search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள லாக்-அப்பில் விசாரணை கைதி பலி - 6 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிப்பு
    X

    கேரள லாக்-அப்பில் விசாரணை கைதி பலி - 6 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

    கேரளாவில் போலீஸ் நிலைய காவலில் இருந்த விசாரணை கைதியை அடித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் 6 போலீசாருக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. #KeralaPolice
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

    அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

    இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.


    அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

    சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

    இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். நேற்று கோர்ட்டில் தீர்ப்பை கேட்பதற்காக ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.

    மற்ற 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கூறி உள்ளார்.அவர்களும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்படுவார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரபுழா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் மரணமடைந்தார். இவரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மாநில மனித உரிமை கமி‌ஷனும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சில போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். இதில், கொலை முயற்சி, பாலியல் புகார்கள், பணமோசடி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 59 போலீசார் மீது குற்றம் சாட்டுக்கள் கூறப்பட்டது.

    இதில் 10 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது விரைவில் நடவடிக்கை இருக்குமென்று தெரிகிறது. #KeralaPolice
    Next Story
    ×