என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?.
- அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைப் பாதுகாக்க விரக்தியை வெளிப்படுத்தாமல், இன்னும் 18 நாட்கள் மட்டுமே காத்திருந்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.
நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது வரிக் கொள்கையை ரத்து செய்த பிறகு, ஜனாதிபதி டிரம்ப் (i) மோடி தனது சிறந்த நண்பர் (ii) இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும் (iii) இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை (ஆபரேசன் சிந்தூர்) நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதாக மிரட்டி மே 10, 2025 அன்று அவர் தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை நிறுத்தினேன் என அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?. அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது. மோடி இவ்வளவு விரக்தியடைந்து, வெள்ளை மாளிகையில் உள்ள தனது நல்ல நண்பரை அணுகி ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது எது?. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் இந்தியா சோதனைக்குள்ளாகியுள்ளது
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
- ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.
- 11-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வருபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.09 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், கோவில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருணாசலம், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்தி நாதன், முன்னாள் செயலாளர் சந்தணராஜ், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
5-ம் திருவிழாவான 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருவிழாவான 27-ந் தேதி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை நடக்கிறது.
காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற (மார்ச்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.
11-ம் திருவிழாவான 3-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
- அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சந்திரபூர்:
மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). இவர் மதுபோதைக்கு அடிமையானவர்.
இதன் காரணமாக அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஜெகதீஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இரவு ஜெகதீஷ் மதுபோதையில் வீடு திரும்பினார். அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் தனது தாய் என்றும் பாராமல் கொடூரமாக கையால் அடித்து தாக்கினார். இதில் சுமித்ரா பெட்குலே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஜெகதீஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்து, தனது தாயைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அவர் போதையில் இருந்ததால் முதலில் அவரை நம்பாத கிராம மக்கள் பின்னர் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைதொடர்ந்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். சுமித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கம் விலைதங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக உயந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440-க்கும், கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360
19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-02-2026- ஒரு கிராம் ரூ.270
19-02-2026- ஒரு கிராம் ரூ.270
18-02-2026- ஒரு கிராம் ரூ.260
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார்.
- இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் லெக்ராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரபரப்பான ரெயில்வே சாலை மற்றும் ஹனுமன் கோவில் ஆகிய இடங்களில் பிச்சை எடுத்து வந்தார்.
அழுக்கான கிழிந்த உடைகள், தளர்வான முகம் மற்றும் பழைய 3 சக்கர மிதிவண்டியில் சென்று பிச்சை எடுப்பது வழக்கம். இவருக்கு கடந்த 9-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு தொண்டு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் லக்ராஜை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார். இதையடுத்து தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்பாலா போலீசார் லெக்ராஜின் 3 சக்கர சைக்கிளை சோதனை செய்தனர். சைக்கிளின் பின்புறம் இருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் அந்த பெட்டியில் இருந்த இந்தியன் வங்கி கணக்கு அட்டையை சோதனை செய்தபோது அதில் ரூ.3.32 லட்சம் இருந்தது. இதனை கண்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
- பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை.
- நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேப்டன் உடனான சண்டை மற்றும் பாபர் அசாமின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் மைக் ஹெசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சல்மான் அகா ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலை கீழே வீசுவது போன்ற காட்சிகள் இருந்தன.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வீடியோவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சல்மான் அகா அவுட் ஆன விரக்தியில் தான் பாட்டிலை வீசினார். எங்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே போட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
பாபர் அசாம் குறித்து கூறியதாவது:-
பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை என்றும், அவர் இன்னிங்ஸை முடித்துக் கொடுக்கும் சிறந்த வீரர் அல்ல என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
- மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.
திருச்சி:
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது. இதில் வழக்கம்போல் தனித்த அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார். ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் தலைவர்களின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு சரியாக மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான மேடை 200 அடி நீளம், 64 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள், தமிழுக்காக போராடியர்கள் என மொத்தம் 570 தலைவர்களின் பதாகைகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்த 47 ஏக்கரில் பிரமாண்ட பார்க்கிங் வசதி, 38 மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியாக அமர இருக்கைகளுடன் கேபின்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அமர தனி கேபின், வெளிநாட்டவர்கள் அமர தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.
ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் பறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் அவரது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.
நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரை ஆற்றுகிறார். அப்போது பிரம்மாண்ட மேடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கும் தகவலையும் வெளியிடுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 சதவீத வாக்குகளை காரைக்குடி அவருக்கு பெற்றுத்தந்தது. ஆகவே இந்த முறை காரைக்குடியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என அவர் திட்டமிட்டு அங்கு களம் காண்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து தனக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காண்பித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் அடுத்த பாய்ச்சலாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு அமையும் என்பதில் சீமான் உறுதியாக உள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார்.
- சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
- மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.
சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.
அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.
மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.
தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர்.
- ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை.
சென்னை:
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்து எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை" என்றார்.
தற்போது ஜெம்மா அட்கின்சன், பிரபல நடனக் கலைஞர் கோர்கா மார்க்வெஸ் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மியா மற்றும் தியாகோ என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.
- அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (வயது 51). இவர் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உஷாவுக்கு, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய நாளில் இருந்து வயிற்று வலி இருந்தது. பல ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குறையவில்லை. அதே சமயத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
ஆண்டு கணக்கில் தொடர்ந்து வலி மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.
இதனால் பயந்து போன அவர் சிறுநீரக மருத்துவரை பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது.
பெண்ணின் வயிற்றில் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பெண் எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்
அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர். பிறகு வயிற்றில் உள்ள கத்தரிக் கோலை எடுத்து விடலாம். இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறி அனுப்பியுள்ளனர்.
அதன்பிறகு நடந்த விசாரணையில், அதே ஆஸ்பத்திரியில் கடந்த 2021-ம் ஆண்டு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் அலட்சிய சிகிச்சை விஷயம் பூதாகரமானது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற விரும்பவில்லை. கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து துணை தலைவர் தொபியாஸ் கேட்டு கொண்டார். அதற்கு தேவையான உதவிகளை செய்வதாக வேணுகோபால் எம்.பி.யும் உறுதியளித்து உள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியின் அலட்சிய அறுவை சிகிச்சையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.






