search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Abduction"

    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார்.

    சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

    போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

    இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் பிச்சைகாரர் ஒருவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.#ChildAbduction
    ஐதராபாத்:

    குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் தமிழ்நாட்டில் சில அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்டனர். இங்கு அமைதி நிலவிய நிலையில் தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குழந்தை கடத்தல் பீதி பரவிவருகிறது.

    இதனால் அங்கு சந்தேகப்படும் நிலையில் நடமாடும் நபர்களை பொதுமக்களே பிடித்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இதுபோன்று கடந்த 13 நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் அடித்து கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் சந்திரய்யா (52) மெகபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    இவர் மேலும் 3 பிச்சைக்காரர்கள் சுவானி, நரசிம்மா மற்றும் ரவி ஆகியோருடன் ஐதராபாத்தின் மையபகுதியான சந்திராங்குட்டா பகுதியில் நள்ளிரவில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் அரவாணி உடையில் இருந்தனர்.

    இதற்கிடையே, மெகபூப் நகர் பகுதியில் இது போன்று உடை அணிந்திருந்த 2பேர் ரோட்டோரோம் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்தனர். அப்போது ‌ஷகிலா பாத் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈருபட்டதாக ‘வாட்ஸ் அப்’பில் வந்த தகவல் அடிப்படையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இத்தகவல் ‘வாட்ஸ் அப்’பில் பரவியதை தொடர்ந்து சந்திராயங்குட்டா பழைய நகர் பகுதியில் தங்கியிருந்த சந்திரய்யா உள்ளிட்ட 4 பேரை கும்பலாக பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அடித்து உதைத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிச்சைக்காரர்களை தாக்கிய கும்பலை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். 2 போலீஸ் வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

    இதற்கிடையே அக்கும்பல் அங்கு கட்டுமான பணிக்காக வைத்திருந்த கான்கிரீட் பலகைகளால் பிச்சைக்காரர்கள் மீது தாக்கினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரய்யா மற்றும் சுவாமி ஆகியோரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரய்யா பரிதாபமாக இறந்தார். சுவாமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 25 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChildAbduction
    போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களை தாக்கிய 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தனியாக சுற்றித்திரியும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை குழந்தை கடத்த வந்திருப்பதாக கூறி பொதுமக்கள் பிடித்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    கோவையை சேர்ந்த 17 வயது பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்த பெண் திடீரென மாயமானார். அதே நாளில் அவருடன் வேலைபார்த்த வாலிபர் ஒருவரையும் காணவில்லை. அந்த வாலிபர் வாணியம்பாடி அருகே தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்.

    எனவே அந்த பெண்ணை இந்த வாலிபர்தான் கடத்தியிருக்க வேண்டும் என கருதி கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் அவரை தேடி வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வாணியம்பாடி பகுதிக்கு வந்தனர். அந்த வேனில் பெண்ணின் உறவினர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத்குமார் (வயது 24), ஓசூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25), சாந்தம்மா (38), மீரா (21), அஞ்சலி (18) உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களில் மீராவும், அஞ்சலியும் அவர்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

    வேனில் இருந்தவாறே மாயமான பெண் நடமாடுகிறாளா? என தேடியவாறு இருந்தனர். அவர்கள் கைக்குழந்தைகளுடன் இருந்ததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தைகளை வேறு எங்காவது இருந்து வேனில் கடத்திக்கொண்டு வந்திருக்கலாம் என கருதி சுற்றி வளைத்தனர். பின்னர் வேனுக்குள் புகுந்த அவர்கள் வினோத்குமார் உள்ளிட்ட 5 பேரையும் சரமாரியாக தாக்கி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்துவதாக கூறி பொதுமக்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள காமராஜபுரம், பட்டாபேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் நீங்கள் விசாரணை நடத்தும் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களை எங்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும் என கூறினர்.

    அப்போது போலீசார் ‘‘அவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா? என விசாரித்து வருகிறோம்’’ என கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அனைவரையும் எங்களிடம் காட்டினால்தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் 5 பேரையும் கொண்டு வந்து காட்டினர். அதன்பின்னரும் கிராம மக்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து அவர்களிடம் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களை தாக்கிய 100 பேர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×