என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.
காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.
எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
- அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.
1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.
மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 175 குவித்து அவுட்டானார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிகே அத்னாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாலோ ஆன் ஆனதால் 2 ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்யவுள்ளது.
- வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2ஆவது மகன் அஜித் திருமணம் செய்துகொண்டார். அஜித் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். துக்க நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர்.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்
- பூஜா ஷகுன் பாண்டே வீட்டில்முகமது பைசல் மற்றும் ஆசிப் வேலை பார்த்து வந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியிரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.
- நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்:
கரூரில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3, 4-ம் தேதிகளில் த.வெ.க. உள்ளூர் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதன்பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மூலம், த.வெ.க. தலைவர் விஜய் காணொலிக் காட்சி (வீடியோ கால்) மூலம் பேசி ஆறுதல் கூறினார். அப்போது, விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் உறுதியளித்தார்.
இந்த நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அனுமதி கேட்டு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, கரூர் எஸ்.பி.யை சந்தித்து தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு மனு அளித்து அனுமதி பெறலாம் என டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, த.வெ.க. கொள்கை பரப்புச்செயலாளர் அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று கரூர் எஸ்.பி. ஜோஷ் தங்கையாவை நேரில் சந்தித்து, வருகிற 17-ந்தேதி விஜய் கரூர் வர அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர்.
அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர்-ஈரோடு சாலையில் உள்ள 'கேஆர்வி மெரிடியன் ஹோட்டலுக்கு' வரவழைத்து சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்துக்கு மிக அருகில் அந்த ஹோட்டல் உள்ளதால், அங்கு நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும், வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி அட்லஸ் அரங்கம், ஆட்டம் பரப்பு ஜெயராம் கல்லூரி கலையரங்கம் ஆகிய 2 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் அட்லஸ் அரங்கத்தை நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அரங்கம் வாகன நிறுத்தங்களுடன் விசாலமாக உள்ளதால் இதை நிர்வாகிகள் தேந்தெடுத்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோர் தவிர வேறு யாரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கட்சியினர் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் த.வெ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
- நவம்பர் முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
- அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.
சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு 145 சதவீத வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 110 சதவீத வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகள் இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டது.
பின்னர் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்ததால் சீனா மீதான வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார்.
சீனா தனது அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுபாடுகளை விதித்ததையடுத்து அதிருப்தி அடைந்த டிரம்ப், மீண்டும் சீனா மீது கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறியதாவது:-
அதிக வரிகள் விதிப்பு என்ற அச்சுறுத்தல்கள் சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. வர்த்தகப் போரில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. நாங்கள் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் இரட்டை தரநிலைகளுக்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
கடந்த மாதம் முதல் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது தவறான நடைமுறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அமெரிக்கா தவறான வழியில் செல்ல வலியுறுத்தினால், சீனா நிச்சயமாக அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்து உள்ளது.
- இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது
- 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் காரணமாக இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசும்போதும், தனது எக்ஸ் பதிவிலும் அமித் ஷா இந்த குற்றச்சாட்டைமுன்வைத்தார்.
அதில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டும். நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது, இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஊடுருவல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக அமித் ஷா கூறினார்.
ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அமித் ஷா கூறினார்.
இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அக்டோபர் 10 ஆம் தேதி கூட்டுறவு அமைச்சர், இந்து-முஸ்லிம் தீயை மூட்டி, வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களை பிளவுபடுத்த முயற்சித்திருக்கிறார்.
இந்தியாவில் பரவலாக முஸ்லிம் ஊடுருவல் இருப்பதாக மறைமுகமாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழ்நிலையில் ஒரு தர்க்கரீதியான கேள்வி என்னவென்றால், அவர் கூறுவது போல், முஸ்லிம் மக்கள் தொகை ஊடுருவல் காரணமாக உயர்ந்துள்ளது என்றால், கடந்த 11 ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் சரியாக என்ன செய்து கொண்டிருந்தார்?
அவர் தான் உள்துறை அமைச்சரும் கூட என்பதை அவர் உணர்த்தாரா?. மேலும் அவர் முஸ்லிம்களை நோக்கி குறிவைத்த பூமராங் திரும்பி அவரையே வந்தடைந்தது. எனவே, அவரது பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.
ஆனால் அது உண்மையை நீக்கவில்லை. 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், நாங்கள் ஒருபோதும் பெருமை பேசவில்லை, பாஜக ஒருபோதும் வாயை மூடிக்கொள்ளாது. காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தத்தை உண்டாக்கும்" என்று விமர்சித்துள்ளார்.
- ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலை மற்றும் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் தெரு அருகே பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.
இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.
இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.
இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...
நடிகர்கள்
விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.
சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
இயக்கம்
பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.
இசை
என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.
ஒளிப்பதிவு
அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.
- திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
- சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும்.
மேஷம்
நன்மைகள் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார். வெற்றிக் கனியை ருசிப்பீர்கள். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். தீபாவளி போனஸ் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தந்தையின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வருமானத்தடை விலகும்.
சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். தம்பதிகளிடம் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் அதிகமாகும்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். திருமணத் தடை அகலும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். அரசு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. குழந்தை பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும். குல தெய்வ வழிபாடு பலன் தரும்.
ரிஷபம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு பிறந்த வீட்டு பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கிடைக்கும். ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வையின் சனியின் மூன்றாம் பார்வையும் பதிகிறது. மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறியும் உண்டாகும். கை, கால் வலி மற்றும் உடல் உபாதைக்கு வைத்தியம் செய்வீர்கள். அண்ணன், தம்பிகளை அனுசரித்து செல்லுதல் நலம். சிலருக்கு வேற்று மத நம்பிக்கை அதிகரிக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும்.
தீபாவளிக்கு வீட்டு தேவைக்கான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தீபாவளி போட்டி வியாபாரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பேசி சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
மிதுனம்
நன்மைகள் மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி கூடும்.
பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.
தீபாவளிக்கு பரிசுகள், பட்டாசுகள், இனிப்புகள் கிடைக்கும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயாரின் ஆயுள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மீனாட்சி அம்மன் வழிபாட்டால் சிறப்பான பலன்கள் நடக்கும்.
கடகம்
கருமமே கண்ணாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் குரு பகவான் வார இறுதி நாளில் இரவில் உச்சம் பெற போகிறார். ஜென்ம குரு என்று பயப்படத் தேவையில்லை. பிற கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சிறப்பான பலன்கள் தேடி வரும். பாக்கியாதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமையால் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.
புதிய தொழில் வாய்ப்புகளால் வருவாய் பெருகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும். தீபாவளி வியாபாரம் அமோகமாக நடக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் நீங்கும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் பெருகும்.
சிம்மம்
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். அஷ்டமச் சனி மற்றும் ராகு கேது தாக்கத்துடன் குரு பகவானும் அதி சாரமாக விரய ஸ்தானத்திற்கு செல்ல போகிறார். வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும்.
வேலையில் எதிர்பார்த்த மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும். கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். சிலருக்கு பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். சில சங்கடங்கள் நிலவினாலும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். கோட்ச்சார கிரகங்களால் நன்மை கூடும்.
கன்னி
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். திட்டுமிட்டு செயல்படுவீர்கள். சொல்வாக்கு உயரும். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும்.
நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்திர பாக்கியம் கைகூடும். சுப செய்திகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான சூழல் நிலவும். அடமானச் சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும்.
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் சீராகும். மாமனாரால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். உடலும் உள்ளமும் மகிழும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். தீபாவளிக்கு தான தர்மங்கள் வழங்க திட்டமிடுவீர்கள். தினமும் குலதெய்வத்தை வழிபடவும்.
துலாம்
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளார். அதிர்ஷ்ட சொத்து, உழைக்காத வருமானம் உண்டு. வழக்குகளில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய மாட்டீர்கள். மங்களகரமான சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள்.
குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய கருத்து வேற்றுமை மறையும். சொத்துக்கள் வாங்க விற்க உகந்த நேரம். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.12.10.2025 அதிகாலை 2.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட நெருக்கடிகள் விலகும்.
விருச்சிகம்
நல்ல செயல்கள் நடைபெறும் வாரம். இந்த வார இறுதிவரை தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் முன்னேற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமைகள் போற்றப்படும். சிலர் தீபாவளி முடிந்தவுடன் பார்க்கும் வேலையை மாற்றலாம். வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
வெளிநாடு செல்வதில் நிலவிய விசா பிரச்சினை சீராகும். ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் திருமண முயற்சிக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் சீராகும். 12.10.2025 அதிகாலை 2.25 மணி முதல் 14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
தனுசு
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானம் செல்ல போகிறார். கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
குடும்பச் செலவுகள் இந்த வாரம் அதிகரிக்கும். தீபாவளி பட்ஜெட் கூடும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில், வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகத்தில் சொத்து வாங்கலாம். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.
14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி முதல் 16.10.2025 பகல் 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு கூடும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. நவகிரக குரு பகவான் வழிபடுவதால் ஏற்றமான பலன்கள் நடக்கும்.
மகரம்
முயற்சிகள் வெற்றி தரும் வாரம். அதிசார குருவால் ராசிக்கு குருப் பார்வை கிடைக்கப்போகிறது. மகர ராசிக்கு மிக அற்புதமான நல்ல மாற்றங்கள் தெரியும். எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய முயற்சிகான பலன்கள் உடனே தெரியும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் விலகும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் படியாக வருமானம் கூடும். குடும்ப பிரச்சனைகள் விலகி நிம்மதி கூடும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.
கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்து சேரும். பதவி உயர்வு, உத்தியோக உயர்வு தானாக கிட்டும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உபரி லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வாழ்க்கை துணையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சீராகும். இடம், பூமி, வாங்கும் முயற்சிகள் கைகூடும். 16.10.2025 பகல் 12.42 மணி முதல் 18.10.2025 இரவு 10.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக்குழப்பம் உருவாகும். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.
கும்பம்
நெருக்கடிகள் விலகும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.
வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். குல தெய்வ வழிபாடு பலன் தரும். முக்கிய பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சின்னத்திரை, சினிமா கலைஞர்களின் புகழ், அந்தஸ்து கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டு தீபாவளி சீதனம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். உடல் ஆரோக்கியமடையும். காவல் தெய்வங்களை வழிபடவும்.
மீனம்
கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள சனிபகவானை பார்க்கப் போகிறார். மீன ராசிக்கு பலவிதமான கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் பணக்கஷ்டம் ஏற்படாது. கடன் பாதிப்பு இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிக லாபத்தை தரப்போகிறது. ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் நிம்மதி தரும். பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.
பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணிசமான பாலிசி முதிர்வு, தொகை, பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் முதிர்வு தொகை, ஏலச்சீட்டு பணம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உக்கிர தெய்வங்களை வழிபடுவதால் உயர்வுகள் கூடும்.
- மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.
ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.
அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு வங்க அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, "மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்வரை, மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்வார்கள். 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தாவின் திரிணாமுல் கட்சி முக்கிய தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான சசி பஞ்சா, "இங்கே அரசியலுக்கு இடமுண்டா? ஒடிசாவில் தீக்குளித்த பெண்களுக்கு கிடைத்த நியாயம் என்ன? மணிப்பூர் எரிந்தபோது அல்லது டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக தலைவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தங்கப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த போராட்டம் நடத்தியபோது இந்தக் குரல்கள் எங்கே இருந்தன? வங்காளத்தில் பாஜகவின் கடையை மூடச் சொல்லுங்கள். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ மாணவி கொலை மற்றும் தற்போதைய விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






