search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Raid"

    • 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.
    • 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்து தரப்பினரின் வாகனங்களையும் எந்தவித பாகுபாடுமின்றி சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் பறக்கும் படை அதிகாரிகள் சில இடங்களில் பாரபட்சம் காட்டியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பணப்பட்டு வாடாவை தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இன்று அதிரடியாக தொடங்கி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

    அப்போது பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துடன் வரும் நாட்களில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரி பகுதியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில் அதிபரின் வீட்டில் ரகசிய இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோன்று கொண்டித்தோப்பு பகுதியிலும் வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்யும் பணியிலும் ஒப்பந்த பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பரிசுப் பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு இந்த 2 தொழில் அதிபர்களும் மொத்தமாக சப்ளை செய்துள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர புரசைவாக்கம் உள்ளிட்ட மேலும் 3 இடங்களிலும் தொழில் அதிபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது வீடுகளிலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரசியல் பிரமுகர்களின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிடாதுறை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப்பின் வீட்டில் இருந்து ரூ.11 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அணிக்கடவு பகுதியைச்சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இப்போதே பணப்பட்டு வாடா செய்து வருவதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல் பரவியது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள தொகுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு அரசியல் கட்சியினர் தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருப்பதாகவும் தகவல் பரவியது.

    இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து பணப்பட்டு வாடாவை தடுக்க அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தேர்தல் களத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது35). இவர், பேரண்டபள்ளி பகுதியில் தனியார் கிரஷர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி, பெங்களூரிலிருந்து அவர் காரில் வந்தபோது, ஓசூர் சோதனைச்சாவடி பகுதியில் அவரது காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர். தனது கிரஷரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை அவர் பெங்களூரிலிருந்து, ஒரு தொழிலதிபரிடம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை, ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரில் உள்ள லோகேஷ் குமாரின் வீட்டில், ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு சூட்கேசை கைப்பற்றி போலீஸ் ஜீப்பில் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின் மருமகன் ஆவார்.

    இந்த அதிரடி சோதனை ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
    • போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கர்ணன் (வயது70). இவர் கே.கே.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும் நிலக்கிழாராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கர்ணன் வீடு மற்றும் கம்பத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்த நிலையில் இன்று காலை வரை நீடித்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இதுபோன்று நிதி நிறுவனங்களில் அதிக அளவு பணம் பெற்று பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து போடிக்கு வந்த தனியார் வாடகை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு சூட்கேசில் ரூ.20 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
    • குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சென்னை மாநகரை குறி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலரை குறி வைத்து அவர்களது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக விரைவில் பெரிய அளவிலான மெகா சோதனையை நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனையை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேர்தல் நேரத்தில் இது போன்ற சோதனைகளை நடத்துவதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அவ்வப்போது நடைபெறும் அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளே பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் பெரிய அளவில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை நடத்தினால் அது தேர்தல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எப்போதுமே சோதனைகள் என்பது ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்படுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை. இதற்கு முன்பும் பலமுறை ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சோதனை என்பது நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே ஒவ்வொரு முறையும் திடீரென சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
    • ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.

    சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.

    அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.

    • சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
    • சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    சென்னையை மையமாக கொண்டு செயல்படும் மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கன்வர் லால் குழுமத்துக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    சவுகார்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் கன்வர்லால் குழும தொழில் அதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவு 11 மணியுடன் நிறைவு பெற்றது.

    இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.

    பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.

    பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து கோவை காளப்பட்டி பகுதியில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனம் மற்றும் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு, அவருடைய மகன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த 2-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    கோவை காளப்பட்டியில் உள்ள கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதேபோல் பட்டணத்தை சேர்ந்த ராமநாதனின் வீடு, அவருடைய அலுவலகம், மகன் வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. வீட்டில் உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    இதுதவிர ராமநாதனின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கி இருக்கும் நாயக்கன்பானையம், ராமலிங்கம் நகரில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பம்புசெட் நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் இன்று 3-வது நாளாக சோதனை நடந்தது.

    சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

    சோதனை முடிவடைந்த பிறகே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும். சோதனை நடைபெற்று வரும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
    • சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரிய துறை, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரிய துறையில் ஒப்பந்தங்களை பெற்று கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் பெரிய கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் செனாய் நகர், எழும்பூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை இன்று 2-வது நாளாகவும் நீடிக்கிறது.

    சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அண்ணாநகர் 10-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செனாய் நகர் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அண்ணாநகர் வீட்டுக்கு இன்று 'சீல்' வைத்துள்ளனர்.

    இந்த நிறுவனம் ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பு பகுதியை வடிவமைத்து கட்டி கொடுத்த நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாமக்கல், ஈரோடு பகுதிகளிலும் பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தாங்கள் மேற்கொண்ட கட்டுமான பணிகளில் அதிக வருவாய் பெற்றும் அதற்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்திருந்தன.

    இதன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நீடிக்கும் சோதனை நிறைவு பெற்ற பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாமக்கல்லைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் டெண்டர் பெற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டிடங்களை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் ஒப்பந்ததாரரின் வீடும் அதே பகுதியில் அமைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் நடந்தது. 2-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. சோதனையில் கணக்கு நோட்டுகள், சொத்து ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம் இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நேற்று காஞ்சிகோவில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம். இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று காஞ்சிகோவில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் இவர்களுக்கு தொடர்புடைய ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, ஈரோடு பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். அவருடைய உறவினர் ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போல் நாமக்கல் ஒப்பந்ததாரரின் உறவினர் வீட்டிலும் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 30 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை எழும்பூரில் உள்ள இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

    எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதே போன்று செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருகிறது. இதன் முடிவிலேயே வரி ஏய்ப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    • கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
    • நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பணம் ரொக்கமாக மீட்கப்பட்டது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்றது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பகுதிகளில் மீட்கப்பட்ட ரொக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த பணம் முழுக்க என் குடும்பத்தார் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு சொந்தமானது என்று நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். வருமான வரித்துறை சார்பில் இது கருப்பு பணமா இல்லை வெள்ளை பணமா என்பதை தெரிவிக்கட்டும்."

    "நான் வியாபார துறையில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இதற்கு பதில் அளிப்பார்கள். மக்கள் இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த பணத்திற்கும் காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்," என்று தெரிவித்தார். 

    ×