search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas festival"

    • தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
    • குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.

    நள்ளிரவு 12 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தப்பட்டது. திருப்பூரில் புனித கேத்தரீன் சர்ச், புனித பவுல், ஏ.ஜி., ஆலயம், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம்,பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.

    மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவிலில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடந்தது. இதேபோல பிற தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கிறிஸ்தவா்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. தொடா்ந்து குழந்தை இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் குழந்தை இயேசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் கூட்டுத் திருப்பலி , சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடந்தது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். 

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
    • திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது.
    • கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    நெல்லை:

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.

    இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதன்படி நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை மற்றும் மாலை சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது. பாளை தெற்கு பஜார் சவேரியார் ஆலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குறித்த குடில்கள் மற்றும் சொரூபங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் ஜி.யு. போப் சபை மன்றத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது. இதில் சாயர்புரம் ஜி.யு.போப் சபை மன்றத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் ஆலய குழுக்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளை சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல் ராஜா துரை சிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார் .

    குடில் போட்டியில் முதலிடம் பிடித்த இடையர் காடு குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் நர்சரி பள்ளிக்கு ரூ.7,500 ரொக்கப் பரிசும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் ஜி.யு போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், மற்றும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கபட்டது.

    அதேபோல் கிறிஸ்தவ பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் சபை பாடல் குழுவினர் அணிக்கு ரூ.7,500 ரொக்கம், 3-வது இடம் பிடித்த சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் பணமும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு லே செயலர் நீகர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன் ராஜ் அருமை நாயகம்,போப் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் பிரேம் குமார் ராஜா சிங்,போப் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில் ராஜ், ரட்சன்யபுரம் சேகர தலைவர் பாக்கியராஜ், சாயர்புரம் சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங்,விழா குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவி சந்தர், அலெக்சாண்டர், அபிஷேகம், ராஜதுரை ஏசுவடியான்,ஆன்ட்ரு அதிசயராஜ், ஜான்சன் பொன்சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவி கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
    • 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம்.

    அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடைந்தனர்.

    கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து கூறி உள்ளார். #Christmas #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

    அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார். கிறிஸ்துவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், தொடர்ந்து அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இதுவரை 3,236 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.



    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு ஏற்கனவே ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. #WinterSession #ChristmasHoliday
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை கூட்டத் தொடர் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் எம்பிக்கள் பண்டிகை முடிந்த மறுநாளே டெல்லி திரும்ப வேண்டிய நிலை இருந்தது. எனவே, தொடர்ச்சியாக உறுப்பினர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 26 ஆகிய நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி, அவைத்தலைவருக்கு பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    இதனை ஏற்ற அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காலத்தை நீட்டித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 (திங்கட்கிழமை), கிறிஸ்துமசுக்கு மறுநாளான டிசம்பர் 26 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களும் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்தார். 

    இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. #WinterSession #ChristmasHoliday
    ×