search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flavonoids"

    • `சூப்பர் புட்’ உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது.
    • முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

    கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தின் தன்மைக்கேற்ப உடலை நீரேற்றமாகவும், ஊட்டச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமானது. கோடை கால வெப்ப சூழலுக்கு ஏற்ற `சூப்பர் புட்' உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது. ஏராளமான ஊட்டச்சத்துகள், மருத்துவ குணங்கள் நிரம்பிய முருங்கைக்காயை வெப்பமான காலநிலை நிலவும் மாதங்களில் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்கள் கவனத்திற்கு...

    1. நீரேற்றம்:

    முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது கோடை வெப்பத்தின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த தேர்வாக அமைகிறது. பொதுவாகவே அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்துவிடலாம். முருங்கைக்காய் உட்கொள்வது நீரிழப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

    2. ஊட்டச்சத்து:

    முருங்கைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியமானவை. நோய் எதிர்ப்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

    3. குளிர்ச்சித்தன்மை:

    முருங்கைக்காயில் இயற்கையான குளிர்ச்சித் தன்மை உள்ளது. வெப்பமான காலநிலையில் உடலின் உட்புற வெப்பநிலையை தணிப்பதற்கு உதவுகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிக வியர்வை, சோர்வு மற்றும் உடல் உஷ்ணம் போன்ற வெப்பம் தொடர்பான அசவுகரியங்களை தவிர்க்கலாம்.

     4. செரிமானம்:

    அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளைப் போக்க பாரம்பரிய மருத்துவத்தில் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உணவு சீராக செல்ல உதவும். அதன் மூலம் செரிமான செயல்பாடு விரைவாக நடைபெறுவதற்கு உதவும்.

    5. அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

    முருங்கைக்காயில் பிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள் போன்றவை உள்ளன. அவை வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. தொடர்ந்து முருங்கைக்காயை உட்கொள்வதன் மூலம் கீல்வாதம், ஒவ்வாமை போன்ற அழற்சி அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

    6. நோய் எதிர்ப்பு சக்தி:

    முருங்கைக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

    7. எடை மேலாண்மை:

    முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. ஆனால் நார்ச்சத்து மிகுந்திருக்கிறது. பசியை கட்டுப்படுத்தி அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். இதன் மூலம் உடல் எடை குறைவதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் உதவி செய்யும்.

    முருங்கைக்காயை குழம்பு வகைகளில் சேர்ப்பதோடு சூப் தயாரித்தும் பருகலாம். முருங்கைக்காய் சூப் வெப்பமான கோடை நாட்களில் உடலுக்கு ஊட்டமளிக்கும். முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். பழங்கள், தயிர், ஐஸ் ஆகியவற்றுடன் கலந்து பானமாகவும் ருசிக்கலாம்.

    • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
    • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

    சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

    மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

    சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

    மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

    எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

    தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

     சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

    சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

    • சாக்லேட் கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • டார்க் சாக்லெட் மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும்

    உலகம் எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்றாக சாக்லெட் விளங்குகிறது. இது கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லெட்டில் பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.

    ஏனெனில் டார்க் சாக்லெட்டை பொறுத்தவரை மற்ற சாக்லெட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.

    எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதேவேளையில் டார்க் சாக்லெட் சிலருக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிடக்கூடாது.

    டார்க் சாக்லெட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

    நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் இந்த சாக்லெட்டுகளை குறைவாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகிவிட்டு அதன் பிறகு சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது.

    ×