search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E Pass"

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன.
    • இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயிலில் இருந்து தப்பிக்க இதமாக சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சில தினங்களில் நீலகிரியில் கோடைவிழாவும் தொடங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதையும் காண முடியும். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கொரோனா காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்ததை போன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான நடைமுறைகளை கொண்டு வருவது என வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விரைவில் இ-பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதேபோல் இ-பாஸ் பெறுவதற்காக என்று தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டும், அதுவும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    ஊட்டிக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையானது உள்ளூர் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். கோடை சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இங்குள்ள அனைத்து சாலைகளிலுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் பொதுமக்களாகிய நாங்கள் அவரச தேவைக்கு எங்காவது புறப்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் அதிகளவில் வருவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையானது இங்குள்ள இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தற்போது ஐகோர்ட்டு அறிவித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் நீலகிரிக்குள் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது தெரியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உள்ளூர் பொதுமக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலாவை நம்பிதான் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம் இருக்கும். இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை உள்ளதாலும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரத்தில் அரசு, வியாபாரிகள் கருத்தையும் நலனில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    • ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 7-ந்தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்.
    • உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது.

    ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அங்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள்.

    இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.

    ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்
    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×