search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slaughter"

    • மாணவர் மண் எண்ணையை மாணவி மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து மாணவியின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார்.
    • தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), விவசாயி. இவரது மகள் ரோஜா (வயது 19).

    ரோஜா நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஆத்தூர் தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் நீலகிருஷ்ணன். இவரது மகன் சாமிதுரை (22), இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    கூடமலையில் உள்ள உறவினர் சின்னதுரை என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சாமிதுரை சென்று வந்தார். அப்போது ரோஜாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவிடம் காதலை தெரிவித்தார். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.

    இதனால் சாமிதுரை ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து தனது கூட்டாளிகள் 2 பேருடன் கடந்த 6-ந் தேதி ரோஜா வீட்டிற்கு சென்றார். பின்னர் ரோஜாவிடம் தன்னை காதலிக்குமாறு சாமிதுரை வற்புறுத்தினார்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சாமிதுரை மண் எண்ணையை ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ரோஜாவின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற கெங்கவல்லி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படை அமைத்து சாமிதுரையை தேடி வந்தனர். மேலும் ரோஜாவின் உறவினர்களும், போலீசாருடன் இணைந்து கடந்த 3 நாட்களாக கூடமலை பகுதியில் முகாமிட்டு அவரை தேடினர்.

    இந்த நிலையில் கூடமலை மின் நிலையம் அருகில் சோலை மலையில் சாமிதுரை பதுங்கி இருப்பதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், போலீசார், ரோஜாவின் உறவினர்கள் இன்று காலை அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது சோலைமலையில் இருந்து சாமிதுரை கீழே இறங்கி அங்குள்ள அழகுவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள சோளக்காட்டிற்குள் பதுங்கி இருந்தார். அவரை போலீசாரும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அப்போது ரோஜாவின் உறவினர்கள் சிலர் அவரை தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாமிதுரையை கைது செய்து பத்திரமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து சாமிதுரையை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.

    தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் துப்புரவு தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.

    இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    நம்பியூர் அருகே அரசு ஆஸ்பத்திரி மருத்தாளுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் ஏதிரே உள்ள ரோட்டில் செல்லப்பன் மற்றும் அவரது 7 வயது குழந்தை காரில் சென்றனர்.

    அப்போது எதிர்பாரத விதமாக கார் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றனர்.

    அப்போது அங்கு மருந்தாளுனராக பணிபுரிபவர் தீனதயாளன் (வயது 27). மருத்துவர் இல்லை மீட்டிங் சம்மந்தமாக நம்பியூர் சென்று உள்ளார் என கூறினார். நான் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அனுப்பி வைக்கின்றேன் என கூறினார்.

    இதற்கு செல்லப்பன் தீனதயாளனை தாகத வார்த்தையால் பேசினாராம். மேலும் கையால் தாக்கி, கல்லை வீசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

    மேலும் அவர் கல் வீசியதில் மருத்துவமனையில் சுவரில் மாட்டி இருந்த கண்ணாடி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல் விடுத்த செல்லப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீனதயாளன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமங்கலத்தில் மணல் எடுப்பதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பகுதியில் சிலர் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வந்தனர். இதனை ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 49) உள்பட 10 பேர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மணல் எடுத்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்தபோது அலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அம்சு பாண்டி (31), தனுஷ்கோடி மகன் ராஜேஷ் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் மணல் எடுப்பதை ஏன் தடுக்கிறாய்? என கேட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்சு பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    தவளக்குப்பத்தில் மதுக்கடை தகராறில் ஏற்பட்ட மீனவர் கொலையில் வாலிபர் சிக்கினார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் முத்தாள்ராயன் (வயது 46). மீனவர்.

    நேற்று மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த தரணி என்பவருடன் தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அங்கு மது குடித்து விட்டு அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை சரமாரியாக தாக்கினார். இதில் முத்தாள்ராயன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விரைந்து வந்து முத்தாள்ராயனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்தாள்ராயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து தவளக்குப்பம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்ற வாலிபரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்பவம் நடந்த மதுகடைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொலையாளியை கைது செய்ய கோரி புதுவை- கடலூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். கொலையாளியை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.

    இதனை ஏற்று முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்றது அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் மணி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்தாள்ராயனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மணி பரபரப்பு தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-

    மதுக்கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் எனது உறவினர் ஆவார். அந்த கடையில் முத்தாள்ராயன் தின்பண்டம் வாங்கி விட்டு 2 ரூபாய் கடன் வைத்திருந்தார்.

    நேற்று மாலை முத்தாள்ராயனிடம் எனது உறவினர் அந்த பணத்தை கேட்டபோது முத்தாள்ராயனும், அவருடன் வந்த தரணியும் எனது உறவினரிடம் தகராறு செய்தனர்.

    இதனை நான் தட்டிக்கேட்டபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். நான் அவர்களிடம் இருந்து பயந்து ஓடிய போது என்னை விரட்டி விட்டு கல்லால் தாக்கினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை திருப்பி தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் முத்தாள்ராயன் மயங்கி சாய்ந்ததும் நான் தப்பி ஒடிவிட்டேன். ஆனால், கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை.

    இவ்வாறு மணி போலீசாரிடம் தெரிவித்தார்.

    குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.

    இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

    பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கல்லூரி மாணவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.

    காட்பாடி:

    காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).

    கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.

    கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரியலூர் அருகே நண்பனை கொன்று நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோவிந்தசாமி (வயது 29). இவர் கடந்த 24-ந்தேதி இரவு ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில், ராங்கியம் கிராமப்பகுதியில் தலையில் காயத்துடன் சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.

    இந்தநிலையில் கோவிந்த சாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த வேணு கோபால் மகன் வேல்முருகன் (26) மற்றும் சிலர் கோவிந்த சாமியை கொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவிந்தசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    கோவிந்தசாமியும், வேல் முருகனும் நண்பர்கள். சம்பவத்தன்று மது வாங்கி தருமாறு கோவிந்தசாமி, வேல் முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேல் முருகன் இரும்பு கம்பியால் கோவிந்தசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.

    இதில் அவர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம், வேல்முருகன், கோவிந்தசாமியின் முகவரியை கூறியதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துள்ளார். போலீசார் விசாரணையில் வேல்முருகன் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது48). தொழிலாளி.

    இவரது தம்பி வீரமுத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வரங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வீரமுத்துவிடம், முன்விரோதம் காரணமாக செல்வரங்கம், அவரது மகன்கள் செல்வமணி, ஞானகுரு மற்றும் உறவினர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம், ராஜேஷ் ஆகிய 6 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்கள் வீரமுத்துவை தாக்கினர். இதை பார்த்த கொளஞ்சி ஏன் என் தம்பி வீரமுத்துவை தாக்குகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் உள்பட 6 பேரும் சேர்ந்து கொளஞ்சியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

    இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் செல்வரங்கம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மற்ற 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வரங்கம், செல்வமணி, ஞானகுரு, சுரேஷ் ஆகிய 4 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் கல்யாணசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஏரல் அருகே இரட்டைக்கொலை தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 24-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரை சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வினோத் தன்னுடைய நண்பரான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ் கோடியின் (30) மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனை அறிந்த தனுஷ்கோடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வினோத்தை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவான தனுஷ்கோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவரது நெருங்கிய நண்பரான குரும்பூரை அடுத்த கள்ளம் பாறை ராமச்சந்திரன்(22) என்பவரும் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று வினோத் உடல் கிடந்த இடம் அருகே ஆற்றில் அமலைச்செடிகளுக்கு நடுவே மீட்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவரையும் தனுஷ் கோடி கும்பலே கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்த‌து. இதையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வினோத், ராமச்சந்திரன் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி தன்னுடைய நண்பர்களான வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு வரவழைத்து, கூலிப்படையை ஏவி, அவர்களை தீர்த்து கட்டி இருக்கலாம். பின்னர் கூலிப்படையினர் அவர்களது உடல்களை தனித்தனியாக வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தனுஷ்கோடி, வினோத், ராமச்சந்திரன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் இரவில் அடிக்கடி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக் கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடியை கைது செய்த பின்னரே இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இதற்கிடையே, இரட்டைக்கொலை தொடர்பாக மேலமங்களகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து(26), வெள்ளூரை சேர்ந்த முத்துமுருகன்(26) ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் தனுஷ்கோடியின் நண்பர்கள் ஆவர். கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு காரணம் என்ன? இரட்டைக் கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, 3 மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கியதால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (வயது 45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38), ஏற்கனவே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அவர் பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார். பின்னர் பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ரவியின் மனைவி மாரி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ×