 மணி நேரம் பயணம் செய்து சாப்பிடாமல் உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம் என்று தெரிவித்தோம். அதற்கு தமிழர்கள் தான்அதிக அளவில் உதவி இருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர். யாருடைய தூண்டுதலின் பேரிலோ தான் போலீசார் அவமானப்படுத்தும் விதத்தில் எங்களிடம் நடந்து கொண்டனர்.

    புலிக் கொடியையும், பிரபாகரன் படத்தையும் நீங்கள் எடுத்து வந்திருப்பதால் விசாரிக்க சொல்லி உத்தரவு என்று கூறிய போலீசார், எனது முகவரி, செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    நாங்கள் செல்லும் போது சேவாசங்கத்தினர் சிலர் பொருட்களை தங்களிடம் கொடுக்குமாறு கூறினர். நாங்கள் உரிய அதிகாரிகளிடம்தான் வழங்குவோம் என்று கூறி எடுத்துச் சென்று விட்டோம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
    குமரி வாலிபரை போலீஸ் விசாரணையில் கொன்று விட்டதாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் அனீஷ் (வயது 20). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

    கடந்த 23-ந் தேதி கேரள மதுவிலக்கு போலீசார் களியக்காவிளை வந்து ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அனீசை அழைத்து சென்றனர். அதன்பிறகு அனீசை அவர்கள் எங்கு வைத்து விசாரித்தார்கள், அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று அனீசின் உறவினர்களுக்கு கேரள போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அனீசுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    உடனே உறவினர்கள் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அனீஸ் இறந்து பிணமாக கிடந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த தகவல் களியக்காவிளையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    விசாரணைக்காக அழைத்துச் சென்ற கேரள போலீசார் தாக்கியதில் தான் அனீஷ் இறந்திருக்க வேண்டும், எனவே அனீசை அழைத்துச் சென்ற கேரள போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் அனீசை களியக்காவிளை பகுதியில் இருந்து கேரள போலீசார் அழைத்து சென்றுள்ளனர். எனவே இங்குள்ள போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவும் கொடுத்தனர். அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொண்டு உறவினர்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    மர்மமான முறையில் இறந்த அனீசின் உடல் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. 2-வது நாளாக அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். அனீஷ் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசாரணைக்காக அழைத்துச் சென்ற அனீசுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அனீசின் உறவினர்கள் போலீசார் கூறும் காரணத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே திருவனந்தபுரத்தில் 2005-ல் விசாரணை கைதியை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதேநாளில் களியக்காவிளை வாலிபர், கேரளாவில் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #taimlnews
    கேரளாவில் போலீஸ் நிலைய காவலில் இருந்த விசாரணை கைதியை அடித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் 6 போலீசாருக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. #KeralaPolice
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

    அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

    இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.


    அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

    சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

    இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். நேற்று கோர்ட்டில் தீர்ப்பை கேட்பதற்காக ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.

    மற்ற 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கூறி உள்ளார்.அவர்களும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்படுவார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரபுழா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் மரணமடைந்தார். இவரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மாநில மனித உரிமை கமி‌ஷனும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சில போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். இதில், கொலை முயற்சி, பாலியல் புகார்கள், பணமோசடி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 59 போலீசார் மீது குற்றம் சாட்டுக்கள் கூறப்பட்டது.

    இதில் 10 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது விரைவில் நடவடிக்கை இருக்குமென்று தெரிகிறது. #KeralaPolice
    சென்னையை சேர்ந்த தொழிலதிபரை கேரள போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, 30 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை மீட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாராஜன்(43). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஜேக்கப் தன்னுடைய சொகுசு காரை மகாராஜனிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் மகாராஜனிடம் வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்துள்ளார்.அதன் பிறகும் மகாராஜன் காரை அவருக்கு கொடுக் காமல் ஏமாற்றியதாக கூறப் படுகிறது. இதுகுறித்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் எர்ணாகுளத்தில் இருந்து ஒரு சப்-இன்ஸ் பெக்டர், 3 காவலர்கள் அடங்கிய தனிப்படை நேற்று மாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் மகாராஜனை கேரளாவுக்கு ஒரு காரில் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கேரள போலீசார் வந்த கார் கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சோதனைச் சாவடி அருகே இரவு 11 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல் கேரள போலீசார் வந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர் காரில் இருந்த போலீசாரை தாக்கியதோடு, ஆயுதங்களை காட்டி மிரட்டினர். அதன் பின்னர் காரில் இருந்த மகாராஜனை மீட்டு கார்களில் தப்பிச் சென்று விட்டனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கேரள போலீசார், உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினர். இதைத் தொடர்ந்து பாலக்காடு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான கேரள போலீஸ் குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    இன்று அதிகாலை இது குறித்து கோவை கருமத்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.

    கடத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் கணியூர் சோதனை சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.ஆனால், அதில் கும்பல் காரில் வந்து கடத்தி சென்றதற்கான அடையாளங்கள் இல்லை.

    இது போலீசாருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மகாராஜனை வேறு எங்கேயாவது விட்டு, விட்டு இங்கு வந்து புகார் கொடுக்கிறார்களா? உண்மையிலேயே கும்பல் மகாராஜனை கடத்தி சென்றிருந்தால் எந்த பாதையில் சென்றிருப்பார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    செல்போனில் படம் பிடிக்கப்படும் அந்தரங்க காட்சிகள் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    தற்போது கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த காட்சியை அந்த பெண் போலீஸ், தான் இணைந்துள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார். தானும் அந்த போலீஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த பெண் போலீஸ்காரர் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு போலீஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீஸ் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×