search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi abuse case"

    • கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று 9 பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது.

    கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது சேலம் ஜெயிலில் உள்ள இவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
    • விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(28), ஹெரன்பால்(29), பாபு(27), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்கள் மீது 2019 மே 21-ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.

    அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.

    பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
    • தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

    சென்னை:

    கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனித்தனி குழுவாக முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 14-ந் தேதியன்று சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அவரது வீட்டின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். சபரி ராஜன் வீட்டில் சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    அவர்கள் சபரிராஜன் வீட்டிற்குள் சென்றதும் காம்பவுண்டு கதவு மற்றும் வீட்டின் முன் பக்க கதவை பூட்டினார்கள். பின்னர் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர்.

    சபரிராஜன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்கள். திருநாவுக்கரசுக்கும், சபரி ராஜனுக்கும் எந்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. என்ன தொழில் செய்து வந்தனர்.

    சபரிராஜனுக்கு வேறு யாருடனும் பழக்கம் உள்ளதா? அவர்கள் யார்? யார்? என்றும் விசாரணை நடத்தினார்கள். 30 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையின் போது சபரிராஜன் வீட்டில் இருந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஏற்கனவே சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது கட்டமாக சோதனை நடத்தி சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற்று உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சபரி ராஜனை தொடர்ந்து சதிஷ், மணிவண்ணன், வசந்த குமார் ஆகியோரது வீட்டிற்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவதுடன் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று சென்று உள்ளனர்.

    அந்த பட்டியலில் நோயாளிகளின் பெயர், முகவரி, சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா? தற்கொலை செய்து உள்ளார்களா? அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா ? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு செல்போன்கள் வாங்கிய கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் பெற்றவர்களுக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .

    இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

    பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.

    இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PollachiAbuseCase #HighCourt #TNGovt
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வுப்பெற்ற நீதிபதி மேற்பார்வையிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பெண் வக்கீல் மீனாட்சி உள்பட 10 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

    மேலும், அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது.



    தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் மற்றவர் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். பெண் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பொள்ளாச்சி வழக்கை சரிவர விசாரிக்காத போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். பாலியல் கொடுமை சம்பவத்தில் நடந்தவைகளை உண்மை கண்டறியும் குழு அமைத்து அறிக்கை பெறவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

    இதையடுத்து, இந்த வழக்குகளுக்கு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி,பி., உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #PollachiAbuseCase #HighCourt #TNGovt
    பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட புகாரில் தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து 5 பேர் மீதும் கூடுதலாக இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

    இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் என 10-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் தெரிவித்தனர். ஆனால் எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி, புகார் பெறுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பாலியல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் புகார் செய்யலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு தொலைபேசி எண் அறிவித்திருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் புகார் செய்த நிலையில் இதுவரை 140 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலரை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

    கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கடந்த மாதம் ஒரு ஆடியோவும் வெளியாகி இருந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் பொள்ளாச்சி கும்பலில் 8 பேர் வரை உள்ளதாகவும், இந்த கும்பல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாவும், உடலை திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் கூறி இருந்தார்.


    இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார்? என்பது குறித்து தகவல் கேட்டு யூ-டியூப், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பினர். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    இவ்வழக்கில் குற்ற பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கூடுதலாக மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து கைது செய்தனர். இது தொடர்பான அறிக்கையை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்

    பாலியல் வழக்கு தொடர்பாக மணிவண்ணனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவின் அடிப்படையில் மணிவண்ணனிடம் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வழக்கில் வேறு யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் திருநாவுக்கரசு ஆந்திராவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தார். இதேபோல மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவரும் தலைமறைவானார்.

    இவர்கள் தலைமறைவான காலகட்டத்தில் சமூக வலை தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. எனவே வீடியோக்கள் வெளியான சம்பவத்தில் மணிவண்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மணிவண்ணன் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

    அதன்பிறகு இவ்வழக்கில் அவரது நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

    மணிவண்ணன் மீது அடிதடி வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவரது செல்போன் தொடர்பு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் விசாரணை நடத்தியதில் இவருக்கும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இதையடுத்து பாலியல் வழக்கிலும் மணிவண்ணனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PollachiCase #CBCID



    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது குற்றவாளியாக மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



    இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மணிவண்ணனை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார். இதையடுத்து மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்கில் கைதான பைனாஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் பழக்கம் இருந்தது என்று விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பெண்ணின் சகோதரரை தாக்கியதால் கைதான மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை போலீசார் இணைத்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5வது நபராக மணிவண்ணனை கைது செய்தனர்.

    இதையடுத்து, மணிவண்ணனை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #PollachiCase #CBCID

    ×