search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower Exhibition"

    • நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னையில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200- க்கும் அதிக வகையிலான மலர்களால் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மலர் கண்காட்சிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கக்கூடிய வகையில் மலர் அலங்காரங்கள், இரண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அலங்காரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
    • இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.

    தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.

    துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

    கொடைக்கானலில் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கோடைவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனைதொடர்ந்து இன்று கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளுகுளு சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கோடைவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனைதொடர்ந்து இன்று கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். கோடைவிழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், புவிசார்குறியீடு பெற்ற வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    கோடைவிழாவை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோடைவிழாவை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரையண்ட் பூங்காவில் இன்று இசைநாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டது. நாளை காலையில் கயிறு இழுத்தல் போட்டியும், மாலையில் பானை உடைக்கும் போட்டியும் நடக்கிறது. 26-ம் தேதி காலை 10 மணிக்கு மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, மதியம் 2 மணிக்கு சாக்கு ஓட்டம் ஆகியவையும், 27-ந்தேதி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இருபாலருக்குமான வாலிபால் போட்டி, 28-ந்தேதி காலை 8 மணிக்கு ஹாக்கி போட்டி, 29-ந் தேதி கபடிபோட்டி, 30 மற்றும் 31-ந்தேதி கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

    ஜூன் 1-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் இருபாலருக்குமான மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர படகு அலங்கார போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளது. 
    கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வந்தாலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (24-ந்தேதி) கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி கோடை விழா நடைபெறுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    அதிக அளவு சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பேரிகார்டு வைத்து கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

    மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    நாளை கோடை விழா மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பிரையண்ட் பூங்காவில் டைனோசர் உருவம், திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவியல் படைப்புகள் மலர்களால் உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாளை காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் விழா தொடங்க உள்ளது. விழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, மதிவேந்தன், வேலுச்சாமி எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை தொடங்கும் கோடை விழா 10 நாட்கள் ஜூன் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6 நாட்கள் தோட்டகலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவும் நடைபெற உள்ளது.
    ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 1 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.

    நேற்று சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர். இன்னிசை கச்சேரியின்போது, பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மலர்களின் முன் நின்று போட்டோ எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர்.

    17-ந்தேதி 26 ஆயிரம் பேர்களும், 18-ந்தேதி 35 ஆயிரம் பேர் வருகை தந்தனர். நேற்று காலை முதலே, கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில், புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் கூடியிருந்தனர்.. நேற்று ஒருநாள் மட்டும் 44 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 43-வது கோடை விழா - மலர் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    ஏற்காடு கோடை விழா மற்றும் ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத் துறை மூலம் 2½ லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏற்காடு கலையரங்கில் நடந்த விழாவில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்களுக்கு படகு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும், கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் இன்று காலை முதலே அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வாராயன் கோவில், பக்கோடா பயிண்ட், மான் பூங்கா உள்பட பல பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    ஏற்காட்டியில் லேசான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்தாண்டு கோடை விழா முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ரோகிணி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #TNCM #EdappadiPalanisamy
    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி கூடலூரில் நாளை வாசனை திரவிய கண்காட்சி தொடங்குகிறது. 12-ந் தேதி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ந் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதிவரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறை மற்றும் மற்ற துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். இதில் சால்வியா, மேரிகோல்டு, வின்கா, தினியா, பிரான்சி, மெடானியா, டேலியா, ஜெரியா, காஸ்மாஸ், ஜெர்பேரா, ரோஜா போன்ற ரக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர மலர் கண்காட்சிக்காக ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விதவிதமான ரோஜா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் (12-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதையட்டி ஏற்காடு செல்லும் மலை சாலை தூய்மை படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடு போடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலை பாதைகளில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் கொண்டைஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணியசிவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணாப்பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

    ஏற்காட்டிற்கு முதல்வர் வருவதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர இருப்பதாலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் 50 சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


    ×